Wednesday, February 27, 2008

நம்ம ஆட்டத்தைப் பாருங்க!!




போன மாசம் நம்ம தமிழ்ச் சங்கத்துல பொங்கல் விழா நடந்துச்சு. Youtubeல கிடைச்ச படங்களைப் பார்த்து நாங்க போட்ட ஆட்டம் இது. ஒன்னு ஒயிலாட்டம் (மாதிரி), இன்னொன்னு கோலாட்டம் (மாதிரி). இதைப் பாத்துட்டு இன்னும் நிறைய கத்துக்கிட்டு ஒழுங்கா ஆடணும்னு ஒரு வெறி வந்திருச்சு. அதோட விளைவா இந்த வேண்டுகோள்: உங்களுக்கு தேவராட்டம், கும்மி (அய்யோ சாமிகளா வலைப்பதிவு கும்மி வேண்டாம்!) இதுக்கான வீடியோ (+ஆடியோ) எங்கே கிடைக்கும்னு விபரம் தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்! நன்றி, நன்றி!

இப்ப எங்களோட ஆட்டம் (பாத்துட்டு youtubeலேருந்து கெளம்பி அப்படியே போயிடாம, இங்க வந்து எங்க கேள்விக்கு விடை சொல்லிட்டுப் போங்க:))

எழுதியவர்: பனையேறி

Sunday, January 27, 2008

பனைநிலம் தமிழ்ச்சங்கப்பொங்கல் விழா2008

.

இடம் - தமிழ் மண்ணிலிருந்து கிட்டத்தட்ட பல்லாயிரகணக்கான காத தூரங்கள்.

நேரம் - அந்தி மயங்கும் மாலை நேரம்

வானிலை - அங்கிங்கெனாதபடி எங்கு காணினும் மழைத்தாண்டவம், ஊனிலிருந்து உயிரையே பிரித்தெடுக்கும் ஊழிக்காற்று வேறு...சொல்லவா வேண்டும். வெளியில் ஒரு வாகன, பாமர நடமாட்டம் கூட இல்லை. கல்கியின் வந்தியத்தேவனே இங்கு வந்திருந்தாலும் அவனையும் புரவியையும் களைத்து துவண்டிடச்செய்யும் வானிலை.

ஆனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் என்ன ஆயகலைகளின் அணிவகுப்பு, தமிழ்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு.

வாங்க இந்த சார்லஸ்டன் மாணவர் மைய அரங்கில் என்ன நடக்கிறதென்னு பார்த்துடலாம்.

நம்ம இப்போ பார்க்கிறது கனவா...நனவா....அட நம்ம சார்லஸ்டன் தமிழ்மக்கள் பொங்கல் விழாவை இவ்வளவு சீரும் சிறப்புமா கொண்டாடிக்கிட்டு இருக்காங்களே. இத்தனை அருமையான நிகழ்ச்சிகளா.

விழா இன்னும் கொஞ்ச நேரத்தில ஆரம்பமாகப்போகுது....அப்படியே ஒரு மூலையில நம்ம உக்கார்ந்துக்கலாம், என்ன சொல்றீங்க.

விழா ஏற்பாடுகளை மக்கள் பம்பரமா சுறுசுறுப்பா ஓடியாடி செய்றாங்க. அங்க பாருங்க சுறுசுறுப்பா ஒலிபெருக்கி மற்றும் மின்னணுக்கருவிகள் அத்தனையிலயும் புகுந்து கலக்கு கலக்கிட்டு இருக்காரே அவருதான் நம்ம தண்டபாணி சார். அவருக்கு மேல புகுந்து வேல பார்க்கிறது வசந்த். அந்தபக்கம் பார்த்தா குழந்தைகளையும் பெரியமனுசங்களையும் சமாளிச்சிக்கிட்டு விழா ஏற்பாடுகளையும் கவனிச்சிக்கிட்டு இருக்காரே அவர்தான் சுந்தர். அட வழக்கம் போல வேலைகளை இழுத்து போட்டு செய்றாரே அதுதான் சந்தோஷ். பாபா சூர்யன், சிவா கோஷ்டிகள் வேறு பறந்து பறந்து வேலை செய்றத பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கு. ஆகா வந்திட்டாரய்யா வந்திட்டாரு. காமிராவும் கையுமா...இல்ல இல்ல காமிராவே கையா வந்திட்டாரு காமிரா-கண்ணன்.

அந்த பக்கம் பார்த்தா, பெண்கள் குழு கோலாட்டம் ஒத்திகை விறுவிறுன்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த பக்கம் பாருங்க ஒயிலாட்டம், நாடகம் ஒத்திகை பலமா போய்க்கிட்டு இருக்கு. அடடா...என்ன விறுவிறுப்பு. இன்னும் கொஞ்சம் மக்கள் உணவு ஏற்பாடுகளில் மூழ்கி இருக்காங்க. விழா நேரம் நெருங்க நெருங்க ஒரே பரபரப்பு. இங்க பார்க்கிறப்ப அத்தனை பேரும் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சேலையில இருக்கிறது கண் கொள்ளாக்காட்சி.

