Sunday, September 21, 2008

நளபாகம்

ஹெய்தி, கெய்கோ தீவுகள், பஹாமாஸ் தீவுகள், மயாமி, ஜாக்சன்வில், சவானா, சார்ல்ஸ்டன் போன்ற கடலோர பிரதேசங்களுக்கான விசேஷ வானிலை அறிக்கை: அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இவ்விடங்களில் பலத்த, மிகபலத்த இடி மழை பெய்யக்கூடும். ம்ணிக்கு 20 முதல் 120 மைல் வேகத்தில் பலத்த காற்று, சூறாவளிக் காற்று (ஹரிக்கேன் ஹானா, Hannah) வீச வாய்ப்புள்ளதால், ஆராய்ச்சியாளர்கள் யாரும் ஆராய்ச்சி கூடத்திற்கு போகவேண்டாமென்றும், காற்று மழை ஆதலால் இல்லத்தரசிகள் யாரும் சமையலறைக்குள் சென்று சமையல் செய்து, தண்ணீரில் கை வைத்து ஜலதோஷம் பிடித்து அவதிப்பட வேண்டாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

இதக் கேட்டப்பறமும், யாரு போய் சமச்சு, சளி புடிச்சு கஷ்டப்ப டறதுனு பயந்து, கால மடக்கிட்டு சோபாவுல உட்கார்ந்து, மெல்ல புருஷங்காரங்களை கெளப்பிவிட்டு சமைக்கச் சொல்லி வலியுறித்தினோம். புருஷன் பொஞ்சாதிகளுக்கு நடுவே நடந்த இந்த உறையாடல்கள் தற்செயலா பெரியவர் (வாத்தியார்) காதுல விழுந்து விடவே, அவர் ஆண்கள உற்சாகப்படுத்தி, நம்பிக்கையூட்டி ஒருவழியாய் ஒத்துக்கொள்ள வைத்தார். பெரியவர் வார்த்தையை மதித்து, காளையர் கரண்டி தூக்கிவிட்டனர்.

தனியா நின்னாதன திண்டாட்டம். கும்பலோட கோவிந்தா போட்டா கஷ்டமென்னனு எல்லா ஆம்பளைங்களும் வேட்டிய வரிஞ்சி கட்டிக்கிட்டு, தலைல முண்டாசோட, தடதடனு, ஜேம்ஸ் தீவிலுள்ள அந்த ஆயிரம் சதுரடி அபார்ட்மெண்டில் ஆஜரானார்கள். இனியன் பட்டியல் போட, மாயோன் மறுநிமிடம் காய்கறிகளுடன் காணப்பட்டார். கூத்தும் கும்மாளமுமாய் அந்த ரயில்வே கம்பார்ட்மெண்ட் போன்ற அடுக்களைக்குள் ஆண் சாம்ராஜ்யம் அழகாக சமைத்தது. அட நம்புங்களேன். ……. ஆண்கள். ஆண்களேதான். நல்லா கண்ண கசக்கிகிட்டு பாருங்க. சனிக்கிழமை தூக்கத்த விட்டு பனிரெண்டு மணி மதிய நேரம் முழிச்சு பார்த்திருந்தாதன உங்களுக்குத் தெரிய............ போர்வைக்குளேந்து பூலோகத்துக்கு வாங்க.

பல்லு வெளக்கறவங்களுக்குத்தான் பருப்புப் பொடியோட சாப்பாடு. சுத்தமா குளிக்கிறவங்களுக்குத் தான் சூடான சூப், சில்லுனு சாலட். கண்டிப்பானார்கள் ஆண்கள் இந்த விஷயத்தில். இப்படி ஆண்கள் கண்டிப்பா சொல்லாட்டா பெண்கள் சுறுசுறுப்பா ஒன்றரை மணிக்கெல்லாம் எங்கேந்து பல்லு வெளக்குறது?

“குளிச்சு முழுவி, ….சீவி முடிச்சு, சிங்காரிச்சு,
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு,
பாத்திரத்த உருட்டும் புருஷங்காரன பாக்க வந்த பொண்டுகளே பசியும் எனக்கு தாங்கலியே,
பிஸ்கட் சாப்பிட்டா பத்தலியே”னு
வள்ளியும் நானும் புலம்பல் பாட்டு பாடவே, எல்லா பெண்களும் வந்தாதான் சாப்பாடுனு இனியன் கண்டிப்பா சொல்லிட்டாரு. சரிதான். இனியாளுக்காக இவர் காத்திருப்பதால் தான் அப்படிச் சொல்லியிருப்பாருன்னு, எங்களை நாங்களே சமாதானப் படுத்திக்கொண்டோம்.

திடீரென கும்முனு செண்ட் வாசம் பாலத்திலேந்து வந்தது. சரி. சரி. நம்ம பொண்டுக கோஷ்டி வர்ர காரு வீட்ட நெருங்குது. இன்னும் செத்த நாழியில வாசல் மணி அடிக்குமென தெரிஞ்சிகிட்டோம். (பெண்கள் வரும் பின்னே. செண்ட் வாசம் வரும் முன்னே). சொன்னபடியே வாசல் மணி அடித்தது. திறந்தேன். ஜிலுஜிலுன்னு ஜோராய் அலங்காரம் செய்துகொண்டு குழந்தைகளோடும், கைப்பைகளோடும் வந்து நின்ற தோழிகளை வரவேற்றேன்.

அப்பாடா, ஒரு வழியா எல்லாரும் வந்தாச்சு. இனியாவது சாப்பாடு கிடைக்கும்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன். சற்று நேரம் சுடிதார்கள், சேலைகள் யார் யார் எங்கெங்கேந்து வாங்கினாங்க, என்ன விலை, ரவிக்கை எங்கே தைத்தார்கள் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம். ரொம்ப முக்கியமான விஷயமாச்சே……..

"யூ டியூப் (you tube)"ல பாட்டு கேட்டோம். சீட்டு விளையாட்டு. சுவாரஸ்யமான சிறுவயது கதைகள் பேசியபடி கல்லாங்கா விளையாட்டு. நேரம் போய்க் கொண்டேயிருந்தது……. லேசாய் பசித்தது.

