Showing posts with label பேரவை. Show all posts
Showing posts with label பேரவை. Show all posts

Sunday, July 18, 2010

பேரவை விழாவில் முத்திரை பதித்த பனைநிலம்

கனெக்டிகட்டில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழாவில் நம் சங்கத்தின் சார்பில் சுமார் 15 பேர் கலந்துகொண்டோம். சுமார் 2000 பேர் வந்திருந்த விழாவில் இந்தப் பதினைந்து பேர் குழு பதித்த முத்திரை பலமானது, நம் சங்கத்துக்குப் பெயர் சேர்த்தது! முதல் நாள் நிகழ்ச்சியில் நம் சங்கம் நிகழ்த்திய "யார் தமிழர்" தெருக்கூத்து நடைபெற்றது. இதன் முழு வசனம் மற்றும் பாடல்களை வேண்டுவோர் பனைநிலத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நம் கலை இளவரசன் வருவதாக இருந்து பிறகு வரவியலாமல் போனது மாபெரும் வருத்தமென்றாலும், ஒருவாறு சமாளித்துவிட்டோம். ஹரியும், சந்தோஷும் ஒரு புறம் நின்று எடக்கு மடக்காகக் கேள்விகளைப் பாடியும், குத்தாட்டம் ஆடியும் கேட்டுக் கொண்டிருக்க அதற்குத் தக்க பதில்களை சூரியன், சுந்தரவடிவேல் மற்றும் அசத்தல் நடிகர் தாமரையாரும் பதில் சொல்ல, நடுவே வந்து இளங்கோ, சிபி, மாசிலன், நெல்லி மற்றும் ராஜசேகர் ஆகியோர் தம் பங்குக்குக் கலக்கிச் செல்ல, பிறகு பறை இசையும், பாடல்களுமாய்த் தெருக்கூத்து முடிந்தது. மேடையின் பின்னேயிருந்து எங்களை உற்சாகப்படுத்திய முனைவர் தண்டபானி மற்றும் ஜானகிக்கு எங்கள் நன்றிகள். இத் தெருக்கூத்தின் ஆக்கத்திலும், வெற்றியிலும், இதில் நடித்த அத்தனை பேருக்கும், பார்த்துக் கருத்துக்களைக் கூறிய அத்தனை நண்பர்களுக்கும் பங்குண்டு. அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல! இன்னும் சற்று நேரம் பறையடித்திருக்கலாம் என்ற ஒரு சிறு குறை கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருந்தது. அக்குறையினை அடுத்து வந்த இரு நாட்களிலும் தீர்த்துவிட்டோம். எப்படி என்கிறீர்களா? Boycott Sri Lanka என்றொரு சிறு கடையை USTPAC அங்கே வைத்திருந்தது. அங்கே Boycott Sri Lanka என்று அச்சடித்த சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டோம். அக்கடையின் நண்பரைக் கொஞ்சம் சட்டைகளையும் காரொட்டிகளையும் (bumper stickers) எடுத்துவரச் சொன்னோம். நாங்கள் பறையடிக்க, அவர் தெருவில் கூவிக் கூவிச் சட்டைகளை விற்க மக்கள் அனைவரையும் அது கவர்ந்தது. கடையில் சென்று சட்டையை வாங்க முன்வராத பலரும் கேட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அப்படியே அடித்துக் கொண்டே உணவருந்துமிடத்தையும் ஒருமுறை சுற்றி வந்தோம். இறுதியில் USTPAC நண்பர் தழுவிக் கொண்டார். பறையொலியில் வாட்டர்பரியின் தெருக்கள் துள்ளின. கடந்து சென்றவர்கள் திரும்பிப் பார்த்தனர். நின்றவர்கள் சற்றே ஆடினர். ஆடியவர்களுக்கு மேலும் பரவசம். சிலர் பறையைத் தொட்டனர், சிலர் அடித்துப் பார்க்கலாமா என்றனர். தமிழர்களின் ஆதி இசையான பறை, தொல்காப்பியத்திலும் சொல்லப் படுவது. ஒரு சிறு கருவி இத்தனை உள்ளங்களையும் ஆட்டுவிப்பதால்தான் அது இத்தனைக் காலங்களையும் கடந்து வாழ்கிறது. முதல் நாளன்றே அமைப்பாளர்களில் ஒருவர் வந்து, நாளை மதுரைவீரன் தெருக்கூத்து நடக்கப் போகிறது, அதிலே மதுரைவீரனை ஊர்வலமாக அழைத்துவரும் ஒரு காட்சி வரும். அதிலே உங்கள் குழு பறையடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது ஒரு பெரும் அங்கீகாரமாக எமக்குப் பட்டது.