இதோ ஆரம்பிச்சிடுச்சு. தொகுப்பாளினி வினு அவங்க வந்து தமிழத்தாய் வாழ்த்துக்களோட ஆரம்பிக்க அழைப்பு விடுக்கிறாங்க. அதுக்கு அடுத்தபடியா வினு அவங்க நிகழ்ச்சி என்னன்னு வழக்கம் போல அறிவிப்பாங்கன்னு பார்த்தா, ஆனந்தியைப்பார்த்து ஏதோ உங்ககிட்ட சந்தேகம் இருக்கிறமாதிரி தெரியுது என்னன்னு வந்து முன்னாடி சொல்லுங்கன்னு கூப்பிட்டு கேட்க, அதுக்கு ஆனந்தி, பொங்கல் மற்றும் தமிழக கலாச்சாரத் தொடர்பு பற்றி கேள்வியா கேட்க, அதுக்கு வினு அழகா பதில் சொன்ன அப்புறம் தான் தெரிஞ்சது அது திட்டமிட்டு செய்திருக்கிற தொகுப்பு நிகழ்ச்சின்னு. வழக்கம் போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காம, பொங்கல் பத்தி சிறு சிறு தகவல்துளிகளை சுவராஷ்யமா செந்தில் எழுதி அதை வினு-ஆனந்தி தொகுப்பாளினிகள் அருமையா வழங்கிருக்காங்கன்னு தெரிந்தது. அதுவும் பொங்கலுக்கு முதல் நாள்தான் செந்தில் போய் வினு மற்றும் ஆனந்தி வடைசுடும் கோலாகலமான நிகழ்ச்சிக்கு மத்தியில் வசனம் சொல்லி அவங்க அதை தூக்கம் கெட்டு விடிய விடிய பரிட்சை மனப்பாடம் செய்தாங்கன்னு சுவையான கிசுகிசு வேற நமக்கு கிடைத்தது.



விழாவை இரத்தின சுருக்கமாகவே இப்போ சொல்றேன். சுந்தர் முன்னுரையுடன் தொடங்கி வைக்கிறார். அதற்கு அடுத்த படியாக குழந்தைகளின் வண்ணத்துப்பூச்சி என்கிற பாடல்...அதுக்கு குழந்தைகள் ஆகாஷ், அமிர்தா, மாசிலன், சிபி, கோகுல், அஸ்ரிதா, கண்கவரும் வண்ணங்களாக அணிவகுத்து பாடல்பாடி மகிழ்வித்தார்கள். அடுத்தபடியாக, குழந்தைகள் சிட்டா சிட்டாங்குருவின்ற பாட்டுக்கு அருமையாக நடித்து கலக்குனாங்க.


அதற்கு அடுத்தபடியாக ஹரி அவங்க அம்மா லட்சுமி அவர்கள் அயல்நாடுகளில் தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பற்றி அழகாக பேசினார். பலகுரல் வித்தைகள் நிகழ்ச்சியில் யுவ்ராஜ் பலவித்தைகளை காட்டி பேசி மகிழ்வித்தார். பல திரைப்பட நடிகர்களின் குரல்களை நம்ம கண்.... இல்ல இல்ல காதுக்குள்ளேயே கொண்டு வந்து நிறுத்தினார். அதற்கடுத்தபடியாக மாறுவேடப்போட்டி. குழந்தைகள் பாரதியார், ஒளவியார், உழவர், தமிழ் ஆசிரியை, வீரபாண்டிய கட்டபொம்மன், திருவள்ளுவர் போன்று முறையே கோகுல், அஸ்ரிதா, மாசிலன், அமிர்தா, சிபி, ஆகாஷ் அவர்கள் அருமையாக வேடம் அணிந்து வசனங்களையே சிறப்பாக பேசி நடித்து பார்வையாளர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டனர்.


அதற்கு அடுத்தபடியாக ஒரு நாடகம். செந்தில் இயக்கி அதில் இறைவனாக செந்திலும், தருமியாக யுவ்ராஜ், நக்கீரராக சந்தோஷ், மற்றும் மன்னராக குமரனும் நடித்திருந்தார்கள். அது நவீன திருவிளையாடற்புராணத்தின் அடிப்படையில் நகைச்சுவை கலந்து மஹாராணியின் முதுமை தீர்க்கும் மருந்துக்கு இறைவன் ச்டெம் செல் அறிவியல் ஆராய்ச்சி ரகசியத்தினை தருமி போன்ற மாணவரிடம் கொடுத்து ஒரு மில்லியன் டாலர்கள் பரிசினை பெற உதவுவதாகவும், அதை நக்கீரன் தடுப்பதாகவும், இறைவன் வந்து வாதிடுவதாகவும் இருந்தது. நாடகம் வித்தியாசமாக, நகைச்சுவையாக, அம்சமாக இருந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.


இப்போ வர்றாங்களே அதுதான் மகளிர் கோலாட்ட குழு. அடடடா...ஒன்றா இரண்டா...20 நாள் வீட்டு வேலைகளை விட்டு, வினுவோட ஒருங்கிணைப்பில் கோலாட்ட குச்சிகளுக்கு பதிலா, சமையல் கரண்டிகளை வச்சு எல்லாரையும் பயமுறுத்தி ஒத்திகை மேல ஒத்திகை பார்த்திருக்காங்க. அந்த ஆடல் குழுவில் வினு, ஆனந்தி, வளர், சுபத்ரா, யசோதா, திருமகள், கலைவாணி, ஜானகி, உமா, வித்யா கலந்து அமர்க்களப்படுத்திட்டாங்க. அதுவும், ஆடல் நிகழ்ச்சியை நீங்க, உற்றுப்பாருங்க அவங்களோட கடின உழைப்பு ஒவ்வொரு அசைவிலயும் தெரியுதில்லையா. ஆட்டத்தை பார்த்துகிட்டே இருந்ததில இந்த ஆறு நிமிடங்கள் போனதே தெரியல்ல.


அடுத்து என்னன்னு பார்ப்போமா. ஆஹா, வந்திட்டாங்கய்யா...வந்திட்டாங்க. வேட்டியும் சட்டையுமா, வெள்ளையும், சொள்ளையுமா நம்ம ஆடவர் அணிதான். இந்த அணியிலிருந்த சுந்தர், சூர்யன், வசந்த், குமரன், யுவ்ராஜ், சந்தோஷ் மற்றும் செந்தில் அத்தனை பேரும் கலக்கிட்டாங்க. சுந்தரோட விருப்பத்தில் உருவான இந்த ஒயிலாட்டம் ரொம்ப அருமையாக, கண்ணைக்கவரும் வண்ணமா இருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆர்ப்பரிப்பு, உற்சாகம், கைத்தட்டல் ஆட்டம் முடிஞ்சும் ரெம்ப நேரமாக குறையவேயில்லை.