பலவித வாசனைகள் சமையலறையிலேந்து வந்தபடி இருந்தது. அறைத்தல், வதக்குதல், கிண்டுதல், கிளருதல், உருட்டுதல், உடைத்தல், வெடித்தல்..... அடாடா………. அப்படி என்னதான் சமைக்கிறாங்க ரெண்டு மணி நேரமா என வியந்தபடியே பெண்கள் கூட்டம் பெரியவரிடம் பசிக்குது, பசிக்குதுனு தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

ஆட்டத்தை முடித்துக் கொண்டு அமைதியா சாப்பிட தயார் ஆகுமாறு, பெரியவர் மணி அடித்து அறிவித்தார். ஆடிச் சோர்ந்த அம்மணிகளுக்கு ஆஹாவென்ற ருசியான ரசம். சுர்ரென்று நாக்கை சுண்டி உசுப்பும் சற்றே காரமான பருப்புப் பொடி சாதம் உருண்டைகளாக்கப்பட்டு தலா ஒரு உருண்டை அளிக்கப்பட்டது. கடித்துக்கொள்ள சாலட் மற்றும் அஸ்பாரகஸ். பலத்த உபச்சாரம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி. வெந்த அஸ்பாரகஸ் வேம்பின் தங்கச்சி போலும் என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டோம். தண்ணீர், கை துடைக்க தாள், பல் குத்த குச்சி முதற்கொண்டு கணவன்மார்கள் சகல சிஷ்ருஷைகளும் செய்தார்கள்.

ஹானா (Hannah) வந்தாலும் வந்தது. இவங்க ஜாதகத்திலேயே கிரகநிலை மாற்றம் எற்படுத்திடுச்சா? ……………….

எங்களுக்கு ஏதோ நல்ல நேரம அன்னிக்கு! எல்லா பணிவிடைகளும் செஞ்சாங்க. இனிமேல் தான் விருந்து.

முதலில் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் வேலுடையானின் கைவண்ணம். பின் பெரியவர் மணக்க மணக்க செய்த உருளை கிழங்கு பொரியல், தக்காளி போட்ட பருப்பு, டாக்டரம்மா வீட்டுக்காரர் கந்தன் செய்துவைத்த கடலை பருப்புக்குள் கண்சிமிட்டும் காலி பிளவர், வினோதனின் அஸ்பாரகஸ், இளவரசு மற்றும் ஷ்வா மாமாவின் சிறப்பான உதவி மற்றும் மேற்பார்வையில் அனைத்தும் அமர்க்களமாய் தயாராகி சாப்பாட்டு மேசையில் சுடச்சுட வந்து நின்றது. என் வீட்டுக்காரர் போட்டோ எடுத்ததோடு சரி.

கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பில் ஜிலுஜிலுத்த கொத்தமல்லி, கரிவேப்பில்லை மிதக்கும் நீர்மோர் சகிதம் பாஸ்மதி சோறு வடிக்கப்பட்டு நெய், அப்பளம், ஊறுகாயுடனும், உபசாரங்கள் பலவோடும் அறுசுவை அமுது படைத்த ஆம்படையான்கள் அனைவருக்கும் "முதல் ஆய்வர் (first author)" தகுதி கொடுத்து சிறப்பித்தோம்.

பூரித்துபோன புருஷன்மார்கள் எங்களுக்கு சமைக்கத்தெரியாதுன்னு நெனைச்சீங்களா, நீங்க என்ன சமைக்கிறது, எங்களாலயும் முடியும்னு நிரூபித்து காட்டினரே தவிர, இனி நாங்களே சமைக்கிறோம் என்று மட்டும் சொல்லாதது ஒன்றே குறையாக முடிந்தது மதிய உணவு.

மகிழ்ந்து போன மங்கையர் கூட்டம் மனமார்ந்த நன்றிகளுடன், அடுத்த முறை சமைக்க நேர்ந்தால் இன்னும் சிறப்பாய் சமைக்க ஆலோசனைகள் வழங்கியது.
மதிய உணவோடு மட்டும் நிறுத்தி விடாமல், பகல் தூக்கம் முடிந்து மாலையில் எழும் மனைவியருக்கு சுவையான ஸ்வீட், காரம், காபி வழங்கலாம் என்றும், பஜ்ஜி சொஜ்ஜி செய்தால் கூட போதுமென்றும், இரவில் அது இதுனு அலட்டிக்காம லைட்டா பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, மசாலா பாலோடு நிறுத்திக்கொண்டால் போதுமென்றும் ஆலோசனை வழங்கியது.

நிறைவாக அடுக்களைக்குள் புகுந்து அசத்திவிட்ட ஆண்களுக்கு நூற்றி ஒன்று மார்க்குகள் அளித்து தீபாவளிக்கு தம் செலவில் ஜிகுஜிகுவென்று மின்னும் நல்ல சட்டை வாங்கித்தரப்படும் என்றும் உறுதி அளிக்கபட்டது. அனைத்துக்கும் மேலாக “அசத்தல் புருஷன்” என்ற உயர்வான பட்டத்தையும் வழங்கி கௌரவப்படுத்தியது மாதர் சங்கம்.

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை.

