Saturday, June 14, 2008

திரிசங்கு சொர்க்கம்ன்னா என்னான்னு தெரியுங்களா?

திரிசங்கு சொர்க்கம்ன்னா என்னான்னு தெரியுங்களா மஹாசனங்களே!

எங்கள மாதிரி ஆராய்ச்சிசாலைகளில் வேலை பார்க்கிறவங்களைக் கேட்டா தெரியும். வெள்ளிக்கிழமைகளில் ஆராய்ச்சின்ற பேர்ல எதையும் பண்ணாம வரப்போற வாரக்கடைசி விடுமுறையை எப்பிடிக்கழிக்கலாம்னு நினைச்சி பொழுதப்போக்கிக்கிட்டே.....அப்பிடியே ஆனந்தவிகடன், குமுதம், தினமலர், தமிழ்மணம், தட்ஸ்தமிழ் கொஞ்சம்.....பிறகு ஒபாமா, மெக்கெய்ன், தக்காளிக்காய்ச்சல், புளிக்காய்ச்சல் கொஞ்சம்னு இதர சல்லி விசயங்களை அக்குவேறா ஆணிவேறா பிச்சி ஆராய்ஞ்சி ....அப்பிடியே சாயங்காலம் வர்ற வரைக்கும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னுட்டு இருக்கறது........இதத்தான் வேலையும் பார்க்காம, நிம்மதியாவும் இருக்காம....ரெண்டுக்கும் இடையில இருக்கிற திரிசங்கு சொர்ர்கம்னு சொல்றது.

சரி என்னய்யா விசயம்னு கேக்கிறீங்களா....இப்படித்தான் இந்த வார வெள்ளிக்கிழமையையும் அப்படியே ஒப்பேத்திரலாம், பிறகு இறகுப்பந்து

விளையாட்டுல போய் சேர்ந்துக்கலாம்னு கணக்கு போட்டுக்கிட்டிருன்தேன். திடீர்னு பார்த்தால் கணினியில் ஒரு மின்னஞ்சல்...

வேற யாரு...வழக்கம்போல நம்ம பனையேறி தான். ஆகா வழக்கம்போல பெட்னா, கோடைவிழா அது இதுன்னுட்டு இப்பவும் ஏதோ அனுப்பிட்டாரய்யா...அனுப்பிட்டாருன்னு! திறந்தா........அதில ஆச்சரியம்.

இசைக்கச்சேரியோட அழைப்பிதழ். அதுல இன்னொரு ஆச்சர்யம், இலவசம் வேற.

ஆஹா. ஏதாவது மொக்கை கச்சேரியா இருந்தாலும் போய் பொழுதப்போக்கிறவேண்டியது தான் நினைச்சிக்கிட்டே, யாருன்னு பார்த்தா.....அட லால்குடி கிருஷ்ணன். சாட்சாத் லால்குடி ஜெயராமனோட் இசையுலக வாரிசு. இவரோட அப்பா லால்குடி ஜெயராமன், சங்கீத ஜாம்பவான்களான அரியங்குடி இராமனுஜ ஐயர், செம்பை, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜிஎன் பாலசுப்ரமணியன், மஹாராஜபுரம் சந்தானம், சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு வயலினாலேயே உயிர் கொடுத்தவர். அவருடைய தில்லானா, வருணங்களையும் அதோட நெளிவு சுளிவுகளையும் மெய் மறந்து கேட்கலாம். இவரோட தாத்தா ஒண்ணும் லேசுப்பட்டவரில்ல, விஆர். கோபால ஐயர் தான்.




அவரோட சிதார் வாசிக்கறவரு கெளரவ் மசும்தார். முன்ன பின்ன தெரியாத ஆளுதான். வலப்பதிவுகள்ல போய் பார்த்தப்பறம் தெரிஞ்சது அவரும் பெத்த பிஸ்த்துன்னு. மேற்கத்திய இசையுலகின் மிக உயர்ந்த பரிசான கிராம்மி விருதிற்கே பரிந்துரை செய்யப்பட்டவரு. அவரோட குரு வேற யாருமில்ல பண்டிட் ரவிசங்கர்தான். இவங்கள சார்லச்டன் கல்லூரியின் இசைத்துறை விருதுத்தொகை கொடுத்து வரவழச்சிருக்குன்னு ஒரு நண்பர் சொல்லி தெரிஞ்சது.

மக்கா, இன்னைக்கி இசை விருந்துதான். பண்ணாத வேலைகள அப்படியே வச்சிட்டு ஆராய்ச்சிசாலையை விட்டு கிளம்பியாச்சு. வூட்டுக்காரம்மா வேற கர்னாடக இசைக்கச்சேரிக்கு மேற்கத்திய உடை வேணாம்னு ஒரே வம்பு. அப்பத்தான அத சாக்கா வச்சிட்டு அவுக பட்டுப்புடைவயில வரலாமில்லையா. வழக்கம்போல மறுபேச்சு ஏதும் பேசாம உத்தரவு அவுக கிட்ட வாங்கிட்டு இனியன் வீட்டுக்கு போனேன். வேட்டி சட்டைக்கு மாறத்தான்.

நம்ம சங்கீதத்தில ஞானசூன்யமா இருந்தாலும் என்னதான் இருக்கும்னு ஒரு ஆர்வம். அந்தக்காலத்தில ஊர்ல வெட்டியா இருந்தப்ப மார்கழி மாசக் கச்சேரியில் போய் கலந்துக்க முடியல்ல. இந்த ஏழு கழுத வயசுல ஒரு வாய்ப்பு. புகுந்துறவேண்டியதுதான்.

ஏகக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளக்காரங்கதான். இந்த ஊர்ல சங்கீதத்த படிக்கறவங்க விசயத்தோட வந்திருப்பாங்க. அந்தப்பக்கம் பார்த்தா, பனைநிலமக்கள் தியேட்டர்ல படம் பார்க்கிற மாதிரி பந்தோபஸ்துக்களோட குழந்தை குட்டிகளோட வந்திருந்தாங்க.



கச்சேரிய சொன்ன நேரத்துக்கு சரியா ஏழு மணிக்கு ஆரம்பிச்சுட்டாங்க. லால்குடி கிருஷ்ணன் மற்றும் மசும்தார் நடுவில, மிருதங்கம் மற்றும் தபேலா பக்கவாத்தியக்காரங்க அவங்க இருபக்கமும். லால்குடி ஒரு குழந்தையை தடவிக்குடுக்கிற மாதிரி வயலினை மெதுவா தடவிக்கொடுத்து வாசிக்க ஆரம்பிச்சு, குழைஞ்சு அப்படியே உச்சத்துக்கு நம்மள கொண்டு போய்ட்டாரு. சிதார்ல மசும்தார் நம்ம நாடி நரம்பெல்லாம் உசுப்பி விட்ட மாதிரி
லால்குடிக்கு சரிக்கு சரியா இழஞ்சாரு. மத்தபடி என்ன சுருதி என்ன ராகம் என்ன தாளம் எதுவும் புரியல்ல. அடுத்தது ஜகல்பந்தி மாதிரியான கச்சேரி, பாட்டுக்கு பாட்டு போட்டிக்கு போட்டி மாதிரி தாளத்துக்கு தாளம் சுருதிக்கு சுருதி மாறி மாறி வாசிச்சு அப்படியே ஒண்ணா சேர்ந்து முடிச்சாங்க.