அதற்கடுத்தாற்போல பாம்பே விஸ்வநாத், ஸ்ரீதர், கார்த்திகா அவர்களின் பாடல்கள், பொங்கலில் சேர்க்கப்பட்ட முந்திரியாக சுவைத்தது.

பிறகு கலை நிகழ்ச்சிகள் பல வரிசையில் இருந்தும் நேரம் இல்லாததனால் அப்பிடியே உணவுக்கு அழைப்பு வந்திடுச்சு. ஆஹா உணவுப்பந்தல்ல பலவகை அறுசுவை உணவுகள். அது வித்யா, திருமகள், சுபத்ரா, வளர்மதி அவங்களோட ஏற்பாட்டில் அனைத்து மக்களும் அவங்கவங்களோட கைவரிசையைக்காட்டியிருந்தனர். உணவிற்கு பிறகு குழந்தைகளுக்கு பரிசுப்பொருள்கள் மற்றும் பனை நிலம் உறுப்பினர் அட்டைகளை கணேஷ் வழங்கினார்.

அதக்கப்புறமும் விழா அரங்கில குழந்தைகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு புகுந்து விளையாண்டுகிட்டிருந்தாங்க.

ஆக மொத்தத்தில இந்த பனை நிலம் 2008 பொங்கல் விழா ஒரு கலாட்டா கல்யாணம். அழகாக பரிமாறப்பட்ட அறுசுவை உணவு. நம்ம மக்கள் நெஞ்சில் என்றென்றும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் கலைக்காவியம்.



.கந்தன். கருத்து உதவி - இனியன்
படங்கள் - மாயோன்
.......................................................................

Saturday, January 26, 2008

பனையேறிக்கும் வீட்டுக்காரப் பெருச்சாளிக்கும் நடக்கும் தகராறு - பாகம் 1

நீங்க வாடகை வீட்டுல குடியிருக்கீங்களா? அப்படின்னா கண்டிப்பா இதப் படிங்க.
இந்தப் பனையேறியும் குடியும் குடித்தனமுமா இத்தனை காலமும் ஊரு ஊரா ஓடி ஓடி வாடகை வீட்டுலதான் இருந்துட்டு இப்பதான் எலி வளைன்னாலும் தனி வளைன்னு ஒரு வீடு வாங்கி ஒதுங்கியிருக்கான். ஆனாலும் பாருங்க, இந்த வாடகை வீட்டுக்காரப் பெருச்சாளி நம்மள தொரத்து தொரத்துன்னு தொரத்துது. வெவரமா சொல்லுறேன்.

போன அக்டோபர் மாசம் வாடகை வீட்டக் காலி பண்ணிட்டு, புது வீட்டுக்கு வந்தோம். ஆனா காலி பண்ணுற நேரத்துல பாருங்க, அந்த வீட்டுக்காரங்ய மேல ஏதோ ஒரு நம்பிக்கையில, சாவிய மட்டும் குடுத்துப்புட்டு, பாத்துக்கங்கய்யான்னு கெளம்பிட்டோம். நாங்க என்ன பண்ணியிருக்கனுமுன்னா, அவனுகளக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போயி, இந்தா இதான் நீ குடுத்த வீடு, எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்க அப்படின்னு அவங்கிட்ட காட்டிட்டுப் போயிருக்கனும். இதுக்கு முன்னாடி இருந்த அத்தனை வீட்டுலயும் அப்படிச் செய்யல. அவனுகளும் செக்குரிட்டி டெபாசிட்டை முழுங்காம, அல்லது கொஞ்சமா முழுங்கிட்டு குடுத்துட்டாங்ய. ஆனா இந்தப் பயலுக இருக்காங்ய பாருங்க. செக்குரிட்டி டெபாசிட்டு 150 டாலர் திரும்பி வரவே இல்ல. அவனுககிட்டேருந்து ஒரு கடுதாசியும் வரல. நாங்களும் நெனச்சுப் பாக்குறதோட சரி. கேக்காமலே விட்டுக்கிட்டு சோம்பேறியாத் திரிஞ்சோமா. ஒரு நா வருது ஒரு கடுதாசி. எங்கேருந்து? கலெக்ஷன் ஏஜென்சிகிட்டேருந்து. அவன் சொல்லுறான், நீ உன்னோட ஊட்டுக்காரனுக்கு 945 டாலர் கட்டுடான்னு. எதுக்குடான்னு கூப்பிட்டுக் கேட்டா, உன்னோட கார்ப்பெட்டை மாத்துனோம். அதுக்குத்தான். அடப் பாவிகளா. பனையேறிக்கு அச்சு அச்சுன்னு தும்முதேன்னு சொல்லி ரெண்டு நாளக்கி ஒருக்கா அந்த வேக்யூம் க்ளீனரைப் போட்டு நா, எம் பொண்டாட்டி, புள்ளகுட்டி எல்லாரும் சர்ர்ர்புர்ர்ர்ருன்னு உறிஞ்சி உறிஞ்சி தூசி தூசியாக் குப்பையில கொட்டுனது என்ன? கார்ப்பெட்டுல சோறு போட்டு சாப்பிட முடியாட்டியும், கீழ விழுகுற ரஸ்க்கை டவுசர்ல தொடச்சுட்டு சாப்புர்ற அளவுக்கு சுத்தமா வச்சிருந்தமுய்யா. என்ன செய்வான் பனையேறி? ஒடனே எகிறிக் குதிச்சான். எங்க? ஊட்டுக்குள்ளதான் குதிக்கிறதெல்லாமுன்னு ஊட்டுக்காரம்மா சொல்லும். அதெல்லாம் கண்டுக்கிடாதீங்க. நானும் கலெக்ஷன் காரன்கிட்ட எகிறிப் பாத்தேன், கேட்டுப் பாத்தேன், கெஞ்சிப் பாத்தேன், சாபம் கூட வுட்டேன். ம்கூம், எந்த ஊரு வந்து பாருன்னுட்டானே. மசியல. சரி போனா போற, இன்னக்கே கட்டுனா 20% கழிச்சுத் தாறேன்னான். அடப் பாவிகளா, ஏண்டா பனையேறியோட காசுக்கு இப்படிப் பறக்குறீங்கன்னு நானும், சரிடா யோசிச்சுச் சொல்லுறேன்னு சொல்லிட்டு இன்று போய் நாளை பா அப்படின்னு அனுப்பிட்டேன். எனக்குத் தாங்கல. இருந்த பழைய ஒயினையெல்லாம் ஊத்திக் குடிச்சும் கோவம் அடங்கல.

