Showing posts with label charleston. Show all posts
Showing posts with label charleston. Show all posts

Wednesday, November 10, 2010

Charleston, S.C. Named Friendliest City in America: அட! நம்மூரு!

எங்க ஊரு ரொம்ப நட்பான ஊரு, அதாங்க ப்ரெண்ட்லியான ஊருன்னு மறுபடியும் பேரு வாங்கியிருக்குங்கோ! செய்தியை இங்க பாருங்க:  எங்க ஊருக்கு இதெல்லாம் சாதாரணமுங்க! இங்க வந்து பாருங்க, அப்ப தெரியும் நாங்க எம்புட்டு பாசக்கார பயபுள்ளங்ய அப்படின்னு! அப்ப, பெட்னா 2011க்கு உங்களை நம்ம ஊருல பாக்கலாம்னு சொல்லுங்க!

Sunday, October 31, 2010

பேரவைத் திருவிழா 2011 - ஏற்பாடுகள் - தொடக்கக் கூட்டம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 24ஆவது ஆண்டுவிழாவினை நடத்தும் இனிய பொறுப்பினை, பேரவை எங்களது பனைநிலத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்திருக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குன்றாது என்பதனைப் போல, சிறிய சங்கமாக இருந்தாலும் எங்களது ஒற்றுமையையும், செயலூக்கத்தையும் முன்வைத்து எங்களது தமிழ்ச் சங்கத்தை இப்பணிக்காகத் தேர்ந்தெடுப்பதாகப் பேரவை தெரிவித்திருந்தது. இது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்தி. விழாவுக்கு இன்னும் 7-8 மாதங்கள் உள்ள நிலையில் நேற்று ஒரு கூட்டத்திற்கு எங்கள் தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்திருந்தது. இக்கூட்டமானது, இதுவரை செய்யப்பட்ட வேலைகள் மற்றும் இனிவரும் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கான கூட்டமாகும். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளப் பேரவையின் முன்னாள் தலைவர், இந்நாள் தலைவர், அகஸ்டா, கொலம்பியா, சார்லெட், ராலே, கிரீன்வில் மற்றும் மினசோட்டா ஆகிய தமிழ்ச் சங்கங்களைச் சார்ந்த நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள். 

அறிமுகப் படலம்
விழாவானது மதியவுணவுடன் தொடங்க ஏற்பாடாகியிருந்தது. பெரும்பாலான உணவுகளை நண்பர்களே தயாரித்திருந்தாலும், சிலவற்றை உள்ளூர் உணவகத்திலிருந்து ஏற்பாடு செய்திருந்தோம். அது வருவதற்குச் சற்றே தாமதமானதால் வந்திருந்தோர் அனைவரையும் மேடைக்கு வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டினோம். ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து சுருக்கமாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டது காண்பதற்கு இனிமையாக இருந்தது. ஒவ்வொருவரும் வரும்போதும், பேசும்போதும், செல்லும்போதும் நகைச்சுவையோ, பெருமிதமோ, மகிழ்வோ, புதுமையோ ஏதோவொன்று அந்த அரங்கில் ததும்பியதைக் காணமுடிந்தது. சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்த உணவகத்துக்காரர் காரை சற்றே விரைவாக ஓட்டிவிட்டார்போலிருக்கிறது. அவரைக் காவலரொருவர் நிறுத்தி டிக்கட்டைக் (தண்டம்) கொடுத்து அனுப்பிவிட்டாரென்று செய்தி வந்தது. கிடைத்த இடைவெளியை நிரப்ப யுவா வந்து இரண்டு பாடல்களைப் பாடினார். பிறகு நண்பர் பழமைபேசி தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிச் சிலநேரம் உரையாற்றினார். வலைப்பதிவுகளின் தேவைகளைக் குறித்து அறிந்துகொள்ள இச்சிற்றுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நேரத்திலேயே உணவும் வந்துவிட விருந்து தொடங்கியது. அறுசுவை உண்டி அருமையாயிருந்தது. கண்ணன் ஆர்வம் பொங்க, தனது புகைப்படப் பெட்டியில் லென்சுகளை மாற்றி மாற்றிப் போட்டுப் படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். 