- ராதை

படங்கள்: மாயோன்

Monday, June 30, 2008

எங்கள் கோடை விழா - ஒரு பார்வை

பனைநிலத்தில் நடக்கும் விழாக்களில் ஒன்று ஞாயிற்றைப் போற்றும் கோடை விழா. நேற்று ஞாயிற்றுக் கிழமையில்தான் நடந்தது. பக்கத்து ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு திருவிழாவுக்கு வருவதைப் போல அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து (சுமார் 300 மைல்களுக்கு அப்பாலிருந்தும்) பல நண்பர்கள் வந்திருந்தனர். நாயனம், தவில் பின்னணி இசையுடன், ஒரு அழகிய பூங்காவிலிருந்த அந்தப் பெருங்கூடாரம் களைகட்ட ஆரம்பித்தது. கூடாரம் என்றால் சுமார் 200 பேர் பயன்படுத்தக்கூடிய மரத்தினாலாகிய ஒரு கூடம், அதனுள்ளே நிறைய மேசைகளும், உட்காரும் பலகைகளும். சுற்றிலும் அடர்ந்த மரங்களும், சிள் வண்டுகள் பாடும் புதர்களும், சற்றே தொலைவில் பரந்த புல்வெளி. மனிதர்களைக் கண்ட ஆர்வத்தில் மொய்த்துக் கடித்த கொசுக்களை, கொசுவிரட்டி மருந்துகொண்டு நாங்கள் விரட்ட அவை அடுத்த கூடாரத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. ஒரு புறம் சிவபாரதி, சில்வஸ்டர், பாபா குழுவினர் சோளம், கோழி என்று பார்பிக்யு செய்ய, மறுபுறம் உணவுகளும், பானங்களும் வந்து சேர, இன்னொரு புறத்திலே ஓடி விளையாடிய குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. எங்களது கோடைவிழா என்பது வீரத்தைக் கொண்டாட, விளையாடிக் களிக்க, உடற்திறனை அறிய, புதியவற்றைக் கற்க எனக் கட்டமைக்கப்பட்டது. உட்கார்ந்து, நின்று, ஓடியாடி, வாயால் பேசி என அனைத்து வகையான விளையாட்டுக்களையும் முடிந்த அளவுக்கு விளையாடி மகிழ்ந்தனர். அமெரிக்காவில் இத்தனைத் தமிழ்க் கூட்டமா என்று புதியவர்கள் வியந்தனர். அடித்த வெய்யிலும் ஏனோ தமிழகத்தினை நினைவிற்குக் கொண்டுவந்து உடலிலும், உணர்விலும் ஒரு மகிழ்வினை ஏற்படுத்தியது. விடாய் தீர்க்க நற்பானங்களும், பசி தீர்க்க நல்லுணவுகளும், பேசிக் களிக்க நன்னண்பர்களுமாக அப்பூங்கா இனிமையால் செறிந்திருந்தது. ஒரு மரத்தின் வேருக்கருகே யாரோ மூவர் வரைந்த சில அழகான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. மாயோனது புகைப்படக் கருவி சுழன்று சுழன்று அழகையும், அசைவையும் தெவிட்டாது சேமித்துக் கொண்டிருந்தது.

மதியவுணவின் பின்னர் அமர்வு தொடங்கியது. பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் அன்றைய சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை வரவேற்று இளவரசன் பேசினார். பிறகு சுபவீ அவர்கள் "அறிவியல் யுகமும், அறிவியல் பார்வையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளர்களும், கணினித் துறை விற்பன்னர்களும் மிகுந்திருந்த அரங்கில் என்ன புதிதாகப் பேசிவிடப் போகிறேன் என்று ஆரம்பித்த சுபவீ சொன்னவை புதியவை. பழைய கதைகளிலிருந்து புதிய பார்வைகளை எடுத்துக் காட்டினார். பழைய நம்பிக்கைகளைப் புதிதாக அணுகுவதற்கு ஒரு சிறு திறப்பினை ஏற்படுத்தினார். பொருந்தாத பொருட்களைப் பிணைத்து, தொடர்புகளை ஆராய்ந்து, கேள்விகளைத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருப்பது அறிவியலுக்கும், மெய்ஞானத்துக்கும் மட்டுமில்லை, சமூக அறிவியலுக்கும் அத்தகைய அணுகுமுறை பொருந்தும் என்றார். இறை நம்பிக்கை, மத நம்பிக்கை எதுவாயினும் அது தனி நபர்களின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. அவ்வாறான நம்பிக்கைகள் உணர்வெல்லைகளைத் தாண்டி, சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தினை உணர்ந்துகொள்வதற்கு ஒரு சிறு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார். அவரது உரை சுமார் 40 நிமிடங்களே இருந்தாலும், ஏதோ சுருக்கமாக முடிந்துவிட்டதைப் போலிருந்தது. காலையிலிருந்து அடித்த வெய்யில் தணிந்து மேகம் கறுத்து மழை பொழிய ஆரம்பித்தது. கேள்வி நேரம் ஆரம்பித்தது. தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை, கடவுளுக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு, ஈழத்து மக்களின் போராட்டம், அகதிகளின் இன்னல்கள், பெண்கள் ஏன் ஆண்களை வாழ்நாள் முழுதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது, தமிழர்களின் அறிவியல் பார்வை எவ்வாறு இருக்கிறது, ஏன் இந்தியா ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இல்லை என்று பலதரப்பட்ட கேள்விகளைப் பலரும் முன் வைத்தனர். அவற்றுக்குப் பொறுமையாகவும், கனிவுடனும், அரசியல் நேர்மையுடனும் சுபவீ அளித்த விடைகள் பல புதிய பார்வைகளைத் தந்தன. மழை விடும் வரை சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்டது இவ்வுரையாடல். பிறகு நமது சித்திரைக் கருத்தரங்கில் பங்குகொண்டு அறிவியல், தொழில்நுட்பங்களைப் பற்றித் தமிழில் உரையாற்றியவர்களுக்குப் பரிசுகளும், குழந்தைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. குழந்தைகள் பாடல்களும், பெரியவர் பாடலொன்றும் இனிமையாயிருந்தன. உள்ளேயும் வெளியேயும் மழை பெய்து முடித்திருந்தது.

வெற்றுக் கேளிக்கையாக, வேடிக்கைக் கூத்தாக, கிச்சு கிச்சு மூட்டும் ஒரு கூட்டமாக இல்லாமல், அறிவினைத் தூண்டி, சமூக உணர்வினை எழுப்பி, அனைத்து மக்களின் சம வாழ்வினை நோக்கிய ஒரு பாதையை நமக்குக் காட்டிய ஒரு திருவிழாவாக எங்கள் கோடைவிழா அமைந்திருந்தது. எங்கள் நெஞ்சின் அனலை ஊதிவிட்டு, பெய்து முடித்த மழையில் தன்னைக் குளிர்வித்துக் கொண்டிருந்தது அந்த மாலை நேரத்துப் பனைநிலம்.

-எழுதியவர்: பனையேறி

Saturday, June 14, 2008

திரிசங்கு சொர்க்கம்ன்னா என்னான்னு தெரியுங்களா?

திரிசங்கு சொர்க்கம்ன்னா என்னான்னு தெரியுங்களா மஹாசனங்களே!