சரின்னு நெட்டுல கொடஞ்சு, நம்ம சுத்துப்பட்டுப் பயக்களைக் கேட்டுப் பாத்தேன். ஒரு அம்மா சொல்லிச்சு, நீ வாதாடிக்கு ஒரு மணி நேரத்துக்கு 200 டாலர் குடுக்கணும். அதுக்குப் பேசாம அவன் கேக்குறதக் கட்டிரலாம்னுச்சு. இன்னொருத்தரு சொன்னாரு நீ Small Claims Court, Better Business Bureauக்குப் போன்னு. இந்த Small Claims Court இருக்கு பாருங்க, அதுல நீங்க யாருகிட்ட இருந்தாச்சும் காசு வாங்கணும்னாதான் புகார் குடுக்கலாம், அதுவும் $7500க்குள்ள இருக்கணும். எவனாச்சும் உங்க காசைப் புடுங்க வந்தா நீங்க அங்க போக முடியாது.

நெட்டுல போட்டிருக்கான், வெவரமா, அதாவது வீட்டுக்காரங்க உங்களோட செக்குரிட்டியை வீடு காலி பண்ணின, அல்லது நீங்க கேட்ட 30 நாளைக்குள்ள குடுத்துரனும்னு. ஆனா எங்காளு என்ன பண்ணினான்? கிட்டத்தட்ட 3 மாசம் கழிச்சு கலெக்ஷன் ஏஜென்சி மூலமா கடுதாசி அனுப்புறான். அ...இன்னொன்னும் மறந்துட்டனே, 150 டாலரா வாங்குன செக்குரிட்டியை, அந்தா பெரிய செக்கை, மறைச்சுட்டு, 100 டாலருதான்னு சொல்லுறான் அந்தப் புண்ணாக்கு. பாத்தா South Carolina Department of Consumer Affairs லயும் புகார் செய்யலாமுன்னு பாத்தேன். நம்ம நண்பர் ஒருத்தரு சொன்னாரு இன்னொருத்தரும் அங்கதான் முந்தி ஒருக்க முறையிட்டு நீதி வாங்குனாருன்னு. ஒடனே அவங்களுக்கு இந்த மாதிரி, இன்ன வெவரம், இதான் நடந்துச்சுன்னு வெலாவரியா எழுதிப்புட்டு ஒக்காந்திருக்கேன். பதில் தெரியுறப்ப பாகம்-2 ஐப் போடுறேன்.

ஆனா ஒன்னு, வாடகை வீட்டுல இருக்குறவங்க அந்தந்த மாநிலத்து விதிமுறைகளை நல்லாப் படிச்சுக்கங்க (ஹி ஹி சொல்வது யார்க்கும் எளியவாம்). அல்லது சுருக்கமா சொல்லுறேன் கேட்டுக்கங்க,

கார்ப்பெட்டுக்கோ, சுவத்துக்கோ, சன்னலுக்கோ, இன்ன பிற வஸ்துக்களுக்கோ 'சாதாரணமா' நடக்குற தேய்மானத்துக்கு (normal wear and tear) நீங்க காசு கட்ட வேண்டியது இல்லை. புள்ளைக பெயிண்டைக் கரைச்சு கார்ப்பெட்டுல ஊத்துனாக்கூட அது 'சாதாரணம்' அப்படிங்கறாங்க.

வீடு எடுக்குறப்ப நல்லா உத்து உத்துப் பாருங்க, எதாச்சும் ஓட்டை ஒடைசல் இருந்தா எழுதி ரெண்டு பேரும் கையெழுத்துப் போட்டு வச்சுக்கங்க. அட நீங்களும் ஒங்க வீட்டுக்காரம்மா/ய்யா இல்லங்க, வீட்டு முதலாளியச் சொல்லுறேன்.

அதே மாதிரி வீட்டைக் காலி பண்ணுறப்போ அந்த ஆளுகளைக் கூட்டிட்டு வந்து காட்டுங்க. அப்பயும் ஒரு கையெழுத்தை வாங்கிக்கங்க.

எந்த வீட்டுக்காரனையும் நம்பாதீங்க, பூராப் பயலும் சமயம் கெடச்சா ஏய்ச்சுப்புடுவாங்ய.

மறக்காம செக்குரிட்டியக் குடுடா புண்ணாக்குன்னு கேளுங்க (ஆனா ஏடாகூடமாப் பேசிடாதீங்க, ஆமா). 30 நாளைக்குள்ள செக்கு உருளலைன்னா கூப்பிட்டுக் கேளுங்க. பனையேறியாட்டம் சோம்பேறியா இருந்துட்டு அப்புறமா குதிக்காதீங்க.