கூட்ட நிகழ்வுகள்
தமிழ்த்தாய் வாழ்த்துடனும், அனைவருக்குமான வரவேற்புடனும் கூட்டத்தினை பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் ஆனந்தி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பேரவை விழா 2011க்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபானி குப்புசாமி அடுத்து வந்து விழாவுக்காக எங்களது தமிழ்ச்சங்கம் செய்து முடித்திருக்கும் பணிகளையும், இனி செய்யவேண்டிய பணிகளையும் எடுத்துரைத்தார். அப்பணிகளின் மேல் விபரங்களை முனைவர் சுந்தரவடிவேல், திரு நதீம் பாஷா, மருத்துவர் அன்புக்கரசி ஆகியோர் தொகுத்தளித்தனர். இதுவரை தொடங்கப்பட்டுள்ள பணிகள்: 

அரங்கம்: நமது விழா ஜூலை 1 முதல் ஜூலை 4 வரை நடக்கப் போகிறது. விழாவுக்கான அரங்கமாக கில்யார்டு அரங்கம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2700 பேர் அமரக்கூடிய அரங்கினை நிரப்புவது நம் குறிக்கோள். இந்த விழா நடப்பதற்கான அனைத்து வசதிகளுடனும் சார்லஸ்டன் மைய நகரில் அமைந்திருக்கும் அழகிய அரங்கம் இது. 

நட்சத்திர மாலை நடக்குமிடம்: புகழ்பெற்ற தென்கரோலினா மீனகம். ஜூலை 1, 2011 மாலை 6-11  மணியளவில் இங்குதான் கொடையாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் வரவேற்பு நடக்கவுள்ளது. 

சமையலகம் மற்றும் உணவு ஏற்பாடுகள்:
சார்லஸ்டனில் உள்ள டுவால் என்ற புகழ்வாய்ந்த நிறுவனம். இவர்கள் நாம் தேர்ந்தெடுக்கவிருக்கும் பாரம்பரிய தென்னிந்திய உணவகத்துடன் இணைந்து உணவு ஏற்பாடுகளைச் செய்வார்கள். 

வாணிகக் கண்காட்சி:
அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து பல்வேறு வாணிக நிறுவனங்களை வரவழைத்து ஒன்றுகூட்டி, வாணிக உறவுகளை மேம்படுத்தும் ஒரு முயற்சி. முனைவர் விஸ்வநாதன் மற்றும் திரு நதீம் பாஷா இருவரது உழைப்பாலும் மெருகேறி வருகிறது. 

தொடர்மருத்துவக் கல்வி: இது தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்துடன், பேரவை இணைந்து நடத்தும் ஒரு மருத்துவக் கல்வி நிகழ்ச்சி. பெரும்பாலான மருத்துவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சி. இதில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைப் பேரவையின் சார்பில் மருத்துவர் குப்தாவும், நமது தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மருத்துவர் அன்புக்கரசியும் ஒழுங்கு செய்கிறார்கள். வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களைப் பற்றிய கருத்தரங்கமாக இது இருக்கும்.

ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபானி அவர்கள், பல்வேறு விழா ஏற்பாட்டுக் குழுக்களிலும் நமது சங்கத்தவர்களும், அண்டைய தமிழ்ச் சங்கத்தின் நண்பர்களும் முன்வந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினார். 

அடுத்ததாக பேரவையின் தலைவர் முனைவர் பழனி சுந்தரம் உரையாற்றினார். அவர் பேரவையின் வரலாறு, இதுவரை நிகழ்ந்த விழாக்களிலிருந்து கற்ற பாடங்கள், கவனமாக இருக்க வேண்டிய இடங்கள், நிதி நிலை பற்றிய விழிப்புணர்வு, பேரவை விழாக்களின் சிறப்பம்சம் ஆகியன குறித்து விரிவாக உரையாற்றினார். இவரது உரை பலருக்கும் பேரவையினைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள உதவியது. 

பிறகு பேச வந்தவர் பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா. செயல்வீரர் என்று புகழப்படுபவர். இவர் பேசியது ஐந்து மணித்துளிகளேயானாலும், தான் சொல்ல வந்ததை அழுத்தமாகப் பதியவைத்துவிட்டுச் சென்றார். மொழிக்காகவும், இனத்துக்காகவும், மனிதவுரிமைக்காகவும் நம் உழைப்பும், நேரமும், நிதியும் பயன்படுதலே நம் வாழ்விற்கு நிறைவையும், அழகையும், அர்த்தத்தையும் தரும் என்பது இவர் சொன்ன செய்தியாக இருந்தது.