எங்கள மாதிரி ஆராய்ச்சிசாலைகளில் வேலை பார்க்கிறவங்களைக் கேட்டா தெரியும். வெள்ளிக்கிழமைகளில் ஆராய்ச்சின்ற பேர்ல எதையும் பண்ணாம வரப்போற வாரக்கடைசி விடுமுறையை எப்பிடிக்கழிக்கலாம்னு நினைச்சி பொழுதப்போக்கிக்கிட்டே.....அப்பிடியே ஆனந்தவிகடன், குமுதம், தினமலர், தமிழ்மணம், தட்ஸ்தமிழ் கொஞ்சம்.....பிறகு ஒபாமா, மெக்கெய்ன், தக்காளிக்காய்ச்சல், புளிக்காய்ச்சல் கொஞ்சம்னு இதர சல்லி விசயங்களை அக்குவேறா ஆணிவேறா பிச்சி ஆராய்ஞ்சி ....அப்பிடியே சாயங்காலம் வர்ற வரைக்கும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னுட்டு இருக்கறது........இதத்தான் வேலையும் பார்க்காம, நிம்மதியாவும் இருக்காம....ரெண்டுக்கும் இடையில இருக்கிற திரிசங்கு சொர்ர்கம்னு சொல்றது.

சரி என்னய்யா விசயம்னு கேக்கிறீங்களா....இப்படித்தான் இந்த வார வெள்ளிக்கிழமையையும் அப்படியே ஒப்பேத்திரலாம், பிறகு இறகுப்பந்து

விளையாட்டுல போய் சேர்ந்துக்கலாம்னு கணக்கு போட்டுக்கிட்டிருன்தேன். திடீர்னு பார்த்தால் கணினியில் ஒரு மின்னஞ்சல்...

வேற யாரு...வழக்கம்போல நம்ம பனையேறி தான். ஆகா வழக்கம்போல பெட்னா, கோடைவிழா அது இதுன்னுட்டு இப்பவும் ஏதோ அனுப்பிட்டாரய்யா...அனுப்பிட்டாருன்னு! திறந்தா........அதில ஆச்சரியம்.

இசைக்கச்சேரியோட அழைப்பிதழ். அதுல இன்னொரு ஆச்சர்யம், இலவசம் வேற.

ஆஹா. ஏதாவது மொக்கை கச்சேரியா இருந்தாலும் போய் பொழுதப்போக்கிறவேண்டியது தான் நினைச்சிக்கிட்டே, யாருன்னு பார்த்தா.....அட லால்குடி கிருஷ்ணன். சாட்சாத் லால்குடி ஜெயராமனோட் இசையுலக வாரிசு. இவரோட அப்பா லால்குடி ஜெயராமன், சங்கீத ஜாம்பவான்களான அரியங்குடி இராமனுஜ ஐயர், செம்பை, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜிஎன் பாலசுப்ரமணியன், மஹாராஜபுரம் சந்தானம், சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு வயலினாலேயே உயிர் கொடுத்தவர். அவருடைய தில்லானா, வருணங்களையும் அதோட நெளிவு சுளிவுகளையும் மெய் மறந்து கேட்கலாம். இவரோட தாத்தா ஒண்ணும் லேசுப்பட்டவரில்ல, விஆர். கோபால ஐயர் தான்.




அவரோட சிதார் வாசிக்கறவரு கெளரவ் மசும்தார். முன்ன பின்ன தெரியாத ஆளுதான். வலப்பதிவுகள்ல போய் பார்த்தப்பறம் தெரிஞ்சது அவரும் பெத்த பிஸ்த்துன்னு. மேற்கத்திய இசையுலகின் மிக உயர்ந்த பரிசான கிராம்மி விருதிற்கே பரிந்துரை செய்யப்பட்டவரு. அவரோட குரு வேற யாருமில்ல பண்டிட் ரவிசங்கர்தான். இவங்கள சார்லச்டன் கல்லூரியின் இசைத்துறை விருதுத்தொகை கொடுத்து வரவழச்சிருக்குன்னு ஒரு நண்பர் சொல்லி தெரிஞ்சது.

மக்கா, இன்னைக்கி இசை விருந்துதான். பண்ணாத வேலைகள அப்படியே வச்சிட்டு ஆராய்ச்சிசாலையை விட்டு கிளம்பியாச்சு. வூட்டுக்காரம்மா வேற கர்னாடக இசைக்கச்சேரிக்கு மேற்கத்திய உடை வேணாம்னு ஒரே வம்பு. அப்பத்தான அத சாக்கா வச்சிட்டு அவுக பட்டுப்புடைவயில வரலாமில்லையா. வழக்கம்போல மறுபேச்சு ஏதும் பேசாம உத்தரவு அவுக கிட்ட வாங்கிட்டு இனியன் வீட்டுக்கு போனேன். வேட்டி சட்டைக்கு மாறத்தான்.

நம்ம சங்கீதத்தில ஞானசூன்யமா இருந்தாலும் என்னதான் இருக்கும்னு ஒரு ஆர்வம். அந்தக்காலத்தில ஊர்ல வெட்டியா இருந்தப்ப மார்கழி மாசக் கச்சேரியில் போய் கலந்துக்க முடியல்ல. இந்த ஏழு கழுத வயசுல ஒரு வாய்ப்பு. புகுந்துறவேண்டியதுதான்.

ஏகக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளக்காரங்கதான். இந்த ஊர்ல சங்கீதத்த படிக்கறவங்க விசயத்தோட வந்திருப்பாங்க. அந்தப்பக்கம் பார்த்தா, பனைநிலமக்கள் தியேட்டர்ல படம் பார்க்கிற மாதிரி பந்தோபஸ்துக்களோட குழந்தை குட்டிகளோட வந்திருந்தாங்க.



கச்சேரிய சொன்ன நேரத்துக்கு சரியா ஏழு மணிக்கு ஆரம்பிச்சுட்டாங்க. லால்குடி கிருஷ்ணன் மற்றும் மசும்தார் நடுவில, மிருதங்கம் மற்றும் தபேலா பக்கவாத்தியக்காரங்க அவங்க இருபக்கமும். லால்குடி ஒரு குழந்தையை தடவிக்குடுக்கிற மாதிரி வயலினை மெதுவா தடவிக்கொடுத்து வாசிக்க ஆரம்பிச்சு, குழைஞ்சு அப்படியே உச்சத்துக்கு நம்மள கொண்டு போய்ட்டாரு. சிதார்ல மசும்தார் நம்ம நாடி நரம்பெல்லாம் உசுப்பி விட்ட மாதிரி
லால்குடிக்கு சரிக்கு சரியா இழஞ்சாரு. மத்தபடி என்ன சுருதி என்ன ராகம் என்ன தாளம் எதுவும் புரியல்ல. அடுத்தது ஜகல்பந்தி மாதிரியான கச்சேரி, பாட்டுக்கு பாட்டு போட்டிக்கு போட்டி மாதிரி தாளத்துக்கு தாளம் சுருதிக்கு சுருதி மாறி மாறி வாசிச்சு அப்படியே ஒண்ணா சேர்ந்து முடிச்சாங்க.