சரியா, அப்ப வர்ட்டா!

Thursday, January 17, 2008

பனை நிலத்தில் பொங்கலோ பொங்கல்!



பனையேறிக்குத் தலைக்கு மேல வேல கெடக்கு. என்னன்னு கேக்குறீங்களா? நம்ம பனை நிலத்துல பொங்கல் கொண்டாடப் போறோமுங்க. சுத்துப்பட்டு கிராமங்கள்ல இருக்க எல்லா மக்களும் வந்து கலந்துக்கிடணும். உங்களுக்காகவே கோலாட்டம், ஒயிலாட்டம், நாடகம், சிறுவர் மாறுவேடம், சொற்பொழிவு, அறுசுவை உண்டி எல்லாம் தயாராகிக்கிட்டே இருக்கு.

உறுப்பினர்களுக்குக் கட்டணம் இல்ல. விருந்தினர்களுக்கு 7 டாலர். நீங்க வர்றதா இருந்தா இங்க ஒரு மறுமொழி குடுங்க, இல்லாட்டி panainilam@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிடுங்க. மறக்காம, நீங்க எதாச்சும் நிகழ்ச்சி வழங்குறீங்களா (ஆட்டம், பாட்டு, கூத்து, கதை....) அப்படின்னும் சொல்லுங்க. எப்ப, எங்கென்னு சொன்னாத்தான வர்றதுன்னு கேக்குறீங்களா, அதுவும் சரிதான்,

45 Courtenay Drive, Charleston, SC 29401.
January 19th, Saturday, 5.00pm - 9.30pm

இன்னும் என்ன யோசனை, நாளாயிடுச்சு, கிளம்பி வந்து சேர்ற வழியப் பாருங்க. பனையேறிக்கு வேல நெறய கெடக்கு, வர்ட்டா!

பொங்கலோ பொங்கல்!!

Friday, November 9, 2007

'வளவு' இராம.கி அவர்கள் பனைநிலத்துக்கு வருகை

வளவு (http://valavu.blogspot.com) என்ற வலைப்பதிவில் தமிழ் இலக்கிய/சமூகக் கருத்துக்களை அளித்து வரும் நம் அன்புக்குரிய இராம.கி அவர்கள் பனைநிலத்தில் இவ்வார இறுதியைக் கழிக்கவுள்ளார். இவரது வருகையையொட்டி ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி அமையும்.
இடம்: சார்லஸ்டன் பொது நூலகம் (Charleston Public Library, Calhoun Street, Charleston)
நேரம்: சனிக்கிழமை, நவம்பர் 10, பிற்பகல் 2 முதல் 3.30 வரை.

விருப்பமுள்ள அனைவரும் பங்கு பெறலாம். தேநீருக்கும், சிற்றுணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!

Wednesday, October 3, 2007

சார்ல்ஸ்டன் திராட்சை தோட்டம்

வாட்மலாவ் தீவில், 48 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இத்திராட்சைத் தோட்டத்தில் "மஸ்கடைன்" வகை திராட்சை விளைகிறது. இனிப்பு சுவை அதிகமான இவ்வகை பழங்கள், வெதவெதப்பான சீதோஷணம் காரணமாக வட அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளிலேயே அதிகமாக காணப்படுகின்றன. "இர்வின்-கவுஸ் வைன்யார்டு" (Irvin-House Vineyards) சார்ல்ஸ்டனின் ஒரே ஒரு மதுபானம் தயாரிக்கும் சிறுதொழிற்சாலை ஆகும்.

ஐவகை மஸ்கடைன் திராட்சைப் பழங்கள் கொடிகளிள் கொத்துக் கொத்தாக பழுத்து தொங்குவதை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காணலாம். இச்சமயங்களில் நம் விருப்பப்படி பழங்களை பார்க்கவும் ருசிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அறுவடைக்குப் பிறகு பழங்கள் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு இரசாயன முறைகளில் நொதிக்கப்பட்டு, இறுதியில் அனைவரும் விரும்பும் வகையில் அழகான கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு, கடைகளின் கண்ணாடி அலமாரிகளை அலங்கரிக்கின்றது. உயர்தர மக்கள் மட்டுமன்றி அனைத்துவகை மக்களும் மதுபானத்தை அலங்காரக் கோப்பைகளில் நிரப்பி உறிஞ்சும் காட்சி மேலை நாடுகளில் சகஜமான விஷயமாகும்.
தோட்டத்திலிருந்து வெளியேறுகையில் குளம் ஒன்றையும், பண்ணை மிருகங்கள் பலவற்றையும், "ஐரிஷ் மாஸ்" கொடிகள் படர்ந்த ஓக் மரங்களையும் அழகான புல் வெளிகளையும் காணலாம். கடைசியாக பரிசுப் பொருள் விற்கும் கடையில் சுவைப்பதற்கும் சிறிது மது அளிக்கப்படுகிறது. திராட்சை அறுவடைக் காலமான ஆகஸ்ட் மாத இறுதியில் மது தயாரிக்கும் திருவிழா ஒன்று வருடந்தோரும் நடத்தப்படுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த இவ்விழாவின் போது, மரத்தொட்டிகளில் கனிந்த பழங்கள் நிரப்பப்பட்டு, காலால் மிதித்து பழரசத்தை வெளிக்கொணர்ந்து சிறுவர்கள் விளையாடினர். முகத்தில் படம் வரைதல், சோளப்பொறி விற்பனை, மது விற்பனை, பார்-பி-க்யூ, மேற்கத்திய சங்கீதம், பண்ணை மிருகங்களுடன் விளையாடுதல் ஆகியவை இவ்விழாவின் மற்ற முக்கிய பொழுதுபோக்குகளாகும். மது அருந்துவோர் மட்டுமன்றி, அருந்தாதவரும் (திராட்சைகள் சாப்பிட்டு) மகிழ்ச்சியாக சுற்றி வர தோதான இடம். அறுவடை காலத்தில் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு அமைதியான அழகான இடம் இந்த தோட்டம்.
மாயோன் ராதை

Saturday, August 18, 2007

சார்லஸ்டன் போ.வி.த


சார்லஸ்டன் போ.வி.த
எல்லோரும் பூங்கா, அருங்காட்சி, விழா, அது இதுன்னு என்னன்னமோ எழுதுறாங்க.....ம்ம்ம்ம், நம்ம எதையாவது எழுதி வைக்கலாம்னுதான். ஹிஹி..