இடையில இடைவெளிவேற. பலகாரங்கள் மற்றும் குளிர்பானகள் சனார்ததனன் கோவில் அன்பர்கள் அன்பளிப்பாக அள்ளித்தந்தார்கள்.

அதன் பின்னால சிந்துபைரவியில கச்சேரியைக் களை கட்டினாங்க. வயலின் சிதார் ரெண்டுலயும் ராகம் குழைவா ப்ரவாகமா உருகி ஓடிச்சு. கடைசியா மகாத்மா காந்திக்கு பிடித்த வைஷ்ணவ ஜனதோ பாடலோட கச்சேரிய முடிச்சப்ப நம்ம சனங்களோட் கைத்தட்டல் அடங்க ரொம்ப நேரமாயிடுச்சி. ஸ்டேன்டிங் ஓவேஷன் அப்படின்னு ஆங்கிலத்தில சொல்வாங்களே, அரங்கத்தில அனைவரும் எழுந்து நின்னு கைத்தட்டுறதத்தான், அப்படிதான் நம்ம மக்கள் வரவேற்றாங்க. அதப்பார்த்து அந்தக்கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு மறுபடியும் ஒரு சின்ன ராகத்தை எடுத்து விட்டாங்க. மொத்தத்தில இரண்டு மணி நேர இசைப்பயணம் நம்மள மெய்யுருக வச்சிருச்சு.




நம்ம மாதிரி சங்கீத ஞானசூன்யங்கள் தெரிஞ்சு தெரியாம, புரிஞ்சு புரியாம இருந்தாலும் சங்கீதத்தில் மயங்கிடறோம் இலலையா. அது ஒருவகையான
சொர்க்கம்! திரிசங்கு சொர்க்கம்!!




இந்தப்படத்தில் இவர் இருப்பதும் இன்னொரு வகையான சொர்க்கம். (இசைக்கடலில் மூழ்கித்திளைக்கும் ஒரு கலாரசிகர்)

--------------------------------------


கந்தன் - வள்ளி

---------------------------------------

Wednesday, April 2, 2008

திருவிழாக் கூட்டம்


வசந்த காலம் வந்தாச்சு. வாசமல்லி பூத்தாச்சு. குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குப் போயிறுக்காங்க. அதனால பொண்டாட்டிய மட்டும் தனியா வெளிய கூட்டிட்டு போலாமேன்னு-பூக்கள் நிறைந்த ஹேம்டன் பூங்காவுக்கு போனேன். அவளுக்கு சிறிது நேரம் கார் ஓட்டக் சொல்லிக் கொடுத்துட்டு, போதுமென்ற அளவுக்கு பூக்கள படம் எடுத்துக்கிட்டு கிளம்புறப்ப, அந்த பகுதியில அளவுக்கு அதிகமான கூட்டம்.


வெள்ளிக்கிழமையும் அதுவுமா எங்க இம்மா ஜனங்க படை எடுத்து போறாங்க? கோயிலுக்கா? கச்சேரிக்கா? என வியந்தேன். சர், புர் ன்னு அங்கங்கே பிளஷர் வண்டிங்க ( அதாங்க, காரு). அவங்கவங்க கருப்பு கண்ணாடி மாட்டிக்கிட்டு, தஸ், புஸ் னு - இங்கிலீசு பேசிகிட்டு, அரைக்கால் சட்டை மாட்டிக்கிட்டு, ஆம்பள பொம்பள வித்தியாசம் தெரியாம எங்கப்பா போறீங்கனு கேக்கப்போனா - அவுக சொன்னது நமக்கு சுத்தமா வெளங்கலீங்க. சரி, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமாத்தான் இருக்கும்னு யூகிச்சு, நானும் அந்த அலங்காரம் பண்ண பிளஷர் வண்டிய தேடிப் போனேன்.

அங்கப் பாத்தா பட்டை, பட்டையா கவசம் மாதிரி சட்டை போட்ட வெள்ளைக் கார துரைங்க, ஒரே மாதிரி தலைல தொப்பி மாட்டிக்கிட்டு, அவசர அவசரமா நடந்துக்கிட்டு இருந்தாங்க. சரிதான், நமக்கு இங்கே வேலை இருக்காப்ல தெரியுதுன்னு - கொழாய் சைஸ் லென்ஸ் பொறுத்திய காமிராவை தட்டி எழுப்பி, தோள்ள மாட்டிக்கிட்டு குஷியா நடந்தேன். வழக்கம் போல முகம் சுளிச்சா என் பொஞ்சாதி. அவள கொஞ்சம் தாஜா பண்ணி, கூட்டம் போற தெசையில கூட்டிக்கிட்டு, வெவரமா ஒரு கல்லூரி மாணவி கிட்ட விசாரிக்கையில் - வெள்ளிக் கிழமைகளில், மாலையில் - சிட்டாடல் கல்லூரி வளாகத்திலுள்ள புல்வெளியில் இராணுவ பயிற்சி மாணவர்களின் அணிவகுப்பை காணவரும் பொதுமக்களின் கூட்டம் தான் அதுன்னு புரிஞ்சது.

கிரிக்கெட் ஆட்டம் பாக்கப்போற ஜனங்க மாதிரி மக்கள் இருக்கைகளில் இடம் பிடித்தனர். ஒலிப்பெருக்கிகள் அமைதியா இருக்கச் சொல்லி மக்களை கெஞ்சின. இன்னும் கொஞ்ச நேரத்துல அணிவகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதும், ஒரே நிசப்தம். உயரப் பறந்தது கோடு மற்றும் நட்சத்திரம் போட்ட பளீச் கொடி. அதன் இருபுறமும் தலா 25,25 கொடிகள், மொத்தம் 50 மாநிலக் கொடிகள் காற்றில் அசைந்தாடின. அவற்றின் முன்பு பயமுறுத்தும் பீரங்கி வண்டிகள்.