இடையில இடைவெளிவேற. பலகாரங்கள் மற்றும் குளிர்பானகள் சனார்ததனன் கோவில் அன்பர்கள் அன்பளிப்பாக அள்ளித்தந்தார்கள்.

அதன் பின்னால சிந்துபைரவியில கச்சேரியைக் களை கட்டினாங்க. வயலின் சிதார் ரெண்டுலயும் ராகம் குழைவா ப்ரவாகமா உருகி ஓடிச்சு. கடைசியா மகாத்மா காந்திக்கு பிடித்த வைஷ்ணவ ஜனதோ பாடலோட கச்சேரிய முடிச்சப்ப நம்ம சனங்களோட் கைத்தட்டல் அடங்க ரொம்ப நேரமாயிடுச்சி. ஸ்டேன்டிங் ஓவேஷன் அப்படின்னு ஆங்கிலத்தில சொல்வாங்களே, அரங்கத்தில அனைவரும் எழுந்து நின்னு கைத்தட்டுறதத்தான், அப்படிதான் நம்ம மக்கள் வரவேற்றாங்க. அதப்பார்த்து அந்தக்கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு மறுபடியும் ஒரு சின்ன ராகத்தை எடுத்து விட்டாங்க. மொத்தத்தில இரண்டு மணி நேர இசைப்பயணம் நம்மள மெய்யுருக வச்சிருச்சு.




நம்ம மாதிரி சங்கீத ஞானசூன்யங்கள் தெரிஞ்சு தெரியாம, புரிஞ்சு புரியாம இருந்தாலும் சங்கீதத்தில் மயங்கிடறோம் இலலையா. அது ஒருவகையான
சொர்க்கம்! திரிசங்கு சொர்க்கம்!!




இந்தப்படத்தில் இவர் இருப்பதும் இன்னொரு வகையான சொர்க்கம். (இசைக்கடலில் மூழ்கித்திளைக்கும் ஒரு கலாரசிகர்)

--------------------------------------


கந்தன் - வள்ளி

---------------------------------------

Wednesday, April 2, 2008

திருவிழாக் கூட்டம்


வசந்த காலம் வந்தாச்சு. வாசமல்லி பூத்தாச்சு. குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குப் போயிறுக்காங்க. அதனால பொண்டாட்டிய மட்டும் தனியா வெளிய கூட்டிட்டு போலாமேன்னு-பூக்கள் நிறைந்த ஹேம்டன் பூங்காவுக்கு போனேன். அவளுக்கு சிறிது நேரம் கார் ஓட்டக் சொல்லிக் கொடுத்துட்டு, போதுமென்ற அளவுக்கு பூக்கள படம் எடுத்துக்கிட்டு கிளம்புறப்ப, அந்த பகுதியில அளவுக்கு அதிகமான கூட்டம்.


வெள்ளிக்கிழமையும் அதுவுமா எங்க இம்மா ஜனங்க படை எடுத்து போறாங்க? கோயிலுக்கா? கச்சேரிக்கா? என வியந்தேன். சர், புர் ன்னு அங்கங்கே பிளஷர் வண்டிங்க ( அதாங்க, காரு). அவங்கவங்க கருப்பு கண்ணாடி மாட்டிக்கிட்டு, தஸ், புஸ் னு - இங்கிலீசு பேசிகிட்டு, அரைக்கால் சட்டை மாட்டிக்கிட்டு, ஆம்பள பொம்பள வித்தியாசம் தெரியாம எங்கப்பா போறீங்கனு கேக்கப்போனா - அவுக சொன்னது நமக்கு சுத்தமா வெளங்கலீங்க. சரி, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமாத்தான் இருக்கும்னு யூகிச்சு, நானும் அந்த அலங்காரம் பண்ண பிளஷர் வண்டிய தேடிப் போனேன்.

அங்கப் பாத்தா பட்டை, பட்டையா கவசம் மாதிரி சட்டை போட்ட வெள்ளைக் கார துரைங்க, ஒரே மாதிரி தலைல தொப்பி மாட்டிக்கிட்டு, அவசர அவசரமா நடந்துக்கிட்டு இருந்தாங்க. சரிதான், நமக்கு இங்கே வேலை இருக்காப்ல தெரியுதுன்னு - கொழாய் சைஸ் லென்ஸ் பொறுத்திய காமிராவை தட்டி எழுப்பி, தோள்ள மாட்டிக்கிட்டு குஷியா நடந்தேன். வழக்கம் போல முகம் சுளிச்சா என் பொஞ்சாதி. அவள கொஞ்சம் தாஜா பண்ணி, கூட்டம் போற தெசையில கூட்டிக்கிட்டு, வெவரமா ஒரு கல்லூரி மாணவி கிட்ட விசாரிக்கையில் - வெள்ளிக் கிழமைகளில், மாலையில் - சிட்டாடல் கல்லூரி வளாகத்திலுள்ள புல்வெளியில் இராணுவ பயிற்சி மாணவர்களின் அணிவகுப்பை காணவரும் பொதுமக்களின் கூட்டம் தான் அதுன்னு புரிஞ்சது.

கிரிக்கெட் ஆட்டம் பாக்கப்போற ஜனங்க மாதிரி மக்கள் இருக்கைகளில் இடம் பிடித்தனர். ஒலிப்பெருக்கிகள் அமைதியா இருக்கச் சொல்லி மக்களை கெஞ்சின. இன்னும் கொஞ்ச நேரத்துல அணிவகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதும், ஒரே நிசப்தம். உயரப் பறந்தது கோடு மற்றும் நட்சத்திரம் போட்ட பளீச் கொடி. அதன் இருபுறமும் தலா 25,25 கொடிகள், மொத்தம் 50 மாநிலக் கொடிகள் காற்றில் அசைந்தாடின. அவற்றின் முன்பு பயமுறுத்தும் பீரங்கி வண்டிகள்.