கொஞ்சம் வித்தியாசமான இடத்துக்கு போய் பார்ப்போமா. அப்பிடியே நம்ம வண்டியில ஏறுங்க! இப்போ நம்ம 26 ஹைவே வழியா போய்க்கிட்டிருக்கோம். அப்பிடியே போனா நார்த் சார்லஸ்டன் கொஞ்சம் கடந்தா விமான நிலையமே வந்துரும்...ஆனா இப்போ 642 ரூட் பாதையிலே டாச்செஸ்டர் பாதையிலே போய்க்கிட்டிருக்கோம்.....ரெண்டே நிமிசம்தான. இதோ வந்திட்டோம், எல்லாம் இறங்குங்க.

நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி.....


விமானங்கள் எலிகள் மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சி....


என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறீங்க....இப்போ நீங்க பார்கிறதுதான் சார்லஸ்டன் போர் விமானப்படை தளம். அதுதான் சார்லஸ்டன் போ.வி.த. அமெரிக்காவிலே பழைய விமான தளங்களில் இதுவும் ஒண்ணு..கிழக்கு அமெரிக்காவிலே முதல் மூணு பெரிய விமான தளத்திலே இதுவும் ஒண்ணு......ஊரிலிருந்து 10 மைல் தள்ளியிருக்கு....கொஞ்ச நஞ்சமில்ல கிட்டத்தட்ட 3700 ஏக்கர் நிலம் இதுக்கு....6000 பேர் வேலை பார்க்கிற இடம் வேற....

அப்பாடி எம்மாம் பெருசு......C17 முன்னே ராணுவ வீரர் வாக்கிங் போறாரோ ?


1931 லே இதுக்கான இடம் வாங்கியிருந்தாலும்.....இரண்டாம் உலகப்போரில தான் 1941 லே சார்லஸ்டனோட புவிதள மதிப்பு தெரிஞ்சு போர்விமான தளத்தை நிர்மாணிச்சாங்க......1951 லதான் இதுக்கு சார்லஸ்டன் ஏர் பேஸ் பேர் வச்சாங்க. இன்னொரு விசயம் என்னான்னா, நம்ம இப்ப பயன்படுத்துகிற பொது விமான ஓடுபாதை ராணுவத்துக்கு சொந்தமாகத்தான் இருந்தது.... 1952 லிருந்து பொதுஜன விமானசேவைக்கும் பகிர்ந்தளிக்க சம்மதிச்சாங்க. இதோட 2007 பட்ஜெட் தெரியுமா..அதிகமில்லை ஜென்டில்மேன், 3.3 பில்லியன் டாலர்...அதாவது 3,300,000,000 டாலர்கள்.....யாரும் உணர்ச்சிவசப்பட்டு போய் உடனே வாங்கிட வேணாம்....அமெரிக்கா கொஞ்சம் பிழைச்சிட்டு போகட்டும்....

சார்லஸ்டன் தொங்குபாலத்தின் மேலே


இங்கே இயங்குகிற முதன்மையான விமானம்னு சொன்னா...C 17 தான்....இந்த ரக போர் விமானம் 585,000 பவுண்ட் எடையோட 500 மைல் வேகத்தில 6000 மைல் தூரத்துக்கு மேல ஒரே மூச்சுல பறக்கும்... இது நவீனமான அதிவிரைவு வீரர்கள் மற்றும் சரக்குகளை போர்ததளத்திறகு கொண்டு சேர்க்கும் விமானமாகவும் பயன்படுத்தலாம்.

விகிமேபியாவின் ஏரியல் வ்யூ http://wikimapia.org/#lat=32.899768&lon=-80.057373&z=15&l=0&m=s&v=2


ராணுவ வீரர்கள் ஈராக் பயணம்....நரகத்தை நோக்கி......


நீங்க இப்ப நிற்கிற இடம்....சார்லஸ்டன் விமானநிலையத்திலிருந்து....நம்ம ஊரு பாஷையில சொல்லனும்னா...நடக்கிற தூரந்தான. அப்பிடியே வடமேற்கு வழியா வந்தா C4 இயங்குதளம் இருக்கும், அதுக்கு வடக்கில நீங்க இப்ப பார்க்கிறீங்களே அதுதான் KC10 எக்ஸ்டெண்டர் பேஸ். அதுக்கும் வடக்கில நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி வரிசையா C17 ஐ நிறுத்தி வச்சிருக்காங்க. அப்பப்ப பொழுது போகலன்னா இங்க இருக்கிற விமானிகள் பயிற்சி பண்றென்னு சொல்லிக்கிட்டு போர் விமானத்தில மின்னல் வேகத்தில ஊர சுத்திப்பாக்க போய்க்கிட்டு இருப்பாங்க..நம்ம காதுக்குதான் பிடிச்சது கேடு!

பாரு பாரு! பரேடு பாரு!!