நம் சங்கத்தினர் பலரும் கலந்துகொண்ட மற்றொரு நிகழ்வு 'இலக்கிய வினாடி வினா'. இது பலருக்கும் புதிய இலக்கியச் செய்திகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்தப் பல்லூடக நிகழ்ச்சி அனைவரையும் ஆவலோடு அமர்ந்து பார்க்க வைக்கும் சுவை மிகுந்தது. இவ்வாண்டு வீ.ப.கா. சுந்தரம் அணி மற்றும் விபுலானந்தர் அணி என்ற இரு அணிகள் இருந்தன. கடுமையான போட்டியில் விபுலானந்தர் அணி வென்றது. இருப்பினும் நிகழ்ச்சியில் யாரோ குறிப்பிட்டது போல, யார் வென்றாலும் வெற்றி தமிழுக்கே என்பது பொருத்தமாகத் தோன்றியது. குழந்தைகள் திருக்குறள் போட்டி, தமிழ்த் தேனீ வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்தினை முனைவர் தண்டபானி அவர்கள் நிகழ்த்தினார்கள். நிறைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களைப் பார்க்க முடிந்தது. அடுத்த ஆண்டு இன்னும் பலரும் வருவார்கள் எனத் தோன்றுகிறது.

அடுத்த நாள் மதுரைவீரன் தெருக்கூத்து! நாங்கள் பறையை எப்போது எப்படி அடிக்க வேண்டும் என ஒத்திகை பார்க்க ஒத்திகைக் கூடத்துக்குச் சென்றோம். அங்கே குழந்தைகள், ஆடவர், பெண்டிர் என ஒரு பெரும் குழு ஊர்வலத்தில் ஆடிக் கொண்டு செல்லத் தம்மைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குப் பறையிசையினைக் கேட்டவுடனேயே துள்ளல். அனைவரும் ஆடிக் களித்தனர். நியூஜெர்சியிலிருந்து செல்வன் என்றொரு நண்பர் வந்திருந்து பறையினை எங்களோடு இணைந்துகொண்டு அடித்தார். அவர் ஒரு அருமையான இசைஞர். ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு ஒத்திகைக் கூடத்துக்கு வந்த இளையோர் சங்கத்தினர் ஒரு பதினைந்து பேர் பறையிசைக்கச் சொல்லிக் கேட்டு ஆடி மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் இசைக்கவும் ஆர்வம் காட்டினர். இளையோர்களிடத்தில் இவ்விசைக்கு இருக்கும் பெருமதிப்பையும், ஆர்வத்தையும் உணர முடிந்தது. அடுத்த ஆண்டு அவர்களுக்காகத் தனியாக ஒரு நடனத்துக்கு இசைப்போம் என்று கூறிவந்திருக்கிறோம்.

மதுரைவீரன் தெருக்கூத்து அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. நடிகர்களின் வேடமும், துள்ளலும், சுழற்சியும், வசனங்களும், பாடல்களும் காண்பவரை இழுத்தன. சிலருக்குப் புதுமை. சிலருக்கு அந்தக் கால நினைவுகள். குழந்தையாக இருந்த மதுரைவீரன் பெரியவனாகி மேடையிலே தோன்றவேண்டும். அப்போது மேடையின் பின்புறத்தே இருந்து தோன்றாமல், பார்வையாளர்களின் கடைசி வரிசையிருக்கும் வாசல் வழியாக வருவதாக ஏற்பாடு. அங்குதான் நம் பறையும் காத்திருக்கிறது. 'இதோ வருகிறார் மதுரைவீரன்' என்று மேடையிலே வசனம் வந்ததும், அதிர ஆரம்பித்தது பறை. மேடையைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் மொத்தமும் பின்னே திரும்பியது. மதுரைவீரன் வேடத்தோடு நின்று ஆட, முன்னே பறையும், தவிலும் ஒலிக்க, கூட்டம் ஆட அது ஒரு பெரும் ஊர்வலத்தைக் கண் முன் நிறுத்தியது. பார்வையாளர்களில் பலரும் ஆடுவதற்கு ஓடி வந்தனர். அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கிடையில் மேடையிலே ஒரு அம்மாவுக்குச் சாமி வந்துவிட்டது (அல்லது அப்படி ஆடினார்!). ஒருவாறாகக் கூட்டத்தைக் கடந்து மதுரைவீரனை மேடையில் ஏற்றிவிட்டோம் நாங்கள் இறங்கிக் கொள்ளக் கூத்து தொடர்ந்தது.

அதன் பிறகு இன்னிசை நிகழ்ச்சிக்கு நடுவே அடுத்த ஆண்டு பேரவை விழாவுக்கு நம் பனைநிலம் தமிழ்ச் சங்கத்துக்கு அனைவரையும் வரவேற்பதற்காக நம் சங்கத்தின் சார்பாகச் சென்றிருந்தவர்கள் மேடையேறினோம். பறையோடுதான். அடுத்த ஆண்டு பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவையின் புதிய துணைத்தலைவருமான முனைவர் தண்டபானி அவர்கள் சுருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் நமது அழைப்பிதழை விடுத்தார். வணக்கம் கூறி மேடையிலிருந்து அகல முயன்றோம். கூட்டம் விடவில்லை, மேளம், பறை என்று குரலெழுப்ப மறுபடியும் ஒரு முழக்குப் போட்டுவிட்டுத்தான் இறங்கினோம்!