1992-ல் ஆஷ்லி நதிக்கரையில் 26 கட்டிடங்கள் கொண்டு கட்டப்பட்ட இக்கல்லூரியில் சுமார் 1900 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். முதன்முதலில் 1846-ம் ஆண்டு, மேரியான் சதுக்கத்தில் துவங்கப்பட்டது இக்கல்லூரி. பின்னரே இது தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. பகல் நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் இராணுவ பயிற்சி பெறும் இம்மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கணிதம், அறிவியல்,தொழிற்கல்வி, தொழில்நிர்வாகம் மற்றும் பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

கீழ்படிதல், கட்டுப்பாடு, காலம் தவறாமை, தலைமையேற்றல், ஒற்றுமை ஆகிய அடிப்படை பழக்கங்களோடு கல்வி பயின்று வெளியேறும் இப்பட்டதாரிகள் தம் வாழ்வில் மட்டுமின்றி, பிறர் வாழ்விலும் செம்மை தேடித் தருகின்றனர். முன்னாள் மாணவர்கள் பலர் இராணுவம், மருத்துவம், வான்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் அன்றும், இன்றும் சிறப்புற்று விளங்கி வருகின்றனர். கல்லூரி விடுதியில் கட்டாயமாக தங்கிப் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு ஒற்றுமை - மிகவும் வலியுறுத்தப்படும் விஷயமாதலால் இவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப் படுவதில்லை.

இம்மா விஷயமிருக்கா நம்மூர் காலேஜிலன்னு வாய் பொளந்து கேட்டுக்கிட்டு தலைய ஆட்டினோம். அம்மாணவி நகர்ந்து சென்றதும் படம் பிடிக்கத் தோதாக மேல்வரிசையில் இடம் பிடித்து, இருக்கை மீது ஏறி நின்று கொண்டேன்.

நாலா பக்கங்களிலும் இருந்து சீருடை அணிந்த மாணவர்கள் அணிவகுத்து வந்தனர். பரந்து விரிந்த அந்த கல்லூரி மைதானத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த அணிவகுப்பு கண்கொள்ளா காட்சிங்க. மேளம் அடிச்சிக்கிட்டு, பீ பீ ஊதிக்கிட்டு, பாவாடை மாதிரி சீருடை அணிஞ்ச மாணவர்கள் கோழி தல மாதிரி டோப்பா வச்சிக்கிட்டு போனது, பாக்க ரொம்ப வேடிக்கையா இருந்தது.

அது நடந்து முடிஞ்ச அப்புறம், எல்லாரும் எழுந்து நின்னு, தொப்பிய கழட்டிட்டு இந்த நாட்டின் தேசிய கீதம் பாடி கொடிய எறக்குனாங்க. போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், அணிவகுத்த மாணவர்களுக்கும் மரியாதை செலுத்துற மாதிரி, இராணுவ விமானங்கள் அந்த மைதானத்திற்கு மேலே பறந்து வானசாகசம் செய்தன. எதிர்பாரா நேரத்துல டொம் டொம்னு, காத பொளக்குறாப்ல பீரங்கி வெடிச்சது. உண்மையிலேயே போர்க் களத்துல இருக்கறாப்ல இருந்தது.




அணிவகுத்து வந்தவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் மக்கள் கூட்டம் கரவொலி எழுப்பியது. அவர்களுக்கு தேசப்பற்று மிக்க பொதுமக்கள் சிலர் வணக்கம் செலுத்தினர். கூட்டம் சற்றே கலைய ஆரம்பித்தது. நாங்களும் சில விஷயங்களைத் தெரிந்துகொண்ட திருப்தியில் கிளம்பத் தயாராகி கடிகாரத்தைப் பார்க்கையில் தான் கொழந்தைங்க ஞாபகம் வந்தது. சட்டு புட்டுனு கார்ல ஏறி உட்கார்ந்தோம் அவர்களை கூட்டிவர.

நாம வேலை செய்யற எடத்துக்கு ஓரிரு மைல் தூரத்துல தான் இருக்கு. நல்ல இடம். சிறு குழந்தைகளைக் கூட்டிட்டுப்போனா வசதிப்படாது. எனவே, பெரியவங்க மற்றும் ஓரளவு விவரம் தெரிஞ்ச குழந்தைங்க பாக்க வேண்டிய நிகழ்ச்சி - இந்த அணிவகுப்பு.


மாயோன் ராதை

Wednesday, March 19, 2008

கொலம்பியா (தென் கரோலைனா) மிருகக் காட்சி சாலை

கொலம்பியா (தென் கரோலைனா) நகரத்தின் நெரிசலைத் தாண்டி, அழகிய அமைதியான நதிக்கரை ஓரத்தில் ஒரு மிருகக் காட்சி சாலை. அருகிலுள்ள புகை வண்டிப் பாதையில், மிருகங்களுக்கு நம்மால் ஏன் தொல்லை என்பது போல எப்போதாவது வந்து செல்லும் ஓரிரு ரயில்கள். பள்ளிகளுக்கு விடுமுறை காலமாகையால் இலக்கணம் முறிந்த ஆங்கிலத்தில் கொஞ்சி வழிந்த மழலைக் கூட்டம். காற்றாடிகள், காகிதக் கொடிகள், பலூன்கள், பட்டங்கள் என குழந்தைகளை மகிழ்விக்க நிறைய பொருட்கள் - அந்த அழகான காட்சியகத்தின் வாயிலில்.

நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே செல்கையில் அனைவரின் நடையையும் நாட்டியமாக்கிக் கொண்டிருந்த இனிய இசை. செங்கல் நிறத்தில் ஒற்றைக் காலில் தவம் செய்து கொண்டிருந்த பிளமிங்கோக்கள் நிறைந்த சிறு குளம், குழந்தைகளையும் ஒற்றைக் காலில் நிற்கத் தூண்டியது. மறுபுறம், வண்ண மீன்கள் நிறைந்த குளம். எதிரே குளு குளு வசதி கொண்ட பறவைகள் காட்சியறை. பென்குயின்கள் அழகு நடை போட்டு பார்வையாளர்களை அசத்தின. பலவகை வண்ணப் பறவைகள் கண்களுக்கு விருந்தாயின.

அடுத்து "சீ-லயன்" (sea lion) எனப்படும் ஒருவகை கடல் வாழ் மிருகத்திற்கு உணவு ஊட்டப்பட்ட காட்சிக்கு சென்றோம். மீன்களை முக்கிய உணவாக உண்ணும் இவை தம் தோலுக்குக் கீழே பல கிலோக்கள் எடையுள்ள கொழுப்பை சேகரித்து வைத்துக்கொண்டு உணவு கிடைக்காத நேரங்களில் இக்கொழுப்பை உடலின் பல முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் திறன் வாய்ந்தவை. நாய்களை பழக்குவது போல அவற்றை நீரில் பல சாகசங்கள் புரிய பழக்கி உள்ளனர்.