சார்லஸ்டன் மேலே வட்டமிடும் ராணுவ வல்லூறு





போர் சென்று திரும்பும் அம்மாவை கட்டியணைத்து.....சில ஈரமான நெகிழ்ச்சியான தருணங்கள்






கொசுறு தகவல்


163 நாடுகள்ள அமெரிக்க ராணுவத்தோட 450,925ராணுவ வீரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை பாத்துக்கிட்டிருக்காங்க. உள்நாட்டையும் சேர்த்து மொத்தம் 1.3 மில்லியன் பேர்.


நம்மூரு சார்லஸ்டன்ல அமெரிக்க அதிபர் புஷ் பேசியது....




அமெரிக்க விமானபடை பற்றிய மேலும் சில சுவராசியமான வீடியோக்கள்......






சார்லஸ்டன் போர் விமானதளம் பற்றிய வீடியோ













....கந்தன் - வள்ளி....

check my blog http://blogsenthil.blogspot.com/

http://senthil-senthil.tripod.com/


--------------------------------------------------------------
படங்கள் நன்றி http://public.charleston.amc.af.mil/
விடியோ உதவி youtube.com

இவை பாதுகாக்கப்பட்ட தளங்கள். இந்த ராணுவ தளங்கள் நுழைவிற்கு சிறப்பு அனுமதி தேவை.







.


Tuesday, August 7, 2007

சார்லஸ்டனில் கோடைத் திருவிழா


கோலாகலமான கோடை விழா...!!! சார்லஸ்டனிலா...???

பனைநிலத் தமிழ் சங்கம் தென்கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் தனது நான்காவது கோடை விழாவினை 22-7-2007 அன்று இனிதாக கொண்டாடியிருக்கிறது.

சார்லஸ்டன் மாவட்ட பால்மடோ பூங்காவில் முழுநாள் விழாவாக கொண்டாடப்பட்ட இத்திருநாளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நாதஸ்வர இசையும், கோலமிட்ட பந்தலும், ஆச்சரியத்தில் ஆழ்த்த, நண்பர்கள் கையசைத்து, வாழ்த்துக்கள் கூறி, புன்னகையுடன் வரவேற்றது, நாம் அயல்நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியது. நண்பர்களும் தன்னார்வத் தொண்டர்களும் சிறு சிறு குழுக்களாய் மாறி விழாவிற்கான பணிகளில் ஈடுபட, பந்தலின் முகப்பில் தோரணங்கட்டுதலும், ஒலிபெருக்கு சாதனங்களை சீரமைத்தலும், அனல் மூட்டி சோளங்களை வேகவைத்தலும், நண்பர்கள் கொண்டுவரும் மதிய உணவுப் பண்டங்களை பதப்படுத்துதலுமான வேலைகள் சீராக நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் சிறுவர்களின் சிறு சிறு விளையாட்டுத் துள்ளல்களும், குழந்தைகளின் சிணுங்கல்களும், குடும்பப் பெண்களின் சுய புராணங்களும், நண்பர்களின் அரட்டையுமாய், காலை நேர ஆரவாரம், நம்ம ஊர் திருவிழாவினை நினைவுபடுத்தியது. பதினொரு மணியளவில் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிபரப்பு வரவும், சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் ஆர்வத்தோடு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழையும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.


விளையாட்டுப் போட்டிகளினால் களைத்திருந்தவர்களுக்கு ஆவி பறக்கும், சுவைமிகு உணவு வகைகள் மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்தது. சைவ உணவு வகைகள் ஒருபுறமும், அசையா அசைவங்கள் மறுபுறமும், நாசியை மட்டுமின்றி, நாவையும் சப்பு கொட்டி அசைக்கச்செய்தன. சாத வகைகளில், எலுமிச்சை, தக்காளி, புளிசோறு, காய்கறிசோறு, கூட்டு, பொரியல், சிப்ஸ் முதலியவும், கறிக்குழம்பு, வறுவல், சாப்ஸ் என்று அசைவ வகைகளும், தாகத்தை தணிக்க, திராட்சை, முழாம்பழ, மாம்பழ முதலிய பழச்சாறுகளும், சோடா, பெப்சி, கோலா வகை சாறுகளும் பரிமாறப்பட்டன. இவை அத்தனையும் சுவை பார்த்து, உண்டு, வயிற்றில் இடம் பத்தாமல் தவித்து புலம்பியவர்கள் நிறைய பேர் உண்டு.



உண்ட களைப்புடன் இருந்தவர்களுக்கு, தமிழ் ஆர்வலர்களின் செய்திக் குறிப்புகளும், எண்ண வெளிப்பாடுகளும், பெட்டிச்செய்திகளாக வெளியிடப்பட்ட போஸ்டர்கள் இளைப்பாறச் செய்தன. சார்லஸ்டனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களையும், தோட்டங்களையும், இயற்கை அழகை வர்ணித்த செய்திகளும், நமது நகரம் இவ்வளவு அழகா..? என பிரம்மிப்பூட்டும் வண்ணப்படங்களும், கண்களுக்கு விருந்து படைத்தன. அதுமட்டுமல்லாமல் தமிழில் இணைதளம் துவக்க ஆவலாக இருக்கும் நண்பர்களுக்கு உதவும் வகையில் எளிய நடையில் இணைதள உருவாக்கம் பற்றிய கருத்துக்களும், செய்திகளும், பல தமிழர்களை யோசிக்கவும், அதுபற்றி கலந்துரையாடவும் செய்தன.

மதிய உணவு முடிந்து இளைப்பாறிய பின், பனைநிலத் தமிழ் சங்க அலுவல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் " என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையவர்களின் தமிழ் தாய் வாழ்த்துடன் துவக்கப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும், சங்கத்தின் சாதனைகள் பற்றியும் சங்கத் தலைவர் பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்.