நிதி திரட்டல்

பேரவை விழாவுக்கு நிதி திரட்டுதலும் இக்கூட்டத்தில்தான் தொடங்கியது. கொடையினை முனைவர் முத்துவேல் செல்லையா முதலில் வழங்க, பலரும் வள்ளல், கொடை வள்ளல், பெருங்கொடை வள்ளல் என்ற நிலைகளில் தத்தமது நன்கொடைக்கான உறுதியை வழங்கினார்கள். சன் பிக்சர்ஸ் மற்றும் மருத்துவர் அரசி ஆகியோர் ஆதரவில் நிகழ்ந்த எந்திரன் திரையிடலின் மூலமாகக் கிடைத்த $1300க்கான காசோலையைத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் இப்பேரவை விழாவுக்காக அன்பளித்தார்கள். வெளியூர் நண்பர்கள் பலரும் நிதி வழங்கும் படிவத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார்கள். இத்தனை கொடையுள்ளங்களையும் கண்டபோது, முனைவர் பழனி சுந்தரம் கூறிய திருக்குறள் நினைவுக்கு வந்தது
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"


பல செயல்திட்டங்களுடனும், நிறைவுடனும், பணிபுரிந்திடத் துடிக்கும் ஊக்கத்துடனும் அனைத்து நண்பர்களும் அமைந்த மனநிலையில், திருமதி வளர்மதி நன்றி நவில, மணம் மிக்க காபியுடன் விழா இனிது நிறைவு பெற்றது. இனிவரும் நாட்களில், உங்களுக்குப் பேரவைத் திருவிழாவினைக் குறித்த செய்திகளை வழங்கிக் கொண்டே இருப்போம். வருகைதரத் தவறாதீர்கள்! 


நமது நண்பர் பழமைபேசி இக்கூட்டத்தைப் பற்றிச் சுடச் சுட எழுதிய இடுகையை இங்கே காணலாம். 
நண்பர் கண்ணன் எடுத்த படங்களில் சிலவற்றை இங்கே காணலாம். 
நன்றி!