அங்கிருந்து வெளியேறி மனிதக் குரங்குகளைக் காணச் சென்றோம். கண்ணாடிக்குள் இருந்து, இயற்கைச் சூழலில் உலவிக் கொண்டிருந்த கொரில்லாக்களை ரசித்துக்கொண்டிருக்கையில்-அவை பல குரங்கு சாகசங்கள் செய்தன. முகக்தைக் கோணலாக்கி அவை சிரித்ததைப் பார்த்தால் நாங்கள் சிறை வைக்கப்பட்டதாக நினைத்தனவோ என்னவோ? புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மனது வராமல் அங்கிருந்து நகர்ந்தோம்.

நொடோகி காட்சியறையில் பல்வகை குரங்குகள், சிறு பூனை வகைகள், எலிகள் போன்ற சிறு மிருகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இருட்டான குகை போன்ற இந்த காட்சியறையை கடந்து வெளியே வந்ததும்- கஜமுகர்கள் எங்களை வரவேற்றனர். ஆப்பிரிகாவிலிருந்து குடியேறி இருந்தன அந்த யானைக் கூட்டம். நடையிலேயே குழந்தைகளின் மதிப்பை சம்பாதித்து விட்ட யானைகளை கண் கொட்டாமல், ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் எங்கள் 2 வயது மகன். கால் வலிக்க நின்று கொண்டிருக்கையில் மழை தூர ஆரம்பித்தது. மழை வலுக்கும் நேரத்திலும் எங்களை வேறிடத்தில் ஒதுங்க அனுமதிக்கவில்லை அவன். யானைகளிடமிருந்து மனதை திசை திருப்ப அவ்வளவு பாடுபட்டோம்.

அடுத்து உலகின் மிக உயரமான பாலூட்டிகள்- ஆம் - ஒட்டகச்சிவிங்கிகளை பார்த்துவிட்டு, வரிக்குதிரை, ஆஸ்டிரிச் ஆகியவற்றை பார்த்து படம்பிடித்துக்கொண்டு, ஊர்வன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றோம். வழியில் ஆமை, முதலை வகைகள் தென்பட்டன. இன்னொறு சுவையான விஷயம்- அமெரிக்க குழந்தைகள் ஆடு, மாடு, பன்றி, கோழி, குதிரை, முயல் ஆகிய மிருகங்களை பண்ணைகளில் மட்டுமே காண வாய்ப்பு கிடைக்கிறது. இம்மிருகங்கள் மற்றும் "லாமா" என்ற மிருகம் ஒன்றையும் அங்கே காட்சிக்கு வைத்திருந்தனர். இயந்திரங்கள் மூலம் பால் கரக்கும் முறைகள், தேனீக்கள் பராமரிப்பு, முட்டைகளிலிருந்து நவீன முறையில் குஞ்சு பொறித்தல் ஆகியவை வரைபடங்கள் மூலம் இப்பண்ணையில் சித்தரிக்கப்பட்டிருந்தன.

அடுத்து அவனது கவனத்தை ஈர்த்தன-மதிய உணவு உண்ட களைப்பில் இளைப்பாறத் தயாரான புலி, சிங்கம் மற்றும் ஹயீனா ஆகியவை. புலி, சிங்கங்களின் கம்பீர நடையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி, அடுத்து ஹயீனாக்களையும் குரங்குகளையும் காணச்சென்றோம். உலக மிருகங்களில் மிக வலிமையான தாடை ஹயீனாக்களுக்குத்தான். புட்டியில் எடுத்துச்சென்ற குளிர்ந்த-கொத்தமல்லி மிதக்கும்-மோர் குடித்துவிட்டு, மெரி-கோ-ரவுண்டு எனப்படும் விளையாட்டு வண்டியில் எங்கள் பிள்ளையோடு நாங்களும் பிள்ளையாக சுற்றி மகிழ்ந்தோம். இதிலும் யானை இருக்கை தான் எங்கள் பிள்ளைக்குப் பிடித்த இடம்.

கிளி மொழி பேசிக்கொஞ்சிய தத்தைகளுக்கு தேன் ஊட்ட சீட்டு ஒன்று வாங்கிக்கொண்டோம். கிளிகளுக்கு, அங்கு வழங்கப்படும் தேன் மட்டுமே ஊட்ட அனுமதிக்கப்படுகிறது. கீச், கீச், கீச் என்று எங்கு பார்த்தாலும் ஒரே சத்தம் அந்த கிளி காட்சியகத்தில். உள்ளே நுழையும்போதே தலையிலும், தோளிலும், கையிலும் வந்து உட்கார்ந்து நம்மை வரவேற்கின்றன. தேன் உண்ட திருப்தியில் கீச், கீச் என்று கத்தித் திரிந்தன.

யூக்கலிப்டஸ் இலைகளைத் தின்று, நிறைய தூங்கும் கோலாக் கரடிகளின் களையான முகங்களை படம் பிடித்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும் கங்காருக்களை காணச்சென்றோம். களைப்பாகப் படுத்திருந்தன அவை.

காட்சியகத்தின் மூலிகைப் பண்ணைக்கு கால் வலிக்காமல் செல்ல இருக்கை வசதிகள் கொண்ட தொடர்வண்டி ஒன்றும் இயக்கப்படுகிறது. மூலிகைப் பண்ணைக்கு அருகில் பறவைகள் பல பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூந்தோட்டம் ஒன்றும் மக்களை மகிழ்விக்கின்றது.

இம்மிருகக் காட்சியகத்தின் முக்கிய அம்சங்கள்- குழந்தைகளுக்கு மிருகங்களைப் பற்றிய முப்பரிமான படங்கள் மற்றும் பல விளக்கப் படங்கள், குறிப்பிட்ட நேரங்களுக்கு திரையிடப்படுகின்றன. ஹாலோவீன், புதுவருட நாள் போன்ற சமயங்களில் சிறுவர்களுக்கான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பூந்தோட்டம், குழந்தைகளுக்கு விளையாட்டு வசதிகள், சிற்றுண்டி சாலை, குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், சுத்தமான கழிவறைகள், நன்கு பராமரிக்கப்பட்ட சூழல் ஆகிய முக்கிய தேவைகள் இங்கே காணப்படுவதாலும், குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமாக அமைந்திருப்பதாலும் இங்கே ஆண்டு முழுவதும் மக்கள் கூட்டம் வழிகிறது.

மாயோன் ராதை

Sunday, March 2, 2008

"தமிழர் அதிகாரம்" - இராம.கி அவர்களின் உரை குறித்து.

தாயே தமிழே! தரணி போற்றும்எம் அமுதே!
நீயே நினைவே! எம்மில் நீங்கா உயிரே!
போற்றி! போற்றி!

தென் கரோலினாவின் பனைநிலத் தமிழ்ச் சங்கம் பல நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது என்பதைக் கேட்டறிந்திருந்தாலும், இம்முறைதான் அந்நிக்ழ்ச்சிகளில் ஒன்றான "சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் ஐயா இராம.கி அவர்கள் உரையாற்றியதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐயா இராமகி அவர்கள் தெளிவாகவும், பொறுமையாகவும், அழகாகவும் முக்கியமாக எடுத்துகாட்டுக்களுடனும் நம் மூத்த சமூகத்தின் காலக் கண்ணாடி, ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றன சிலப்பதிகரத்தின் வஞ்சிக் காண்டத்தை விளக்கலானார்.