பல சங்கங்களிலிருந்து வந்திருந்த நண்பர்களும், புதிதாய்க் கிடைத்த நண்பர்களும் நம்மூர்த் திருவிழாவுக்கு வரவும், நம்முடன் சேர்ந்து இவ்விழாவை ஒழுங்கு செய்யவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஒரு சிறந்த விழாவைக் கண்டு களித்த மனநிறைவோடும், நம் பனைநிலத்தின் முத்திரையை அவ்விழாவில் பதித்த பெருமிதத்தோடும், சீரும் சிறப்புமாக நம்மூர் விழா நடந்தேறும் என்ற உறுதியோடும் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்துக்கும், பேரவைக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினோம்!

முக்கியமான பின் குறிப்பு: வரும் ஆகஸ்டு 8ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை பனைநிலத்தின் கோடை விழா நிகழ இருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். இவ்விழாவின்போது வரும் பேரவை விழாவினைச் சிறப்பாக நடத்துதற்குரிய திட்டக் கூட்டமும் நிகழும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.                               ========================================================================எழுதியவர்: பனையேறி (கண்ணன் வராததால் படங்கள் இல்லை :))

Saturday, July 18, 2009

FeTNA 2009ல் நாங்கள் கட்டிய கூத்து

பேரவை விழான்னாலே எங்க ஊருலேருந்து ஒரு பதினஞ்சு, இருபது பேரு போறது வழக்கமுங்க. போன வருசம், அதுக்கு முந்தின வருசமெல்லாம் ஏதோ இந்தச் சின்னப் பிள்ளைகளைப் பாட வச்சு, ஆட வச்சு தமிழை வளத்தோமுங்க. சின்ன சங்கமுன்னாலும் எதையாச்சும் வித்தியாசமா செஞ்சுகிட்டே இருக்க கொணம் எங்க சங்கத்து ஆளுகளுக்கு இருக்குங்க. அதான் இந்த வருசம் எதையாச்சும் வித்தியாசமாச் செய்யணுமுன்னு நெனச்சமுங்க. அந்த நேரத்துலத்துலதான் ஒலகத் தமிழினத்துக்கு இடி விழுந்த மாதிரியான நேரம். ஈழத்துத் தாக்கத்தையே நடிக்கிறதுன்னு முடிவெடுத்தோம். ஒரு இருபது பேரு கூடுனோம். விழா மலர்ல 'தேவகி செல்வன், பரணி இடைக்காடர், பெரியண்ணன் சந்திரசேகரன்' எல்லாரும் தொகுத்திருந்த கேள்வி பதிலையே கதையோட கருவா வச்சிக்கிட்டோமுங்க. அதே வசனம் கூத்துல வருமுங்க. பாத்தீங்கன்னா தெரியும். வெளங்காத ஒருத்தரு கேள்வி கேப்பாரு, இன்னொருத்தரு பதில் குடுப்பாரு. பதில் சொல்லுறப்பவே அதப் பத்திப் பின்னாடி அந்தக் காட்சி விரியும். இதான் கூத்தோட வடிவமுங்க.

ரெண்டு வாரம் பயிற்சி எடுத்திருப்போம். அந்த ரெண்டு வாரமும் பாத்தீங்கன்னா, தினமும் கதையோட வசனம் மாறும். காட்சி மாறும். கடைசி நாள் வரைக்கும் மாறிக்கிட்டே இருந்துச்சுன்னா பாத்துக்கங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது. நடிச்ச ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு "யோசனை யோகராசா"வாக மாறி எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதுவும் நல்லதுக்குத்தான். எல்லாம் சேர்ந்துதான் கூத்தை நல்லா இருக்கும்படி வச்சிச்சு. தம்பி இளவரசன் அற்புதமாப் பேசுனதை நீங்களே பாத்துக்கங்க. அப்புறம் மணி ஐயாவோட குரலும் நடிப்பும் அருமை. யாருமே 'நடிக்கலை'ங்கறதுதான் இன்னொரு சிறப்பு. கூத்து முடிஞ்சு வெளியில வரும்போது மேக்கப் ரூமுல இருந்து அடுத்த நிகழ்ச்சிக்காகத் தயார் செஞ்சுக்கிட்டிருந்தவங்க கட்டிப் புடிச்சு அழ ஆரம்பிச்சுட்டாங்க. எத்தனை பேரு கலங்கின கண்ணோட எங்களைப் பாத்து நன்றி சொன்னாங்கன்னு நெனப்பில்ல. பேரவை விழா நடந்த அந்த மூன்று நாட்களும், யாராவது ஒருத்தர் எங்கக் குழு ஆள் யார்கிட்டயாச்சும் கூத்தைப் பத்திப் பேசிக்கிட்டே இருந்தாங்க.