1992-ல் ஆஷ்லி நதிக்கரையில் 26 கட்டிடங்கள் கொண்டு கட்டப்பட்ட இக்கல்லூரியில் சுமார் 1900 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். முதன்முதலில் 1846-ம் ஆண்டு, மேரியான் சதுக்கத்தில் துவங்கப்பட்டது இக்கல்லூரி. பின்னரே இது தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. பகல் நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் இராணுவ பயிற்சி பெறும் இம்மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கணிதம், அறிவியல்,தொழிற்கல்வி, தொழில்நிர்வாகம் மற்றும் பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

கீழ்படிதல், கட்டுப்பாடு, காலம் தவறாமை, தலைமையேற்றல், ஒற்றுமை ஆகிய அடிப்படை பழக்கங்களோடு கல்வி பயின்று வெளியேறும் இப்பட்டதாரிகள் தம் வாழ்வில் மட்டுமின்றி, பிறர் வாழ்விலும் செம்மை தேடித் தருகின்றனர். முன்னாள் மாணவர்கள் பலர் இராணுவம், மருத்துவம், வான்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் அன்றும், இன்றும் சிறப்புற்று விளங்கி வருகின்றனர். கல்லூரி விடுதியில் கட்டாயமாக தங்கிப் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு ஒற்றுமை - மிகவும் வலியுறுத்தப்படும் விஷயமாதலால் இவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப் படுவதில்லை.

இம்மா விஷயமிருக்கா நம்மூர் காலேஜிலன்னு வாய் பொளந்து கேட்டுக்கிட்டு தலைய ஆட்டினோம். அம்மாணவி நகர்ந்து சென்றதும் படம் பிடிக்கத் தோதாக மேல்வரிசையில் இடம் பிடித்து, இருக்கை மீது ஏறி நின்று கொண்டேன்.

நாலா பக்கங்களிலும் இருந்து சீருடை அணிந்த மாணவர்கள் அணிவகுத்து வந்தனர். பரந்து விரிந்த அந்த கல்லூரி மைதானத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த அணிவகுப்பு கண்கொள்ளா காட்சிங்க. மேளம் அடிச்சிக்கிட்டு, பீ பீ ஊதிக்கிட்டு, பாவாடை மாதிரி சீருடை அணிஞ்ச மாணவர்கள் கோழி தல மாதிரி டோப்பா வச்சிக்கிட்டு போனது, பாக்க ரொம்ப வேடிக்கையா இருந்தது.

அது நடந்து முடிஞ்ச அப்புறம், எல்லாரும் எழுந்து நின்னு, தொப்பிய கழட்டிட்டு இந்த நாட்டின் தேசிய கீதம் பாடி கொடிய எறக்குனாங்க. போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், அணிவகுத்த மாணவர்களுக்கும் மரியாதை செலுத்துற மாதிரி, இராணுவ விமானங்கள் அந்த மைதானத்திற்கு மேலே பறந்து வானசாகசம் செய்தன. எதிர்பாரா நேரத்துல டொம் டொம்னு, காத பொளக்குறாப்ல பீரங்கி வெடிச்சது. உண்மையிலேயே போர்க் களத்துல இருக்கறாப்ல இருந்தது.




அணிவகுத்து வந்தவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் மக்கள் கூட்டம் கரவொலி எழுப்பியது. அவர்களுக்கு தேசப்பற்று மிக்க பொதுமக்கள் சிலர் வணக்கம் செலுத்தினர். கூட்டம் சற்றே கலைய ஆரம்பித்தது. நாங்களும் சில விஷயங்களைத் தெரிந்துகொண்ட திருப்தியில் கிளம்பத் தயாராகி கடிகாரத்தைப் பார்க்கையில் தான் கொழந்தைங்க ஞாபகம் வந்தது. சட்டு புட்டுனு கார்ல ஏறி உட்கார்ந்தோம் அவர்களை கூட்டிவர.

நாம வேலை செய்யற எடத்துக்கு ஓரிரு மைல் தூரத்துல தான் இருக்கு. நல்ல இடம். சிறு குழந்தைகளைக் கூட்டிட்டுப்போனா வசதிப்படாது. எனவே, பெரியவங்க மற்றும் ஓரளவு விவரம் தெரிஞ்ச குழந்தைங்க பாக்க வேண்டிய நிகழ்ச்சி - இந்த அணிவகுப்பு.


மாயோன் ராதை

Wednesday, March 19, 2008

கொலம்பியா (தென் கரோலைனா) மிருகக் காட்சி சாலை

கொலம்பியா (தென் கரோலைனா) நகரத்தின் நெரிசலைத் தாண்டி, அழகிய அமைதியான நதிக்கரை ஓரத்தில் ஒரு மிருகக் காட்சி சாலை. அருகிலுள்ள புகை வண்டிப் பாதையில், மிருகங்களுக்கு நம்மால் ஏன் தொல்லை என்பது போல எப்போதாவது வந்து செல்லும் ஓரிரு ரயில்கள். பள்ளிகளுக்கு விடுமுறை காலமாகையால் இலக்கணம் முறிந்த ஆங்கிலத்தில் கொஞ்சி வழிந்த மழலைக் கூட்டம். காற்றாடிகள், காகிதக் கொடிகள், பலூன்கள், பட்டங்கள் என குழந்தைகளை மகிழ்விக்க நிறைய பொருட்கள் - அந்த அழகான காட்சியகத்தின் வாயிலில்.

நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே செல்கையில் அனைவரின் நடையையும் நாட்டியமாக்கிக் கொண்டிருந்த இனிய இசை. செங்கல் நிறத்தில் ஒற்றைக் காலில் தவம் செய்து கொண்டிருந்த பிளமிங்கோக்கள் நிறைந்த சிறு குளம், குழந்தைகளையும் ஒற்றைக் காலில் நிற்கத் தூண்டியது. மறுபுறம், வண்ண மீன்கள் நிறைந்த குளம். எதிரே குளு குளு வசதி கொண்ட பறவைகள் காட்சியறை. பென்குயின்கள் அழகு நடை போட்டு பார்வையாளர்களை அசத்தின. பலவகை வண்ணப் பறவைகள் கண்களுக்கு விருந்தாயின.

அடுத்து "சீ-லயன்" (sea lion) எனப்படும் ஒருவகை கடல் வாழ் மிருகத்திற்கு உணவு ஊட்டப்பட்ட காட்சிக்கு சென்றோம். மீன்களை முக்கிய உணவாக உண்ணும் இவை தம் தோலுக்குக் கீழே பல கிலோக்கள் எடையுள்ள கொழுப்பை சேகரித்து வைத்துக்கொண்டு உணவு கிடைக்காத நேரங்களில் இக்கொழுப்பை உடலின் பல முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் திறன் வாய்ந்தவை. நாய்களை பழக்குவது போல அவற்றை நீரில் பல சாகசங்கள் புரிய பழக்கி உள்ளனர்.