அவரின் தொடக்கமே எனக்கு ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது, ஆமாம் எதைச் சொல்ல வேண்டுமோ அதை அவர்கள் உடனடியாகச் சொல்லவில்லை. மாறாக, கதையின் "பின் புலம் " என்று நம் நாட்டின் வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள தொடர்புகள், அதாவது தரைவழித் தொடர்புகள் என்னென்ன? எந்தெந்த அரசு இருந்தது, பழங்காலத்துப் பட்டிணங்கள் தற்போது எவ்வாறெல்லாம் மாறியிருக்கின்றன, பழைய துறைமுகங்கள், அவற்றைச் சார்ந்தாற் போல புதிய துறைமுகங்கள் என்று இராம.கி அவர்கள் நம் இந்திய தேசத்தின் வரலாறுகளை விளக்கியபோது நான் வியந்து போனேன். என்னைப் போலவே அனைவரும் வியந்திருப்பர் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு புகழ் பெற்ற வரலற்று ஆசிரியர் கூட இப்படி விளக்க முடியுமா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த வரலாற்றை அவர் விளக்க மிக முக்கியமான காரணம் இந்தியாவின் முதல் பேரரசான மகதத்தைப் பற்றிப் பேசத்தான். ஏன் என்றால் செங்குட்டுவன் வடக்கே சென்று பேரரசைத் தாக்கி அழித்ததெல்லாம் கட்டுக்கதை, உண்மையில்லை அவன் அங்கே செல்வதற்கே வழியில்லை என்று பரவலாக சொல்லப்படுகின்ற கருத்தை தகர்த்தெறிவதற்காகத்தான், அந்தப் பின்புல வரலாற்றை விளக்கினார். அதில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இருந்த தரைவழித் தொடர்பை விளக்கி இதன் மூலமாகத்தான் வடக்கே சென்று வீரவாகை சூடினான், இது தமிழனின் வீரம், கதையல்ல என்றார். மேலும் அவன் வீழ்த்தியது இந்திய தேசத்தின் முதல் பேரரசான மகதத்தைத் தான் என்பதற்கும் ஆதாரபூர்வமாக அந்த காப்பியத்தில் இருந்தே எடுத்துக் கூறினார்.

இவர் சொல்லவந்தது சிலப்பதிகாரத்தை என்றாலும், சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்ற தமிழனின் வீரம் வெறும் வார்த்தையல்ல, உண்மை என்பதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும் என்பதாகவே பட்டது. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் ஆழப்பதியச் செய்யும் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டியது. ஆகையால்தான் இந்த கட்டுரைக்கு தலைப்பு சிலப்பதிகாரம் என்றில்லாமல் தமிழனின் வீரத்தைப் பற்றி இருந்ததால் "தமிழர் அதிகாரம்" என்று சூட்டியுள்ளேன்.

மேலும் சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் திறனாய்வு செய்து தமிழரின் வாழ்வு, வழக்கங்கள்,வழிபாடு, பண்பாடு என்று ஒளிந்து கிடக்கும் பல்வேறு கருத்துக்களை வெளிக் கொணர்ந்து அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் அவரின் நிலைப்பாடு, நமக்கெல்லாம் ஒரு வெகுமதி.

சிலப்பதிகாரத்தை வேறு கோணத்தில் திசை திருப்பி அழைத்து சென்ற ஐயா இராமகி அவர்களின் பணி தொடர்ந்து இந்த தமிழ் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் அவாவாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், சிலப்பதிகாரத்தில் முரண்பாடுகள் என்று நீங்கள் விவாதித்த சில கருத்துகளை மென்மேலும் ஆராய்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் பல எழுத வேண்டும்.

சிலப்பதிகாரத்தை நோக்கி எங்களை நடை பழகச் செய்த ஐயா இராம.கி அவர்களுக்கு எங்கள் தமிழ்ச் சங்கம் சார்பாக நன்றிகள் பல!


எழுதியவர்: பூதூர் சம்பந்தனார்.

Wednesday, February 27, 2008

நம்ம ஆட்டத்தைப் பாருங்க!!




போன மாசம் நம்ம தமிழ்ச் சங்கத்துல பொங்கல் விழா நடந்துச்சு. Youtubeல கிடைச்ச படங்களைப் பார்த்து நாங்க போட்ட ஆட்டம் இது. ஒன்னு ஒயிலாட்டம் (மாதிரி), இன்னொன்னு கோலாட்டம் (மாதிரி). இதைப் பாத்துட்டு இன்னும் நிறைய கத்துக்கிட்டு ஒழுங்கா ஆடணும்னு ஒரு வெறி வந்திருச்சு. அதோட விளைவா இந்த வேண்டுகோள்: உங்களுக்கு தேவராட்டம், கும்மி (அய்யோ சாமிகளா வலைப்பதிவு கும்மி வேண்டாம்!) இதுக்கான வீடியோ (+ஆடியோ) எங்கே கிடைக்கும்னு விபரம் தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்! நன்றி, நன்றி!

இப்ப எங்களோட ஆட்டம் (பாத்துட்டு youtubeலேருந்து கெளம்பி அப்படியே போயிடாம, இங்க வந்து எங்க கேள்விக்கு விடை சொல்லிட்டுப் போங்க:))

எழுதியவர்: பனையேறி

Sunday, January 27, 2008

பனைநிலம் தமிழ்ச்சங்கப்பொங்கல் விழா2008

.

இடம் - தமிழ் மண்ணிலிருந்து கிட்டத்தட்ட பல்லாயிரகணக்கான காத தூரங்கள்.

நேரம் - அந்தி மயங்கும் மாலை நேரம்

வானிலை - அங்கிங்கெனாதபடி எங்கு காணினும் மழைத்தாண்டவம், ஊனிலிருந்து உயிரையே பிரித்தெடுக்கும் ஊழிக்காற்று வேறு...சொல்லவா வேண்டும். வெளியில் ஒரு வாகன, பாமர நடமாட்டம் கூட இல்லை. கல்கியின் வந்தியத்தேவனே இங்கு வந்திருந்தாலும் அவனையும் புரவியையும் களைத்து துவண்டிடச்செய்யும் வானிலை.

ஆனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் என்ன ஆயகலைகளின் அணிவகுப்பு, தமிழ்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு.

வாங்க இந்த சார்லஸ்டன் மாணவர் மைய அரங்கில் என்ன நடக்கிறதென்னு பார்த்துடலாம்.