தென்கரோலினா மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட லாபநோக்கமற்ற சங்கமாகவும், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் பதிவு பெற்ற சங்கமாகவும் மாறிய நடவடிக்கைகளை கூறினார். பின்னர் சங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட விழாக்களையும் அதன் நோக்கங்களையும் எடுத்துரைத்தார். பலரது கைத்தட்டல்களுடன் தனதுரையை முடித்துக்கொண்ட தலைவர், சிறப்பு விருந்தினராக கோடைவிழாவிற்கு அழைக்கப்பட்ட திரு.முல்லை நடவரசு அவர்களை அழைத்தார்.





வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆண்டு விழாவில் பட்டிமன்ற நடுவராக பங்கேற்க வந்திருந்த திரு. முல்லை அவர்களை பனைநில கோடை விழாவிற்கு அழைத்து வந்த பெருமை செயலாளரையும், இணை செயலாளரையும் சேரும். பல கைத்தட்டலுடன் ஆரம்ப முதலே முல்லையின் வாசம், விழா முழுக்க வீசத் துவங்கியது என்றே சொல்ல வேண்டும்.




தமிழர் மனங்களில் நீங்கா இடம் பெற்றது பழைய பாடல்களா, புதிய பாடல்களா..? என்ற தலைப்புடன் பேசத்துவங்கிய திரு முல்லை, செவிகளில் தேன் மழை பரப்பி தமிழர் மனங்களை தன் பேச்சினாலும், பாடல்களினாலும் பரவசப்படுத்தினார். முத்தமிழில் இசைத்தமிழின் முக்கியத்துவத்தை முத்துக்களாக தொகுத்து, பழைய பாடல்களின் சிறப்பையும், புதிய பாடல்களிலுள்ள தமிழர் நாகரீகச் சிதைப்புக்களையும் சுட்டிக்காட்டி, களைய வேண்டிய வேற்றுமைகளே, புதிய பாடல்களை மனதில் ஒட்டாமல் செய்கிறது என தெளிவு படுத்தினார்.



மதிய விருந்தினால் பாதி மயக்கத்துடன் இருந்தவர்களுக்கு, மாலை நேரத்து முல்லையின் மணமும், மயக்கமும் தமிழர்களை சங்க காலத்திற்கே கொண்டு சென்றது என்று சொல்லப்படவேண்டும். பலத்த கைத்தட்டலும் விசிலுமாய் சிறப்புரை முடிந்த நிலையில் முல்லைக்கு நன்றியும் பாரட்டுதலும் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் அடுத்த நடவடிக்கையாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. பனைநில செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, நடத்தப்பட்ட தேர்தலில் புதிய அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பதவியேற்ற பின், பழைய நிர்வாகிகளை பாராட்டியும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.



சார்லஸ்டனில் குடியேறிய புதிய தமிழர்களையும், சங்கத்தின் புதிய உறுப்பினர்களையும், இவ்வுலகத்தில் புதிதாய் பிறந்த உறுப்பினர்களின் குழந்தைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கைத்தட்டி வரவேற்கப்பட்ட புதியவர்கள், தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாங்கள் வந்திருக்கும் நோக்கத்தையும் தெரியப்படுத்தினர். சங்க உறுப்பினர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்காக திரு. முல்லை, உறுப்பினர்களை அழைத்து பாடச்செய்தார்.


சிறுவர்கள் பாட்டுக்கள் பாடியும், திருக்குறள் ஒப்பித்தும் தங்கள் தமிழார்வத்தினையும், கலைத்திறனையும் வெளிப்படுத்தினார்கள். சங்கத்தின் புதிய தலைவர், பனைநில சங்க எதிர்கால செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.




நிறைவாக சங்கத்தின் செயலாளர், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிதனை தெரிவித்து, மீண்டும் பொங்கல் விழாவில் சந்திக்கும் வரை இப்பனைநில கோடை விழா நீங்காத நினைவாக, நீடித்த கனவாக நினைவில் நிற்குமாறு வாழ்த்தி விடை பெற்றுக்கொண்டார். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடிய விழா உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் பிரியா விடை பெற்று, எதிர் நோக்கும் பொங்கல் விழா விரைவில் வருமாறு மனம் விழைய, மகிழ்ச்சியான தருணங்களையும், வாய் விட்டு சிரித்த நிகழ்ச்சிகளையும் அசைபோட்டவாறு தங்களது நாளைய கடமைகளை நினைவில் கொண்டு, வீடு செல்ல புறப்பட்டு சென்றனர். சங்க செயற்குழு உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர், பாராட்டியும், நன்றி தெரிவித்தும், விழாவினை வெற்றிகரமாக நிறைவு செய்த பெருமையில், பொறுப்புக்களை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்து,





சங்கத்தின் அடுத்த விழாவான பொங்கல் விழா மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கூறினர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.


- என்ற பாரதியாரின் பாட்டு காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க, வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் சத்தமும் தமிழிசையாய் மாறவும், சுற்றுப்புறம் இருள் போர்வைக்குள் நுழைந்து கொண்டிருப்பதே மறந்து போனது.

அந்தி வானமும், சாயுங்காலமாய், பால்மடோ பூங்கா தனது சரித்திரத்தில் மீண்டும் ஒரு மைல்கல்லை சந்தித்துவிட்டபெருமையில், சங்க உறுப்பினர்களை, கையசைத்து, வழியனுப்பி வைத்து, சிறு சிறு தாவரங்களுடனும், மரங்களுடனும் சில்லென்ற காற்றில் தம்மையே ஒருமுறை சிலிர்த்துக்கொண்டது, இன்னும் பலருக்கு நீங்காத கனவாகவே இருக்கிறது.
...

---


வையம்-மனம்