அங்கிருந்து வெளியேறி மனிதக் குரங்குகளைக் காணச் சென்றோம். கண்ணாடிக்குள் இருந்து, இயற்கைச் சூழலில் உலவிக் கொண்டிருந்த கொரில்லாக்களை ரசித்துக்கொண்டிருக்கையில்-அவை பல குரங்கு சாகசங்கள் செய்தன. முகக்தைக் கோணலாக்கி அவை சிரித்ததைப் பார்த்தால் நாங்கள் சிறை வைக்கப்பட்டதாக நினைத்தனவோ என்னவோ? புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மனது வராமல் அங்கிருந்து நகர்ந்தோம்.

நொடோகி காட்சியறையில் பல்வகை குரங்குகள், சிறு பூனை வகைகள், எலிகள் போன்ற சிறு மிருகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இருட்டான குகை போன்ற இந்த காட்சியறையை கடந்து வெளியே வந்ததும்- கஜமுகர்கள் எங்களை வரவேற்றனர். ஆப்பிரிகாவிலிருந்து குடியேறி இருந்தன அந்த யானைக் கூட்டம். நடையிலேயே குழந்தைகளின் மதிப்பை சம்பாதித்து விட்ட யானைகளை கண் கொட்டாமல், ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் எங்கள் 2 வயது மகன். கால் வலிக்க நின்று கொண்டிருக்கையில் மழை தூர ஆரம்பித்தது. மழை வலுக்கும் நேரத்திலும் எங்களை வேறிடத்தில் ஒதுங்க அனுமதிக்கவில்லை அவன். யானைகளிடமிருந்து மனதை திசை திருப்ப அவ்வளவு பாடுபட்டோம்.

அடுத்து உலகின் மிக உயரமான பாலூட்டிகள்- ஆம் - ஒட்டகச்சிவிங்கிகளை பார்த்துவிட்டு, வரிக்குதிரை, ஆஸ்டிரிச் ஆகியவற்றை பார்த்து படம்பிடித்துக்கொண்டு, ஊர்வன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றோம். வழியில் ஆமை, முதலை வகைகள் தென்பட்டன. இன்னொறு சுவையான விஷயம்- அமெரிக்க குழந்தைகள் ஆடு, மாடு, பன்றி, கோழி, குதிரை, முயல் ஆகிய மிருகங்களை பண்ணைகளில் மட்டுமே காண வாய்ப்பு கிடைக்கிறது. இம்மிருகங்கள் மற்றும் "லாமா" என்ற மிருகம் ஒன்றையும் அங்கே காட்சிக்கு வைத்திருந்தனர். இயந்திரங்கள் மூலம் பால் கரக்கும் முறைகள், தேனீக்கள் பராமரிப்பு, முட்டைகளிலிருந்து நவீன முறையில் குஞ்சு பொறித்தல் ஆகியவை வரைபடங்கள் மூலம் இப்பண்ணையில் சித்தரிக்கப்பட்டிருந்தன.

அடுத்து அவனது கவனத்தை ஈர்த்தன-மதிய உணவு உண்ட களைப்பில் இளைப்பாறத் தயாரான புலி, சிங்கம் மற்றும் ஹயீனா ஆகியவை. புலி, சிங்கங்களின் கம்பீர நடையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி, அடுத்து ஹயீனாக்களையும் குரங்குகளையும் காணச்சென்றோம். உலக மிருகங்களில் மிக வலிமையான தாடை ஹயீனாக்களுக்குத்தான். புட்டியில் எடுத்துச்சென்ற குளிர்ந்த-கொத்தமல்லி மிதக்கும்-மோர் குடித்துவிட்டு, மெரி-கோ-ரவுண்டு எனப்படும் விளையாட்டு வண்டியில் எங்கள் பிள்ளையோடு நாங்களும் பிள்ளையாக சுற்றி மகிழ்ந்தோம். இதிலும் யானை இருக்கை தான் எங்கள் பிள்ளைக்குப் பிடித்த இடம்.

கிளி மொழி பேசிக்கொஞ்சிய தத்தைகளுக்கு தேன் ஊட்ட சீட்டு ஒன்று வாங்கிக்கொண்டோம். கிளிகளுக்கு, அங்கு வழங்கப்படும் தேன் மட்டுமே ஊட்ட அனுமதிக்கப்படுகிறது. கீச், கீச், கீச் என்று எங்கு பார்த்தாலும் ஒரே சத்தம் அந்த கிளி காட்சியகத்தில். உள்ளே நுழையும்போதே தலையிலும், தோளிலும், கையிலும் வந்து உட்கார்ந்து நம்மை வரவேற்கின்றன. தேன் உண்ட திருப்தியில் கீச், கீச் என்று கத்தித் திரிந்தன.

யூக்கலிப்டஸ் இலைகளைத் தின்று, நிறைய தூங்கும் கோலாக் கரடிகளின் களையான முகங்களை படம் பிடித்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும் கங்காருக்களை காணச்சென்றோம். களைப்பாகப் படுத்திருந்தன அவை.

காட்சியகத்தின் மூலிகைப் பண்ணைக்கு கால் வலிக்காமல் செல்ல இருக்கை வசதிகள் கொண்ட தொடர்வண்டி ஒன்றும் இயக்கப்படுகிறது. மூலிகைப் பண்ணைக்கு அருகில் பறவைகள் பல பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூந்தோட்டம் ஒன்றும் மக்களை மகிழ்விக்கின்றது.

இம்மிருகக் காட்சியகத்தின் முக்கிய அம்சங்கள்- குழந்தைகளுக்கு மிருகங்களைப் பற்றிய முப்பரிமான படங்கள் மற்றும் பல விளக்கப் படங்கள், குறிப்பிட்ட நேரங்களுக்கு திரையிடப்படுகின்றன. ஹாலோவீன், புதுவருட நாள் போன்ற சமயங்களில் சிறுவர்களுக்கான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பூந்தோட்டம், குழந்தைகளுக்கு விளையாட்டு வசதிகள், சிற்றுண்டி சாலை, குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், சுத்தமான கழிவறைகள், நன்கு பராமரிக்கப்பட்ட சூழல் ஆகிய முக்கிய தேவைகள் இங்கே காணப்படுவதாலும், குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமாக அமைந்திருப்பதாலும் இங்கே ஆண்டு முழுவதும் மக்கள் கூட்டம் வழிகிறது.