நம்ம இப்போ பார்க்கிறது கனவா...நனவா....அட நம்ம சார்லஸ்டன் தமிழ்மக்கள் பொங்கல் விழாவை இவ்வளவு சீரும் சிறப்புமா கொண்டாடிக்கிட்டு இருக்காங்களே. இத்தனை அருமையான நிகழ்ச்சிகளா.

விழா இன்னும் கொஞ்ச நேரத்தில ஆரம்பமாகப்போகுது....அப்படியே ஒரு மூலையில நம்ம உக்கார்ந்துக்கலாம், என்ன சொல்றீங்க.

விழா ஏற்பாடுகளை மக்கள் பம்பரமா சுறுசுறுப்பா ஓடியாடி செய்றாங்க. அங்க பாருங்க சுறுசுறுப்பா ஒலிபெருக்கி மற்றும் மின்னணுக்கருவிகள் அத்தனையிலயும் புகுந்து கலக்கு கலக்கிட்டு இருக்காரே அவருதான் நம்ம தண்டபாணி சார். அவருக்கு மேல புகுந்து வேல பார்க்கிறது வசந்த். அந்தபக்கம் பார்த்தா குழந்தைகளையும் பெரியமனுசங்களையும் சமாளிச்சிக்கிட்டு விழா ஏற்பாடுகளையும் கவனிச்சிக்கிட்டு இருக்காரே அவர்தான் சுந்தர். அட வழக்கம் போல வேலைகளை இழுத்து போட்டு செய்றாரே அதுதான் சந்தோஷ். பாபா சூர்யன், சிவா கோஷ்டிகள் வேறு பறந்து பறந்து வேலை செய்றத பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கு. ஆகா வந்திட்டாரய்யா வந்திட்டாரு. காமிராவும் கையுமா...இல்ல இல்ல காமிராவே கையா வந்திட்டாரு காமிரா-கண்ணன்.

அந்த பக்கம் பார்த்தா, பெண்கள் குழு கோலாட்டம் ஒத்திகை விறுவிறுன்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த பக்கம் பாருங்க ஒயிலாட்டம், நாடகம் ஒத்திகை பலமா போய்க்கிட்டு இருக்கு. அடடா...என்ன விறுவிறுப்பு. இன்னும் கொஞ்சம் மக்கள் உணவு ஏற்பாடுகளில் மூழ்கி இருக்காங்க. விழா நேரம் நெருங்க நெருங்க ஒரே பரபரப்பு. இங்க பார்க்கிறப்ப அத்தனை பேரும் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சேலையில இருக்கிறது கண் கொள்ளாக்காட்சி.

இதோ ஆரம்பிச்சிடுச்சு. தொகுப்பாளினி வினு அவங்க வந்து தமிழத்தாய் வாழ்த்துக்களோட ஆரம்பிக்க அழைப்பு விடுக்கிறாங்க. அதுக்கு அடுத்தபடியா வினு அவங்க நிகழ்ச்சி என்னன்னு வழக்கம் போல அறிவிப்பாங்கன்னு பார்த்தா, ஆனந்தியைப்பார்த்து ஏதோ உங்ககிட்ட சந்தேகம் இருக்கிறமாதிரி தெரியுது என்னன்னு வந்து முன்னாடி சொல்லுங்கன்னு கூப்பிட்டு கேட்க, அதுக்கு ஆனந்தி, பொங்கல் மற்றும் தமிழக கலாச்சாரத் தொடர்பு பற்றி கேள்வியா கேட்க, அதுக்கு வினு அழகா பதில் சொன்ன அப்புறம் தான் தெரிஞ்சது அது திட்டமிட்டு செய்திருக்கிற தொகுப்பு நிகழ்ச்சின்னு. வழக்கம் போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காம, பொங்கல் பத்தி சிறு சிறு தகவல்துளிகளை சுவராஷ்யமா செந்தில் எழுதி அதை வினு-ஆனந்தி தொகுப்பாளினிகள் அருமையா வழங்கிருக்காங்கன்னு தெரிந்தது. அதுவும் பொங்கலுக்கு முதல் நாள்தான் செந்தில் போய் வினு மற்றும் ஆனந்தி வடைசுடும் கோலாகலமான நிகழ்ச்சிக்கு மத்தியில் வசனம் சொல்லி அவங்க அதை தூக்கம் கெட்டு விடிய விடிய பரிட்சை மனப்பாடம் செய்தாங்கன்னு சுவையான கிசுகிசு வேற நமக்கு கிடைத்தது.



விழாவை இரத்தின சுருக்கமாகவே இப்போ சொல்றேன். சுந்தர் முன்னுரையுடன் தொடங்கி வைக்கிறார். அதற்கு அடுத்த படியாக குழந்தைகளின் வண்ணத்துப்பூச்சி என்கிற பாடல்...அதுக்கு குழந்தைகள் ஆகாஷ், அமிர்தா, மாசிலன், சிபி, கோகுல், அஸ்ரிதா, கண்கவரும் வண்ணங்களாக அணிவகுத்து பாடல்பாடி மகிழ்வித்தார்கள். அடுத்தபடியாக, குழந்தைகள் சிட்டா சிட்டாங்குருவின்ற பாட்டுக்கு அருமையாக நடித்து கலக்குனாங்க.


அதற்கு அடுத்தபடியாக ஹரி அவங்க அம்மா லட்சுமி அவர்கள் அயல்நாடுகளில் தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பற்றி அழகாக பேசினார். பலகுரல் வித்தைகள் நிகழ்ச்சியில் யுவ்ராஜ் பலவித்தைகளை காட்டி பேசி மகிழ்வித்தார். பல திரைப்பட நடிகர்களின் குரல்களை நம்ம கண்.... இல்ல இல்ல காதுக்குள்ளேயே கொண்டு வந்து நிறுத்தினார். அதற்கடுத்தபடியாக மாறுவேடப்போட்டி. குழந்தைகள் பாரதியார், ஒளவியார், உழவர், தமிழ் ஆசிரியை, வீரபாண்டிய கட்டபொம்மன், திருவள்ளுவர் போன்று முறையே கோகுல், அஸ்ரிதா, மாசிலன், அமிர்தா, சிபி, ஆகாஷ் அவர்கள் அருமையாக வேடம் அணிந்து வசனங்களையே சிறப்பாக பேசி நடித்து பார்வையாளர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டனர்.


அதற்கு அடுத்தபடியாக ஒரு நாடகம். செந்தில் இயக்கி அதில் இறைவனாக செந்திலும், தருமியாக யுவ்ராஜ், நக்கீரராக சந்தோஷ், மற்றும் மன்னராக குமரனும் நடித்திருந்தார்கள். அது நவீன திருவிளையாடற்புராணத்தின் அடிப்படையில் நகைச்சுவை கலந்து மஹாராணியின் முதுமை தீர்க்கும் மருந்துக்கு இறைவன் ச்டெம் செல் அறிவியல் ஆராய்ச்சி ரகசியத்தினை தருமி போன்ற மாணவரிடம் கொடுத்து ஒரு மில்லியன் டாலர்கள் பரிசினை பெற உதவுவதாகவும், அதை நக்கீரன் தடுப்பதாகவும், இறைவன் வந்து வாதிடுவதாகவும் இருந்தது. நாடகம் வித்தியாசமாக, நகைச்சுவையாக, அம்சமாக இருந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.


