Tuesday, October 7, 2008

வேறன்ன, "சார்ல்ஸ்டன்" தான்

பனையேறி பாட்டுக்கு "சார்ல்ஸ்டன்" பத்தி 10 - 12 போட்டோவ "பனைநில"த்துலபோட்டுடுங்கன்னுட்டாரு. நானும் தேடு தேடுன்னு தேடி ஒருவழியா கைக்கு அகப்பட்டத இங்க பதிய போரேன். படங்கள் நிறைய இருக்கு. நேரம் தான் இல்ல. பின்ன நேரம் கிடைக்கிறப்ப அத தனியா பதியிறேன்.

சம்டர் கோட்டை (fort sumter)
அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது பெரும் பங்காற்றியதாக் கருதப்படும் கோட்டை. சார்ல்ஸ்டன் முகத்துவாரத்தில் உள்ளது. படகில் தான் சென்று பார்க்கமுடியும்.



அன்னாசி நீருற்று மற்றும் பூங்கா (pineapple fountain)
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்த இடம். மாலைப் பொழுதைக் கழிக்க அருமையான இடம் இந்த நீருற்று


Y.S.S. யார்க் டவுன் (YSS yorktown)
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல். இன்று காட்சியகமாக உள்ளது. பார்க்கவேன்டிய இடங்களில் ஒன்று.

கடற்கரை
கடற்கரைகள் என்பது பொருத்தமாக இருக்கும். பாலி கடற்கரை (folly beach), அயில் ஆப் பால்ம் (isle of Palms) கடற்கரை, சுலைவன்ஸ் தீவு (Sullivan’s island) கடற்கரை ஆகியவை சார்ல்ஸ்டனுக்கு அருகில் உள்ளன. கடற்கரைகள் பற்றி நான் சொல்லவா வேண்டும்?

சார்ல்ஸ்டன் பேட்டரி (Charleston battery)
மாலை நடைப்பயிற்சிக்கு உகந்த இடம். சாலையின் இருபுறங்களிலும் பனைமரங்கள் அணிவகுத்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.

சூரிய உதயம் மற்றும் மறைவு

படகுத்துறை

குதிரை வண்டி சவாரி

புதுப்பாலம்

சில இடங்களப் பத்தி ஏற்கனவே படங்களோட பதிஞ்சிருகோம். கொஞ்சம் உள்ள நொழஞ்சி தான் பாருங்களேன்.


- மாயோன்

எங்கள் பாட்டு ஆசிரியையின் பயணக் குறிப்பு

முன்னுரை:
அமெரிக்கவாழ் தமிழர்களின் வீட்டுக்கு இந்தியாவிலிருந்து உறவினர்கள், குறிப்பாக பணி ஓய்வு பெற்ற பெற்றோர்கள், வருவது வழக்கம். இவர்கள் பெரும்பாலான நேரத்தைத் தங்கள் குடும்பத்துடனேயே கழிக்கிறார்கள். மகனோ மகளோ வேலைக்குப் போன பிறகு பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். சிலருக்கு நன்றாகப் பாடத் தெரியும், சிலருக்கு எழுதத் தெரியும், சிலருக்கு ஓவியம் வரும். சிலர் அருமையாகப் பேசுவார்கள். இப்படியாக. ஆனால் அவர்களது தமிழறிவையும் திறமையையும் பெரிதாக யாரும் பயன்படுத்திக் கொள்வார்களா என்பது ஐயமே. எங்கள் தமிழ்ச் சங்கத்தில், இவ்வாறு பயணத்தில் வரும் பெற்றோர்களையும் மற்றவர்களையும் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயல்கிறோம். பல நேரங்களில் நல்ல பலன் கிடைக்கிறது. விருந்தினர்களுக்குப் பொழுது போவதுடன், ஒரு நல்ல உதவியைச் செய்தோம் என்ற நிறைவும் கிடைக்கிறது. எங்களுக்கோ அரிய செல்வங்கள் வந்து சேர்கின்றன!