எழுதியவர்: பனையேறி

Sunday, July 18, 2010

பேரவை விழாவில் முத்திரை பதித்த பனைநிலம்

கனெக்டிகட்டில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழாவில் நம் சங்கத்தின் சார்பில் சுமார் 15 பேர் கலந்துகொண்டோம். சுமார் 2000 பேர் வந்திருந்த விழாவில் இந்தப் பதினைந்து பேர் குழு பதித்த முத்திரை பலமானது, நம் சங்கத்துக்குப் பெயர் சேர்த்தது! முதல் நாள் நிகழ்ச்சியில் நம் சங்கம் நிகழ்த்திய "யார் தமிழர்" தெருக்கூத்து நடைபெற்றது. இதன் முழு வசனம் மற்றும் பாடல்களை வேண்டுவோர் பனைநிலத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நம் கலை இளவரசன் வருவதாக இருந்து பிறகு வரவியலாமல் போனது மாபெரும் வருத்தமென்றாலும், ஒருவாறு சமாளித்துவிட்டோம். ஹரியும், சந்தோஷும் ஒரு புறம் நின்று எடக்கு மடக்காகக் கேள்விகளைப் பாடியும், குத்தாட்டம் ஆடியும் கேட்டுக் கொண்டிருக்க அதற்குத் தக்க பதில்களை சூரியன், சுந்தரவடிவேல் மற்றும் அசத்தல் நடிகர் தாமரையாரும் பதில் சொல்ல, நடுவே வந்து இளங்கோ, சிபி, மாசிலன், நெல்லி மற்றும் ராஜசேகர் ஆகியோர் தம் பங்குக்குக் கலக்கிச் செல்ல, பிறகு பறை இசையும், பாடல்களுமாய்த் தெருக்கூத்து முடிந்தது. மேடையின் பின்னேயிருந்து எங்களை உற்சாகப்படுத்திய முனைவர் தண்டபானி மற்றும் ஜானகிக்கு எங்கள் நன்றிகள். இத் தெருக்கூத்தின் ஆக்கத்திலும், வெற்றியிலும், இதில் நடித்த அத்தனை பேருக்கும், பார்த்துக் கருத்துக்களைக் கூறிய அத்தனை நண்பர்களுக்கும் பங்குண்டு. அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல! இன்னும் சற்று நேரம் பறையடித்திருக்கலாம் என்ற ஒரு சிறு குறை கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருந்தது. அக்குறையினை அடுத்து வந்த இரு நாட்களிலும் தீர்த்துவிட்டோம். எப்படி என்கிறீர்களா? Boycott Sri Lanka என்றொரு சிறு கடையை USTPAC அங்கே வைத்திருந்தது. அங்கே Boycott Sri Lanka என்று அச்சடித்த சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டோம். அக்கடையின் நண்பரைக் கொஞ்சம் சட்டைகளையும் காரொட்டிகளையும் (bumper stickers) எடுத்துவரச் சொன்னோம். நாங்கள் பறையடிக்க, அவர் தெருவில் கூவிக் கூவிச் சட்டைகளை விற்க மக்கள் அனைவரையும் அது கவர்ந்தது. கடையில் சென்று சட்டையை வாங்க முன்வராத பலரும் கேட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அப்படியே அடித்துக் கொண்டே உணவருந்துமிடத்தையும் ஒருமுறை சுற்றி வந்தோம். இறுதியில் USTPAC நண்பர் தழுவிக் கொண்டார். பறையொலியில் வாட்டர்பரியின் தெருக்கள் துள்ளின. கடந்து சென்றவர்கள் திரும்பிப் பார்த்தனர். நின்றவர்கள் சற்றே ஆடினர். ஆடியவர்களுக்கு மேலும் பரவசம். சிலர் பறையைத் தொட்டனர், சிலர் அடித்துப் பார்க்கலாமா என்றனர். தமிழர்களின் ஆதி இசையான பறை, தொல்காப்பியத்திலும் சொல்லப் படுவது. ஒரு சிறு கருவி இத்தனை உள்ளங்களையும் ஆட்டுவிப்பதால்தான் அது இத்தனைக் காலங்களையும் கடந்து வாழ்கிறது. முதல் நாளன்றே அமைப்பாளர்களில் ஒருவர் வந்து, நாளை மதுரைவீரன் தெருக்கூத்து நடக்கப் போகிறது, அதிலே மதுரைவீரனை ஊர்வலமாக அழைத்துவரும் ஒரு காட்சி வரும். அதிலே உங்கள் குழு பறையடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது ஒரு பெரும் அங்கீகாரமாக எமக்குப் பட்டது.

நம் சங்கத்தினர் பலரும் கலந்துகொண்ட மற்றொரு நிகழ்வு 'இலக்கிய வினாடி வினா'. இது பலருக்கும் புதிய இலக்கியச் செய்திகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்தப் பல்லூடக நிகழ்ச்சி அனைவரையும் ஆவலோடு அமர்ந்து பார்க்க வைக்கும் சுவை மிகுந்தது. இவ்வாண்டு வீ.ப.கா. சுந்தரம் அணி மற்றும் விபுலானந்தர் அணி என்ற இரு அணிகள் இருந்தன. கடுமையான போட்டியில் விபுலானந்தர் அணி வென்றது. இருப்பினும் நிகழ்ச்சியில் யாரோ குறிப்பிட்டது போல, யார் வென்றாலும் வெற்றி தமிழுக்கே என்பது பொருத்தமாகத் தோன்றியது. குழந்தைகள் திருக்குறள் போட்டி, தமிழ்த் தேனீ வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்தினை முனைவர் தண்டபானி அவர்கள் நிகழ்த்தினார்கள். நிறைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களைப் பார்க்க முடிந்தது. அடுத்த ஆண்டு இன்னும் பலரும் வருவார்கள் எனத் தோன்றுகிறது.