இப்போ வர்றாங்களே அதுதான் மகளிர் கோலாட்ட குழு. அடடடா...ஒன்றா இரண்டா...20 நாள் வீட்டு வேலைகளை விட்டு, வினுவோட ஒருங்கிணைப்பில் கோலாட்ட குச்சிகளுக்கு பதிலா, சமையல் கரண்டிகளை வச்சு எல்லாரையும் பயமுறுத்தி ஒத்திகை மேல ஒத்திகை பார்த்திருக்காங்க. அந்த ஆடல் குழுவில் வினு, ஆனந்தி, வளர், சுபத்ரா, யசோதா, திருமகள், கலைவாணி, ஜானகி, உமா, வித்யா கலந்து அமர்க்களப்படுத்திட்டாங்க. அதுவும், ஆடல் நிகழ்ச்சியை நீங்க, உற்றுப்பாருங்க அவங்களோட கடின உழைப்பு ஒவ்வொரு அசைவிலயும் தெரியுதில்லையா. ஆட்டத்தை பார்த்துகிட்டே இருந்ததில இந்த ஆறு நிமிடங்கள் போனதே தெரியல்ல.


அடுத்து என்னன்னு பார்ப்போமா. ஆஹா, வந்திட்டாங்கய்யா...வந்திட்டாங்க. வேட்டியும் சட்டையுமா, வெள்ளையும், சொள்ளையுமா நம்ம ஆடவர் அணிதான். இந்த அணியிலிருந்த சுந்தர், சூர்யன், வசந்த், குமரன், யுவ்ராஜ், சந்தோஷ் மற்றும் செந்தில் அத்தனை பேரும் கலக்கிட்டாங்க. சுந்தரோட விருப்பத்தில் உருவான இந்த ஒயிலாட்டம் ரொம்ப அருமையாக, கண்ணைக்கவரும் வண்ணமா இருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆர்ப்பரிப்பு, உற்சாகம், கைத்தட்டல் ஆட்டம் முடிஞ்சும் ரெம்ப நேரமாக குறையவேயில்லை.

அதற்கடுத்தாற்போல பாம்பே விஸ்வநாத், ஸ்ரீதர், கார்த்திகா அவர்களின் பாடல்கள், பொங்கலில் சேர்க்கப்பட்ட முந்திரியாக சுவைத்தது.

பிறகு கலை நிகழ்ச்சிகள் பல வரிசையில் இருந்தும் நேரம் இல்லாததனால் அப்பிடியே உணவுக்கு அழைப்பு வந்திடுச்சு. ஆஹா உணவுப்பந்தல்ல பலவகை அறுசுவை உணவுகள். அது வித்யா, திருமகள், சுபத்ரா, வளர்மதி அவங்களோட ஏற்பாட்டில் அனைத்து மக்களும் அவங்கவங்களோட கைவரிசையைக்காட்டியிருந்தனர். உணவிற்கு பிறகு குழந்தைகளுக்கு பரிசுப்பொருள்கள் மற்றும் பனை நிலம் உறுப்பினர் அட்டைகளை கணேஷ் வழங்கினார்.

அதக்கப்புறமும் விழா அரங்கில குழந்தைகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு புகுந்து விளையாண்டுகிட்டிருந்தாங்க.

ஆக மொத்தத்தில இந்த பனை நிலம் 2008 பொங்கல் விழா ஒரு கலாட்டா கல்யாணம். அழகாக பரிமாறப்பட்ட அறுசுவை உணவு. நம்ம மக்கள் நெஞ்சில் என்றென்றும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் கலைக்காவியம்.



.கந்தன். கருத்து உதவி - இனியன்
படங்கள் - மாயோன்
.......................................................................

Saturday, January 26, 2008

பனையேறிக்கும் வீட்டுக்காரப் பெருச்சாளிக்கும் நடக்கும் தகராறு - பாகம் 1

நீங்க வாடகை வீட்டுல குடியிருக்கீங்களா? அப்படின்னா கண்டிப்பா இதப் படிங்க.
இந்தப் பனையேறியும் குடியும் குடித்தனமுமா இத்தனை காலமும் ஊரு ஊரா ஓடி ஓடி வாடகை வீட்டுலதான் இருந்துட்டு இப்பதான் எலி வளைன்னாலும் தனி வளைன்னு ஒரு வீடு வாங்கி ஒதுங்கியிருக்கான். ஆனாலும் பாருங்க, இந்த வாடகை வீட்டுக்காரப் பெருச்சாளி நம்மள தொரத்து தொரத்துன்னு தொரத்துது. வெவரமா சொல்லுறேன்.