இந்த வகையில், ஒரு ஆராய்ச்சிப் பயிற்சிக்காக இந்தியாவிலிருந்து இங்கே ஓராண்டுக்கு வந்திருக்கும் திருமதி கீதா சூரியகுமார் அவர்களது அனுபவம் கீழே:

"புதுடில்லியில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் நான், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு வருடப் பயிற்சிக்காக சார்ல்ஸ்டனுக்கு வந்தேன். புது நாடு, புது விதமான மக்கள், புதிய வேலையிடம் என மிகவும் பயந்தேன். ஆனால் இங்கு வந்தால் ஒரே தமிழ் மயமாக இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகத்தில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கம், என்னை அவர்களது தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்குப் பாட்டு கற்றுக் கொடுக்க வாய்ப்பளித்தார்கள். நானே ஒரு சுமார் பாடகிதான். அதிலும் நான் பாட்டுப் பாடக் கற்றுக் கொண்டது சுமார் 20 வருடங்களுக்கு முன்பு! எனக்குச் சிறிது வியப்பாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் சொல்லிக் கொடுத்துதான் பார்ப்போமே என்று மூன்று மாதங்களுக்கு முன்பு, வாரம் ஒரு முறை என்று வாரயிறுதியில் வகுப்பெடுக்க ஆரம்பித்தேன். ஐந்திலிருந்து ஒன்பது வயது வரையில் உள்ள ஆறு சிறுவர், சிறுமியர் வகுப்பில் இருந்தார்கள். ஆங்கிலம் பேசும் சமூகச் சூழலில் இருந்தும் இவர்கள் தமிழ் கற்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலும் கர்நாடக இசையும், திருக்குறளும் அவர்களுக்கு நான் சொல்லித் தரப் போகிறேன், எழுந்து "it's boring" என்று வகுப்பிலிருந்து ஓடப் போகிறார்கள் என நினைத்தேன். ஆனால், இந்தச் சிறுவர் சிறுமியரோ மிகவும் அழகாகப் பாடக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இவர்களது பெற்றோர்களின் உழைப்புக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. வாரா வாரம் வகுப்பில் நான் சொல்லித் தரும் சரளி வரிசை மற்றும் திருக்குறள்களை, என் கணினியில் ஒலிப்பதிவு செய்து அவர்களது பெற்றோர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகிறேன். அதனால் பிள்ளைகள் வீட்டிலும் பாடிப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பிள்ளைகளின் ஆர்வம், பாட்டுப் படிக்கும் விதம் என்னை மிகவும் வியக்க வைத்தது. பிள்ளைகள் அனைவரும் அருமையாகப் பாடுகிறார்கள். அவர்களைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த வகுப்பெடுக்கும் வலையில் சிக்கியதால், நானும் திருக்குறளைக் கற்றுக் கொண்டு பாட வேண்டியதாகிவிட்டது. டெல்லியிலேயே பிறந்து வளர்ந்த தமிழச்சியான எனக்கு இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு என் அமெரிக்கப் பயணத்தில் கிடைத்தது மிக அபூர்வம்தான். என் குடும்பத்தைப் பிரிந்து நான் தனியாக இருப்பது மிகக் கடினமாக இருந்தாலும், வகுப்பு நடத்தும்போது குழந்தைகளோடு செலவிடும் மதிப்புமிக்க கணங்கள் எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகின்றன. அவர்களின் சிரிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம், பேச்சு, எவற்றைச் சொல்வது, குழந்தைகளின் உலகமே ஒரு சொர்க்கம்தான். இந்தச் சின்ன வயதில் இந்தப் பிள்ளைகள் இவ்வளவு ஈடுபாட்டுடன், கடின உழைப்பும் திறமையும் கொண்டு இருக்கிறார்கள். இவர்களது திறன்களையெல்லாம் வெளிக் கொணர்வது பெற்றோர்களின் கைகளில்தான் இருக்கிறது. இன்னும் ஆறேழு மாதங்களில் நான் டெல்லிக்குத் திரும்பிவிடுவேன். ஆனால் இவர்களோடு நான் செலவிடும் இந்த இன்பமான நாட்களை நான் ஒரு போது மறக்கவியலாது.

அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் திருக்குறள்களையும், அவற்றின் பொருளையும் என்னால் படிக்க முடிகிறது. திருக்குறள் எத்தனை அருமையான நூல் என்று வியக்கிறேன். இந்த மிகச் சிறந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த பனைநிலத் தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அமெரிக்கப் பயணத்தினால் என் தமிழ் ஆர்வமும், பாட்டுப் பயிற்சியும் மிகவும் கூடிவிட்டது. டெல்லிக்குத் திரும்பியவுடன் அங்கும் இதனைப் போன்ற பயிற்சியையும், கற்றுக் கொடுப்பதையும் செய்யவேண்டும் என்ற ஊக்கம் பிறக்கிறது."

எழுதியவர் - கீதா சூரியகுமார்
தட்டச்சு உதவி - பனையேறி

Monday, October 6, 2008

நாங்க யாரு!