அடுத்த நாள் மதுரைவீரன் தெருக்கூத்து! நாங்கள் பறையை எப்போது எப்படி அடிக்க வேண்டும் என ஒத்திகை பார்க்க ஒத்திகைக் கூடத்துக்குச் சென்றோம். அங்கே குழந்தைகள், ஆடவர், பெண்டிர் என ஒரு பெரும் குழு ஊர்வலத்தில் ஆடிக் கொண்டு செல்லத் தம்மைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குப் பறையிசையினைக் கேட்டவுடனேயே துள்ளல். அனைவரும் ஆடிக் களித்தனர். நியூஜெர்சியிலிருந்து செல்வன் என்றொரு நண்பர் வந்திருந்து பறையினை எங்களோடு இணைந்துகொண்டு அடித்தார். அவர் ஒரு அருமையான இசைஞர். ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு ஒத்திகைக் கூடத்துக்கு வந்த இளையோர் சங்கத்தினர் ஒரு பதினைந்து பேர் பறையிசைக்கச் சொல்லிக் கேட்டு ஆடி மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் இசைக்கவும் ஆர்வம் காட்டினர். இளையோர்களிடத்தில் இவ்விசைக்கு இருக்கும் பெருமதிப்பையும், ஆர்வத்தையும் உணர முடிந்தது. அடுத்த ஆண்டு அவர்களுக்காகத் தனியாக ஒரு நடனத்துக்கு இசைப்போம் என்று கூறிவந்திருக்கிறோம்.

மதுரைவீரன் தெருக்கூத்து அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. நடிகர்களின் வேடமும், துள்ளலும், சுழற்சியும், வசனங்களும், பாடல்களும் காண்பவரை இழுத்தன. சிலருக்குப் புதுமை. சிலருக்கு அந்தக் கால நினைவுகள். குழந்தையாக இருந்த மதுரைவீரன் பெரியவனாகி மேடையிலே தோன்றவேண்டும். அப்போது மேடையின் பின்புறத்தே இருந்து தோன்றாமல், பார்வையாளர்களின் கடைசி வரிசையிருக்கும் வாசல் வழியாக வருவதாக ஏற்பாடு. அங்குதான் நம் பறையும் காத்திருக்கிறது. 'இதோ வருகிறார் மதுரைவீரன்' என்று மேடையிலே வசனம் வந்ததும், அதிர ஆரம்பித்தது பறை. மேடையைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் மொத்தமும் பின்னே திரும்பியது. மதுரைவீரன் வேடத்தோடு நின்று ஆட, முன்னே பறையும், தவிலும் ஒலிக்க, கூட்டம் ஆட அது ஒரு பெரும் ஊர்வலத்தைக் கண் முன் நிறுத்தியது. பார்வையாளர்களில் பலரும் ஆடுவதற்கு ஓடி வந்தனர். அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கிடையில் மேடையிலே ஒரு அம்மாவுக்குச் சாமி வந்துவிட்டது (அல்லது அப்படி ஆடினார்!). ஒருவாறாகக் கூட்டத்தைக் கடந்து மதுரைவீரனை மேடையில் ஏற்றிவிட்டோம் நாங்கள் இறங்கிக் கொள்ளக் கூத்து தொடர்ந்தது.

அதன் பிறகு இன்னிசை நிகழ்ச்சிக்கு நடுவே அடுத்த ஆண்டு பேரவை விழாவுக்கு நம் பனைநிலம் தமிழ்ச் சங்கத்துக்கு அனைவரையும் வரவேற்பதற்காக நம் சங்கத்தின் சார்பாகச் சென்றிருந்தவர்கள் மேடையேறினோம். பறையோடுதான். அடுத்த ஆண்டு பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவையின் புதிய துணைத்தலைவருமான முனைவர் தண்டபானி அவர்கள் சுருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் நமது அழைப்பிதழை விடுத்தார். வணக்கம் கூறி மேடையிலிருந்து அகல முயன்றோம். கூட்டம் விடவில்லை, மேளம், பறை என்று குரலெழுப்ப மறுபடியும் ஒரு முழக்குப் போட்டுவிட்டுத்தான் இறங்கினோம்!

பல சங்கங்களிலிருந்து வந்திருந்த நண்பர்களும், புதிதாய்க் கிடைத்த நண்பர்களும் நம்மூர்த் திருவிழாவுக்கு வரவும், நம்முடன் சேர்ந்து இவ்விழாவை ஒழுங்கு செய்யவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஒரு சிறந்த விழாவைக் கண்டு களித்த மனநிறைவோடும், நம் பனைநிலத்தின் முத்திரையை அவ்விழாவில் பதித்த பெருமிதத்தோடும், சீரும் சிறப்புமாக நம்மூர் விழா நடந்தேறும் என்ற உறுதியோடும் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்துக்கும், பேரவைக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினோம்!