போன அக்டோபர் மாசம் வாடகை வீட்டக் காலி பண்ணிட்டு, புது வீட்டுக்கு வந்தோம். ஆனா காலி பண்ணுற நேரத்துல பாருங்க, அந்த வீட்டுக்காரங்ய மேல ஏதோ ஒரு நம்பிக்கையில, சாவிய மட்டும் குடுத்துப்புட்டு, பாத்துக்கங்கய்யான்னு கெளம்பிட்டோம். நாங்க என்ன பண்ணியிருக்கனுமுன்னா, அவனுகளக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போயி, இந்தா இதான் நீ குடுத்த வீடு, எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்க அப்படின்னு அவங்கிட்ட காட்டிட்டுப் போயிருக்கனும். இதுக்கு முன்னாடி இருந்த அத்தனை வீட்டுலயும் அப்படிச் செய்யல. அவனுகளும் செக்குரிட்டி டெபாசிட்டை முழுங்காம, அல்லது கொஞ்சமா முழுங்கிட்டு குடுத்துட்டாங்ய. ஆனா இந்தப் பயலுக இருக்காங்ய பாருங்க. செக்குரிட்டி டெபாசிட்டு 150 டாலர் திரும்பி வரவே இல்ல. அவனுககிட்டேருந்து ஒரு கடுதாசியும் வரல. நாங்களும் நெனச்சுப் பாக்குறதோட சரி. கேக்காமலே விட்டுக்கிட்டு சோம்பேறியாத் திரிஞ்சோமா. ஒரு நா வருது ஒரு கடுதாசி. எங்கேருந்து? கலெக்ஷன் ஏஜென்சிகிட்டேருந்து. அவன் சொல்லுறான், நீ உன்னோட ஊட்டுக்காரனுக்கு 945 டாலர் கட்டுடான்னு. எதுக்குடான்னு கூப்பிட்டுக் கேட்டா, உன்னோட கார்ப்பெட்டை மாத்துனோம். அதுக்குத்தான். அடப் பாவிகளா. பனையேறிக்கு அச்சு அச்சுன்னு தும்முதேன்னு சொல்லி ரெண்டு நாளக்கி ஒருக்கா அந்த வேக்யூம் க்ளீனரைப் போட்டு நா, எம் பொண்டாட்டி, புள்ளகுட்டி எல்லாரும் சர்ர்ர்புர்ர்ர்ருன்னு உறிஞ்சி உறிஞ்சி தூசி தூசியாக் குப்பையில கொட்டுனது என்ன? கார்ப்பெட்டுல சோறு போட்டு சாப்பிட முடியாட்டியும், கீழ விழுகுற ரஸ்க்கை டவுசர்ல தொடச்சுட்டு சாப்புர்ற அளவுக்கு சுத்தமா வச்சிருந்தமுய்யா. என்ன செய்வான் பனையேறி? ஒடனே எகிறிக் குதிச்சான். எங்க? ஊட்டுக்குள்ளதான் குதிக்கிறதெல்லாமுன்னு ஊட்டுக்காரம்மா சொல்லும். அதெல்லாம் கண்டுக்கிடாதீங்க. நானும் கலெக்ஷன் காரன்கிட்ட எகிறிப் பாத்தேன், கேட்டுப் பாத்தேன், கெஞ்சிப் பாத்தேன், சாபம் கூட வுட்டேன். ம்கூம், எந்த ஊரு வந்து பாருன்னுட்டானே. மசியல. சரி போனா போற, இன்னக்கே கட்டுனா 20% கழிச்சுத் தாறேன்னான். அடப் பாவிகளா, ஏண்டா பனையேறியோட காசுக்கு இப்படிப் பறக்குறீங்கன்னு நானும், சரிடா யோசிச்சுச் சொல்லுறேன்னு சொல்லிட்டு இன்று போய் நாளை பா அப்படின்னு அனுப்பிட்டேன். எனக்குத் தாங்கல. இருந்த பழைய ஒயினையெல்லாம் ஊத்திக் குடிச்சும் கோவம் அடங்கல.

சரின்னு நெட்டுல கொடஞ்சு, நம்ம சுத்துப்பட்டுப் பயக்களைக் கேட்டுப் பாத்தேன். ஒரு அம்மா சொல்லிச்சு, நீ வாதாடிக்கு ஒரு மணி நேரத்துக்கு 200 டாலர் குடுக்கணும். அதுக்குப் பேசாம அவன் கேக்குறதக் கட்டிரலாம்னுச்சு. இன்னொருத்தரு சொன்னாரு நீ Small Claims Court, Better Business Bureauக்குப் போன்னு. இந்த Small Claims Court இருக்கு பாருங்க, அதுல நீங்க யாருகிட்ட இருந்தாச்சும் காசு வாங்கணும்னாதான் புகார் குடுக்கலாம், அதுவும் $7500க்குள்ள இருக்கணும். எவனாச்சும் உங்க காசைப் புடுங்க வந்தா நீங்க அங்க போக முடியாது.

நெட்டுல போட்டிருக்கான், வெவரமா, அதாவது வீட்டுக்காரங்க உங்களோட செக்குரிட்டியை வீடு காலி பண்ணின, அல்லது நீங்க கேட்ட 30 நாளைக்குள்ள குடுத்துரனும்னு. ஆனா எங்காளு என்ன பண்ணினான்? கிட்டத்தட்ட 3 மாசம் கழிச்சு கலெக்ஷன் ஏஜென்சி மூலமா கடுதாசி அனுப்புறான். அ...இன்னொன்னும் மறந்துட்டனே, 150 டாலரா வாங்குன செக்குரிட்டியை, அந்தா பெரிய செக்கை, மறைச்சுட்டு, 100 டாலருதான்னு சொல்லுறான் அந்தப் புண்ணாக்கு. பாத்தா South Carolina Department of Consumer Affairs லயும் புகார் செய்யலாமுன்னு பாத்தேன். நம்ம நண்பர் ஒருத்தரு சொன்னாரு இன்னொருத்தரும் அங்கதான் முந்தி ஒருக்க முறையிட்டு நீதி வாங்குனாருன்னு. ஒடனே அவங்களுக்கு இந்த மாதிரி, இன்ன வெவரம், இதான் நடந்துச்சுன்னு வெலாவரியா எழுதிப்புட்டு ஒக்காந்திருக்கேன். பதில் தெரியுறப்ப பாகம்-2 ஐப் போடுறேன்.

ஆனா ஒன்னு, வாடகை வீட்டுல இருக்குறவங்க அந்தந்த மாநிலத்து விதிமுறைகளை நல்லாப் படிச்சுக்கங்க (ஹி ஹி சொல்வது யார்க்கும் எளியவாம்). அல்லது சுருக்கமா சொல்லுறேன் கேட்டுக்கங்க,

கார்ப்பெட்டுக்கோ, சுவத்துக்கோ, சன்னலுக்கோ, இன்ன பிற வஸ்துக்களுக்கோ 'சாதாரணமா' நடக்குற தேய்மானத்துக்கு (normal wear and tear) நீங்க காசு கட்ட வேண்டியது இல்லை. புள்ளைக பெயிண்டைக் கரைச்சு கார்ப்பெட்டுல ஊத்துனாக்கூட அது 'சாதாரணம்' அப்படிங்கறாங்க.

வீடு எடுக்குறப்ப நல்லா உத்து உத்துப் பாருங்க, எதாச்சும் ஓட்டை ஒடைசல் இருந்தா எழுதி ரெண்டு பேரும் கையெழுத்துப் போட்டு வச்சுக்கங்க. அட நீங்களும் ஒங்க வீட்டுக்காரம்மா/ய்யா இல்லங்க, வீட்டு முதலாளியச் சொல்லுறேன்.

அதே மாதிரி வீட்டைக் காலி பண்ணுறப்போ அந்த ஆளுகளைக் கூட்டிட்டு வந்து காட்டுங்க. அப்பயும் ஒரு கையெழுத்தை வாங்கிக்கங்க.

எந்த வீட்டுக்காரனையும் நம்பாதீங்க, பூராப் பயலும் சமயம் கெடச்சா ஏய்ச்சுப்புடுவாங்ய.

மறக்காம செக்குரிட்டியக் குடுடா புண்ணாக்குன்னு கேளுங்க (ஆனா ஏடாகூடமாப் பேசிடாதீங்க, ஆமா). 30 நாளைக்குள்ள செக்கு உருளலைன்னா கூப்பிட்டுக் கேளுங்க. பனையேறியாட்டம் சோம்பேறியா இருந்துட்டு அப்புறமா குதிக்காதீங்க.

சரியா, அப்ப வர்ட்டா!