Wednesday, April 11, 2007

பருவாச்சியான் படமெடுக்கும் கதையும், சில பூக்களும்

நம்ம பருவாச்சியான் பயங்கரமா படமெடுப்பாருன்னு ஒங்களுக்கு ஏற்கெனவே தெரியும். இப்ப அவரு எப்படி படமெடுப்பாருன்னு சொல்லுறேன்.பருவாச்சியான் என்ன செய்யிறாருன்னா, அந்தக் குழாய் நீண்ட பொட்டி இருக்கு பாருங்க, அதான் கேமரா, அதைத் தூக்கிக்கிட்டு தெருத்தெருவாத் திரியிறாரு. எதாச்சும் கொஞ்சம் கலர் கலரா இருந்துட்டாப் போதும். உடனே கேமரா, ஸ்டார்ட், ஃபோகஸ் அப்படின்னு அவரு மூளைக்கு செய்தி போயி நிப்பார், மண்டி போடுவார், குந்துவார், படுப்பார். இவரோட கலாப்பார்வைக்கு முன்னாடி ஒருத்தரும் போக முடியாது. ஆமா நடைபாதைக்குக் குறுக்கே படுத்துக் கிடந்தா எப்படிப் போறது, அதுவும் சரிதான்.

இப்படியாகப் போன பருவாச்சியான் இந்த வசந்த காலத்துல எடுத்த பூப்படங்கள்தான் இதெல்லாம். சும்மா சொல்லப்புடாது. பனை நிலத்தில பூவெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இதையெல்லாம் எப்புடி எடுத்தாருன்னு கேக்கனும்னா அவருகிட்டதான் கேக்கணும். கேட்டா, 1.6x100, 35mm, 1.2, 1/400 அப்படின்னு ஏதேதோ நம்பராத்தான் சொல்லுவாரு. நமக்கு எதுக்கு நம்பரு, படம் மட்டும் போதும்னு போற ஆத்மாக்களா நீங்க இருந்தாலும் சரியே.













எழுதியவர்: பனையேறி
படங்கள்: பருவாச்சியான் (அதான் படத்துலேயே எழுதியிருக்கே, அப்புறமென்னன்னு கேக்குறீங்களா? சும்மா ஒரு நாலு எடத்துல நம்ம பேரு இருக்கட்டுமேன்னுதான்!)

Thursday, April 5, 2007

பக்கத்து ஊரில் ஒரு திருவிழா

நம்ம அண்ணன் இன்பம் இருக்காரே, அவரு ஒரு நாள் எல்லாரையும் கூப்பிட்டார்.
வாங்கப்பா, வசந்தம் வந்திடுச்சு, பூப்பறிக்க, இல்ல இல்ல பூ பார்க்கப்
போலாம்னு கூப்பிட்டாரு. எங்கேன்னு கேட்டோம். அட, அதாம்பா Flowertownல,
மலர் விழா (flower festival) ன்னாரு. அட, போயித்தான் பாப்பமேன்னு புள்ள
குட்டிகளோட எல்லாரும் கெளம்பிட்டோம்.


புதுசாப் பொட்டி வாங்கின மாபெரும்
பொகைப்படக் கலைஞன் பருவாச்சியானும், முதுபெரும் பொகைப்படக் கலைஞர்
மாயோனும் தம் பொட்டிகளுடன் கெளம்பிட்டாங்க (ஆமா அது என்னாங்க, ரெண்டு
பேரு மட்டும் ஒங்க கேமராவுக்கு முன்னாடி ஒரு மொழ நீளத்துக்குக் குழாய்
வச்சிருக்கீங்க?).


Summervilleலதான் இருக்கு அந்த எடம். ஆளாளுக்கு ஒரு
நேரம், ஒரு பாதை, கார் நிறுத்த ஒரு எடமுன்னு ஆகிப்போன அமளி. அங்கங்க
செல்பேசி அலறுது, எங்கெ இருக்கீங்க, எங்கெ திரும்ப, உங்க காரு எங்கெ, நா
இங்கெ அப்படின்னு. அன்னக்கின்னு அடிச்சுச்சு பாருங்க ஒரு வெயிலு. போனா
அப்பூடி ஒரு கூட்டம். ஒரு மைல் நீளத்துக்கு ரோட்டுக்கு ரெண்டு பக்கமும்,
சந்துகளுக்குள்ளயும் கடையணியும் மக்களணியும். அம்பூட்டு சனத்தை
அமெரிக்காவுல பாத்ததே இல்லன்னு சில பேரு சொல்லிக்கிட்டிருந்தாங்க.