முக்கியமான பின் குறிப்பு: வரும் ஆகஸ்டு 8ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை பனைநிலத்தின் கோடை விழா நிகழ இருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். இவ்விழாவின்போது வரும் பேரவை விழாவினைச் சிறப்பாக நடத்துதற்குரிய திட்டக் கூட்டமும் நிகழும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.                               ========================================================================எழுதியவர்: பனையேறி (கண்ணன் வராததால் படங்கள் இல்லை :))

Sunday, August 2, 2009

பனைநிலத்தில் கோடை விழா!

கோடைக்காலம் என்றாலே மனதெல்லாம் பள்ளி நாட்களில் நாம் கழித்த கோடை விடுமுறைகளே நிறைந்திருக்கின்றன. தெருவிலே கூவி விற்கும் முந்திரிப் பழம், நாவற்பழம், இலந்தைப் பழம், பழைய இரும்பு தகரத்துக்குக் கிடைக்கும் பேரீச்சம்பழம், யார் வீட்டு மரத்திலேயோ கல்லெறிந்து விழுத்தும் மாங்காய், சாலையோரத்துப் புளியமரத்தின் செங்காய்...ம் நாவில் எச்சில் ஊறுகிறது! தெருப் பிள்ளைகள் போதாதென்று வேற்றூர்களிலிருந்து வந்து சேரும் விருந்தாளிப் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடித் திரியும் இனிய பொழுதுகள் அவை. வெய்யில் சுட்டெரிக்காத பருவம். தாகமெடுக்காத பருவம். ஓடித்திரிந்தால் களைத்துப் போகாத பருவம். கோயில் திருவிழாக்கள் வருவதும் இனிய கோடையில்தான். . குசலம் விசாரிக்கும் உறவுகள், யாரோ யாரையோ உரத்து அழைக்கும் ராகம், அழும் குழந்தைகள், மனதை அதிர்வித்து எழுப்பும் காவடிகளோடு போகும் மேளங்கள் எனப் பலவாகத் தெருக்களின் மூச்சில் திருவிழாவின் இசை ஒலிக்கும். மயக்கம் தரும் அந்தக் காற்றின் வாசம். அது மரிக்கொழுந்து சேர்த்துக் கட்டிய கதம்பப் பூக்களா, மாவிளக்கிலே கலந்திருக்கும் ஏலக்காயா, காற்றின் துகள்களில் அந்த வாசம் கோடையில் மட்டும்தான் வருகிறது. ஒவ்வொரு கோடையிலும் பிள்ளைகள் பள்ளிமுடித்துத் திரும்பும்போது பழைய கோடை விடுமுறைகளை எடுத்து மீண்டும் தடவிப் பார்த்துவிட்டுப் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்கிறது மனது. எல்லாம் ஒன்றாக இருக்க முடியாதல்லவா, அதைப் போலத்தான் அமெரிக்கக் கோடையும். இது சற்றே வேறுபட்டது. ஆனாலும் மனதுக்கு இதந்தருவது. அமெரிக்காவில் கோடையை அனுபவிக்கவேண்டுமென்றால், நீங்கள் வரவேண்டிய இடம் பனைநிலந்தான். அழகான சுத்தமான கடற்கரைகள், பசுஞ்சோலைகள், நீர்நிலைகள், எங்கெங்கிருந்தோ வந்துசேர்ந்து பறந்து திரியும் புள்ளினங்கள், சற்றே வலுப்பட்டிருக்கும் கழிமுகத்துவாரத்துச் சேற்று நாணல்வெளிகளின் வாசனை. பழங்களும், காய்கறிகளும் சாலையோரத்துக் கடைகளிலும், நகரத்து உழவர் சந்தைகளிலும் பொலியும். குழந்தைகள் எப்போதும்போல, எல்லாவிடங்களையும்போல விளையாடுகிறார்கள். உற்சாகம் பொங்க நண்பர்களோடு ஓடித் திரிகிறார்கள். உறவினர்களோடு ஒன்றுகிறார்கள். தங்களது புதிய பொம்மைகளைக் காட்டி மகிழ்கிறார்கள். கோடையென்றால் திருவிழா இருக்க வேண்டுமல்லவா? அதற்குத்தான் எங்கள் கோடைவிழா!