எல்லோருக்கும் வணக்கமுங்க!
தனியொரு ஆளா நின்னு பல நட்சத்திரங்க பட்டையைக் கிளப்பிக்கிட்டிருக்க இந்த இடத்துல, இந்த வாரம் நாங்க ஒரு கூட்டுக் கச்சேரி நடத்தப் போறோம். நாங்க எல்லாரும்னா யாரு? எங்க தமிழ்ச் சங்கம்தான். பனைநிலத் தமிழ்ச் சங்கம் (பநிதச). இது என்னடா கேள்விப்படாத சங்கமா இருக்கேன்னு பாக்குறீங்களா? இது அமெரிக்காவுல இருக்க, தென் கரோலின மாநிலத்துல, சார்ல்ஸ்டன் அப்படிங்கற இடத்துல இருக்க தமிழ்ச் சங்கம். எங்க மாநிலத்துக்கு Palmetto State அப்படின்னு பேரு. ஏன்னா இங்க பனைமரம் மாதிரியா இருக்க ஒரு மரம் இருக்கும். அதுக்கு Palm அப்படின்னுதான் பேரு. அதனாலதான் பனைநிலம் அப்படின்னு வச்சோம். சங்கம் ஆரம்பிக்கிறப்ப இருந்தது என்னவோ மொத்தம் 30-40 பேருதான். இப்ப எங்க ஊரைச் சுத்தி ஒரு 100 தமிழ்க் குடும்பங்கள் இருக்கு.

எங்கள் சங்கத்தில் பல மதத்தினரும், பல நாட்டினரும், பல மொழி பேசும் இனத்தவரும் தமிழ் மொழியின் மேலுள்ள பற்றினால் கூடியிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் எங்களது பெரிய நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள், இன்னொன்று கோடை விழா. இவை தவிர சிறு சிறு நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஒழுங்கு செய்யப்படுவதோடு, மக்களும் ஆங்காங்கே குழுக்களாகப் பயணம் செய்வதும், விருந்துண்பதும், வேலை செய்வதுமாகக் களிக்கின்றோம். இவ்வாரத்தில் எங்களது ஊரைப் பற்றியும், சங்க நடவடிக்கைகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் எவ்வளவோ தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ்ச்சங்கத்துக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனாலும் வேற்று மண்ணில் தமிழைக் காப்பதும், நம் இளையர்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் அனைத்து சங்கங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு பெரும்பணி. அனைத்து சங்கங்களும் தொடர்பற்று இருக்கும்போது ஒருவரது பிரச்சினை இன்னொருவருக்குத் தெரியாமல் போகும். ஆனால் இன்றைய இணைய உலகில், அனைத்துச் சங்கங்களும் ஒன்றோடொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் செயற்திட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பது எங்களது கருத்து.

எங்க ஊர் அழகான ஊர். ரொம்ப நட்பான ஊர் அப்படின்னு பல முறை பேர் வாங்கியிருக்கு. ஊரைச் சுத்தி வித விதமான கடற்கரைகள். ஊருக்குள்ள நிறைய பூங்காக்கள், குளங்கள், ஆற்றங்கரைகள். சுற்றுலாதான் எங்க ஊரோட பெரிய வருமானம். அந்தக் காலத்துல நிறைய பண்ணைகள் (பஞ்சு, நெல்) இருந்துச்சு. அடிமைத் தொழிலாளர்களை வைத்துப் பராமரிக்கப்பட்ட பண்ணைகளை இன்று கண்காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். ஆண்டு முழுவதும் எங்காவது ஏதாவது விழா நடந்துகொண்டே இருக்கும். பிக்கலோ ஸ்பொலெட்டோ (Piccolo Spoleto), புகழ்பெற்ற மகளிர் டென்னிஸ் (Family Circle Cup) போட்டிகளும் இவற்றில் அடக்கம். நாங்க வெளியூருக்குப் போகும்போதெல்லாம் அங்கிருக்கும் யாராவது எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கும்போது, நாங்கள் சார்ல்ஸ்டன் என்றால், அவர்கள் வாவ்வ்! அழகான ஊராச்சே என்பார்கள்! ஆமாம், அவ்வளவு அருமையான ஊராக்கும் எங்கள் ஊர்! ஆமா, நீங்கள் எப்போது வருகிறீர்கள்?! ஆனா என்ன, அப்பப்ப கொஞ்சம் புயல் அடிக்கும், சூறாவளி வரும். அப்பதான் கொஞ்சம் கடற்கரையைவிட்டுத் தள்ளி வரணும். ஆனா அந்த அமளியையும் நாங்க கொண்டாடுவோம்ங்கறது உங்களுக்குத் தெரியலன்னா முந்தைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க!

எங்கள் ஊருக்கு வரும் நண்பர்கள் ஏதேனும் உதவி, விபரங்கள் வேண்டுமெனில் எங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

எழுதியவர் - பனையேறி