ஆங்காங்கே ஓசிச் சரக்குகள், தீனிகள். விட்ருவமா? நடு ரோட்டுல நின்னு
முழக்கின வாத்தியங்கள். நிறைய கைவினைப் பொருட்கள், இராணுவ ஆள் சேர்ப்பு
நிலையம், காருக்குக் காப்பீடு, தோட்டத்துக்கு விதை, வீடு பழுது பார்க்க,
குடியரசுக் கட்சிக்கு ஆள் சேர்க்க, துணிக்கடை, பஞ்சு மிட்டாய்,
எல்லாமிருந்தன. குட்டிப் பிள்ளைகள் அதையும் இதையும்
தின்றுகொண்டேயிருந்தார்கள். திருவிழாக் கடைன்னா சும்மாவா? அப்புறம் ஒரு
பூங்காவுல உட்கார்ந்து கொண்டுவந்திருந்த கட்டுச் சோற்றைச் சாப்பிட்டோம்.
மாயோனும் இராதையும் தம் மகனோடு விளையாட இன்னொரு ஆள் வரும் மகிழ்ச்சியான
செய்தியைச் சொன்னார்கள்! கொஞ்சம் ஊர்க்கதை, உலகக் கதை. மதியம் இன்னும்
கொஞ்சம் கடை சுற்றல்.


அண்ணன் இன்பத்துக்கிட்ட கேட்டாங்க, ஆமாண்ணே, மலர்
விழான்னு சொன்னீங்க, ஒரு பூவையும் காணோமே! பூங்கா நிறைய பூ,
பாருப்பூன்னுட்டாரு அண்ணன். ஒரு வழியாகக் கிளம்பினோம். அண்ணன் இன்பம் ஒரு
மலர் விழாவுக்குக் கூட்டிக் கொண்டு போகாமல் விடுவதில்லை என்று கங்கணம்
கட்டியிருக்காரு. வாழ்க!

எழுதியவர்: பனையேறி
படங்கள்: பருவாச்சியான்

நாங்கள் போன இடம்:www.flowertownfestival.com/

Saturday, March 24, 2007

எங்களைப் பற்றிக் கொஞ்சம்!

பனைநிலம் என்பது Palmetto State என்பதன் தமிழாக்கம். South Carolinaதான் Palmetto State. இங்கு நிறைய பனைமரங்கள் இருக்கும். இது நுங்கு காய்க்கும் பனை இல்லை. பாக்கின் அளவில் ஈச்சையின் நிறங்களில் இருக்கும். யாரும் சாப்பிடுவதில்லை. பறவைகள் சாப்பிடுமா என்று தெரியவில்லை. அழகுக்காக இங்கே பனை நிறைய இடங்களில் வளர்க்கப்படுகிறது. பெரிய பெரிய பனைமரங்களையும் வேரோடு பெயர்த்து வேறிடங்களில் ஊன்றுவார்கள். பிழைத்துக் கொள்ளும்!

இங்கு நிறைய கடற்கரைகளும் தீவுகளும் இருக்கின்றன. சதுப்பு நிலம், மலைகள், சமதளங்கள் என்று பலவித இயற்கையமைப்புக்களைக் கொண்டது தென்கரோலினா. கோடைக் காலத்தில் சுமார் 90களில் இருக்கும் வெப்பநிலை, குளிர்காலங்களில் 40களிலேயே சராசரியாக இருக்கும். பனி கொட்டுவது குறைவு, மாநிலத்தின் தென்பகுதிகளில் கிட்டத்தட்ட பனியே இராது. சூறாவளிகளின் அச்சுறுத்தல் ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். சில நேரங்களில் கடுமையாகத் தாக்கப்படுவதும் உண்டு. உதாரணமாக 1989ல் ஹ்யூகோ என்றொரு சூறாவளி பெருத்த சேதத்தையுண்டாக்கியது.

தென்கரோலினா சுற்றுலாவினால் சிறப்படைந்த மாநிலம். சார்லஸ்டன், சவானா, மெர்ட்ல் கடற்கரை போன்ற சுற்றுலாத் தலங்கள் நிறைய இருக்கின்றன. அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் முக்கியத்துவம் பெற்றிருந்த போர்க்களங்கள் பல தென்கரோலினாவில் உண்டு. அடிமைக் காலத்தில் இருந்துவந்த பண்ணைகளயும் இங்கே பார்க்கலாம். வளர்ந்துவரும் தொழில்களைக் கொண்டவொரு மாநிலம். பெரும்பாலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மக்களே இங்கு. சார்லஸ்டனில் இருக்கும் தெற்கத்திய உணவுக் கூடங்களும் , அவற்றில் இசைக்கப்படும் வாத்தியக் குழுக்களும் பெயர்பெற்றவை. மைய நகர் மிகவும் சுறுசுறுப்பான இரவின் களையைக் கொண்டது.

நாங்கள் இந்த கூட்டு வலைப்பதிவில் எங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பதிவுகளையும் எழுத இருக்கிறோம்!

எழுதியவர்: பனையேறி