இலங்கை இனப்பிரச்சினையின் அத்தனை அம்சங்களையும் சொல்லிவிட இருபது நிமிடங்கள் போதாது. ஆனால் ஓரளவுக்கு ஒரு அறிமுகத்தை, அறியாதவங்களுக்கு ஒரு செய்தியைச் சொன்னோம்ங்கற திருப்தி எங்களுக்கு இருந்திச்சு. தமிழங்களோட துக்கத்துல தமிழங்களே பங்கெடுக்கலைன்னா எப்படிங்க. நம்ம மேல திணிக்கப்பட்டிருக்க அடக்குமுறையை நாமளே மறைக்கலாமா? அதான் அந்தத் தெருக்கூத்து. ஏற்கெனவே பனைநிலத்தோட ஒளிப்படத்தைப் பார்த்திருப்பீங்க. அப்படி இல்லன்னா, பாத்துட்டுப் போங்க. பாத்துட்டு நண்பர்களுக்கும் அனுப்புங்க. யாரோ சொன்னாங்க, ஜூனியர் விகடன் பத்திரிகையில இதப் பத்தி வந்திருக்குன்னு. போயிப் பார்த்தா, படம் போட்டு "மகிந்தவைக் கிண்டலடித்து நாடகம்" அப்படின்னு படத்துக்குள்ள ஒரு வரி. பகீர்னு இருந்துச்சு. என்னடா அந்தப் பத்திரிகைக் காரங்க, நாடகத்தைப் பார்த்தபிறகுதான் எழுதினாங்களா, இல்ல நியூயார்க் அப்பார்ட்மெண்டு கதவைப் பூட்டிக்கிட்டு கனவு எதுனா கண்டு எழுதினாங்களான்னு தெரியல. ஏங்க, கிண்டலடிக்கப்படுறதுக்கும் ஒரு தகுதி வேணாமா? படத்தைப் பாத்த பிறகு நீங்களே சொல்லுங்க, இது மகிந்தவைக் கிண்டலடிக்கிற நாடகமா இல்ல, மக்களோட போராட்டத்தைப் பத்தின நாடகமான்னு. எந்த ஊடக தர்மத்தைக் கேள்வி கேட்டோமோ, அந்த ஊடக தர்மம் கேலிக்கூத்தானது ஜூனியர் விகடன் கட்டுரையில தெரியுமுங்க.

பெருமைக்காகச் சொல்லலீங்க. இதுல நடிச்ச அம்புட்டு பேரும் முனைவருங்க. அதான் டாக்டருங்க. இவுங்க ரெண்டு வாரம் பாடுபட்டாலே இப்படி ஒரு அருமையான கூத்தைக் கட்ட முடியுதுங்க. நீங்களும் ஏனுங்க முயற்சி செய்யக் கூடாது? எவ்வளவோ சொத்தை, கடி நாடகமெல்லாம் பார்க்கிறோமுங்க. அதை எல்லாம் பாத்துட்டு வயித்துலயும், வாயிலயும் அடிச்சுக்குறோம். ஏன் மாறமாட்டேங்குறாங்கன்னு கேக்குறோம். ஆனா, மாற்றம் அப்படிங்கறது நம்மகிட்டேயிருந்துதானுங்க பொறக்கணும். நீங்களே நாடகம் போடுங்க. கூத்து கட்டுங்க. கைதட்ட ஆளுங்க இருப்பாங்க. உணர்வு இருக்கவங்க இன்னும் உயிரோடதான் இருக்காங்க. உங்களுக்குப் பிடிச்ச கதையை, நீங்க மக்களுக்குச் சொல்ல நினைச்ச கதையை நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. முயற்சி செய்யுங்க. வாழ்த்துக்கள்!

கூத்துக் கட்டின அன்புக் கலைஞர்கள்: இன்பன், மணி ஐயா, இளவரசன், யசோதை, சுபத்திரை, இளையோன், அரிநாதர், பத்து, உதயன், பகலவன், சிபிச்சக்கரவர்த்தி, மாசிலாமணி, பனையேறி, திருமதி பனையேறி, நெல்லி, யாழிசை, பிரியம் மற்றும் உதவிய, ஆலோசனைகளை வழங்கிய வளர் அக்கா, தண்டபானி ஐயா ஆகியோர். இப்படத்தை எடுத்தவர் அன்பிற்குரிய நண்பர் அண்ணாதுரை.

ஒளிப்படம்:




எழுதியவர்: பனையேறி