மாயோன் ராதை

Sunday, March 2, 2008

"தமிழர் அதிகாரம்" - இராம.கி அவர்களின் உரை குறித்து.

தாயே தமிழே! தரணி போற்றும்எம் அமுதே!
நீயே நினைவே! எம்மில் நீங்கா உயிரே!
போற்றி! போற்றி!

தென் கரோலினாவின் பனைநிலத் தமிழ்ச் சங்கம் பல நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது என்பதைக் கேட்டறிந்திருந்தாலும், இம்முறைதான் அந்நிக்ழ்ச்சிகளில் ஒன்றான "சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் ஐயா இராம.கி அவர்கள் உரையாற்றியதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐயா இராமகி அவர்கள் தெளிவாகவும், பொறுமையாகவும், அழகாகவும் முக்கியமாக எடுத்துகாட்டுக்களுடனும் நம் மூத்த சமூகத்தின் காலக் கண்ணாடி, ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றன சிலப்பதிகரத்தின் வஞ்சிக் காண்டத்தை விளக்கலானார்.

அவரின் தொடக்கமே எனக்கு ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது, ஆமாம் எதைச் சொல்ல வேண்டுமோ அதை அவர்கள் உடனடியாகச் சொல்லவில்லை. மாறாக, கதையின் "பின் புலம் " என்று நம் நாட்டின் வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள தொடர்புகள், அதாவது தரைவழித் தொடர்புகள் என்னென்ன? எந்தெந்த அரசு இருந்தது, பழங்காலத்துப் பட்டிணங்கள் தற்போது எவ்வாறெல்லாம் மாறியிருக்கின்றன, பழைய துறைமுகங்கள், அவற்றைச் சார்ந்தாற் போல புதிய துறைமுகங்கள் என்று இராம.கி அவர்கள் நம் இந்திய தேசத்தின் வரலாறுகளை விளக்கியபோது நான் வியந்து போனேன். என்னைப் போலவே அனைவரும் வியந்திருப்பர் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு புகழ் பெற்ற வரலற்று ஆசிரியர் கூட இப்படி விளக்க முடியுமா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த வரலாற்றை அவர் விளக்க மிக முக்கியமான காரணம் இந்தியாவின் முதல் பேரரசான மகதத்தைப் பற்றிப் பேசத்தான். ஏன் என்றால் செங்குட்டுவன் வடக்கே சென்று பேரரசைத் தாக்கி அழித்ததெல்லாம் கட்டுக்கதை, உண்மையில்லை அவன் அங்கே செல்வதற்கே வழியில்லை என்று பரவலாக சொல்லப்படுகின்ற கருத்தை தகர்த்தெறிவதற்காகத்தான், அந்தப் பின்புல வரலாற்றை விளக்கினார். அதில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இருந்த தரைவழித் தொடர்பை விளக்கி இதன் மூலமாகத்தான் வடக்கே சென்று வீரவாகை சூடினான், இது தமிழனின் வீரம், கதையல்ல என்றார். மேலும் அவன் வீழ்த்தியது இந்திய தேசத்தின் முதல் பேரரசான மகதத்தைத் தான் என்பதற்கும் ஆதாரபூர்வமாக அந்த காப்பியத்தில் இருந்தே எடுத்துக் கூறினார்.

இவர் சொல்லவந்தது சிலப்பதிகாரத்தை என்றாலும், சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்ற தமிழனின் வீரம் வெறும் வார்த்தையல்ல, உண்மை என்பதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும் என்பதாகவே பட்டது. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் ஆழப்பதியச் செய்யும் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டியது. ஆகையால்தான் இந்த கட்டுரைக்கு தலைப்பு சிலப்பதிகாரம் என்றில்லாமல் தமிழனின் வீரத்தைப் பற்றி இருந்ததால் "தமிழர் அதிகாரம்" என்று சூட்டியுள்ளேன்.

மேலும் சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் திறனாய்வு செய்து தமிழரின் வாழ்வு, வழக்கங்கள்,வழிபாடு, பண்பாடு என்று ஒளிந்து கிடக்கும் பல்வேறு கருத்துக்களை வெளிக் கொணர்ந்து அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் அவரின் நிலைப்பாடு, நமக்கெல்லாம் ஒரு வெகுமதி.

சிலப்பதிகாரத்தை வேறு கோணத்தில் திசை திருப்பி அழைத்து சென்ற ஐயா இராமகி அவர்களின் பணி தொடர்ந்து இந்த தமிழ் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் அவாவாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், சிலப்பதிகாரத்தில் முரண்பாடுகள் என்று நீங்கள் விவாதித்த சில கருத்துகளை மென்மேலும் ஆராய்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் பல எழுத வேண்டும்.

சிலப்பதிகாரத்தை நோக்கி எங்களை நடை பழகச் செய்த ஐயா இராம.கி அவர்களுக்கு எங்கள் தமிழ்ச் சங்கம் சார்பாக நன்றிகள் பல!


எழுதியவர்: பூதூர் சம்பந்தனார்.

Wednesday, February 27, 2008

நம்ம ஆட்டத்தைப் பாருங்க!!




போன மாசம் நம்ம தமிழ்ச் சங்கத்துல பொங்கல் விழா நடந்துச்சு. Youtubeல கிடைச்ச படங்களைப் பார்த்து நாங்க போட்ட ஆட்டம் இது. ஒன்னு ஒயிலாட்டம் (மாதிரி), இன்னொன்னு கோலாட்டம் (மாதிரி). இதைப் பாத்துட்டு இன்னும் நிறைய கத்துக்கிட்டு ஒழுங்கா ஆடணும்னு ஒரு வெறி வந்திருச்சு. அதோட விளைவா இந்த வேண்டுகோள்: உங்களுக்கு தேவராட்டம், கும்மி (அய்யோ சாமிகளா வலைப்பதிவு கும்மி வேண்டாம்!) இதுக்கான வீடியோ (+ஆடியோ) எங்கே கிடைக்கும்னு விபரம் தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்! நன்றி, நன்றி!

இப்ப எங்களோட ஆட்டம் (பாத்துட்டு youtubeலேருந்து கெளம்பி அப்படியே போயிடாம, இங்க வந்து எங்க கேள்விக்கு விடை சொல்லிட்டுப் போங்க:))

எழுதியவர்: பனையேறி