ஆகஸ்டு 9 ஆக இருந்தது ஜூலை 26க்கு வந்தது. சிலர் வேலைமாற்றத்தால் ஊரைவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். சிலர் விடுமுறைக்குத் தமிழகத்துக்குப் போய்விட்டிருந்தார்கள். சிலரால் வரமுடியாத சூழல். இருந்தாலும் ஒரு 75 பேர் வந்திருக்கக் கூடும். இதுவே நல்ல கூட்டந்தான். அன்றைய எல்லா நிகழ்வுகளையும் சொல்லிக் கொண்டிருக்கலாம். சென்றது முதல், ஒலிபெருக்கியைக் கட்டியது, அடுப்பு மூட்டிச் சோளம் சுட்டது என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சொல்லப் போனால் அது அடுத்த கோடை வரை நீளும் கதையாயிருக்கும். எனவே சுருங்க! கைப்பந்து ஒருபுறம் நடந்தது. சிறுவர்களுக்கோ பலூன்களில் தண்ணீரை நிரப்பி ஆளுக்காள் மாற்றி மாற்றி நனைத்துக் கொண்டிருந்தார்கள். அஷ்ரிதா என்றொரு குழந்தை பொறுப்பாக வந்தவர்களை வரவேற்று (அதாவது வழிமறித்து!) கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தது. சரி ஓடி விளையாடம்மா என்று பெரியவர்கள் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. உண்டிக்குக் குறைவில்லை. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது கூட்டம். அயலூரிலிருந்து சொந்தங்கள் வந்திருந்தன. அகஸ்டா நண்பர்கள் இவ்வாண்டும் வந்திருந்தார்கள், ஊர்த்திருவிழாவுக்கு வருவதைப் போல. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு நிகராக நமது கந்தன்தான் விளையாட்டுக்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். (படங்களை முழுமையாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்!)

சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி என்று கலகலத்துக் கொண்டிருந்தது கூட்டம். மின்னி மின்னி எல்லா வண்ணங்களையும் விழுங்கிக் கொண்டிருந்தது கண்ணனின் புகைப்படப் பெட்டி.

அன்றைய சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள், சிலம்பம் புகழ் ஆசான் ஜோதி செந்தில் கண்ணன் அவர்களும், சிலம்பொலி செல்லப்பன் அவர்களும். கரயுத்தத்தில் (arm wrestling) ஈடுபட்டிருந்த மகளிரை சிலம்பொலியாரின் பேச்சைக் கேட்பதற்காகக் கிளப்ப வேண்டியிருந்தது.

அவரது உரை அன்றைக்கு தமிழ் இலக்கிய வரலாற்றினைக் குறித்தது. பனைநிலத்து மக்கள் வழக்கம்போலவே தமது அரசியல் மற்றும் இலக்கியக் கேள்விக் கணைகளைச் சிலம்பொலியார் மீது தொடுத்துத் தமக்கிருந்த ஐயப்பாடுகளைக் களையும் முயற்சிகளில் இறங்கினார்கள். சிலம்பொலியாரும் தமக்கே உரிய பாங்கில் அனைவருக்கும் பதிலளித்தார்.

உரையினை முடித்தபிறகு அவரே அன்றைக்குப் போட்டிகளில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்கும், தமிழ் வகுப்பில் இவ்வாண்டு படித்த பிள்ளைகளுக்கும் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு வந்தது ஆசான் ஜோதியின் சிலம்பம்.

கடந்த ஒரு வாரமாக எங்களோடு இருந்து எங்களுக்குச் சிலம்பப் பயிற்சியினை அளித்து வந்தார்கள். காண்பதற்கரிய கலைஞர். இன்றைய சூழலில் சிலம்பத்தினைக் காத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் ஒரு ஒப்பற்ற வீரர். அவரது கரம் சுழற்றும் சிலம்பத்தினைக் காண்பது அத்தனை அழகாக இருந்தது.

எமக்காக அன்று சுருளையும் சுழற்றிக் காட்டினார். அவரது நிகழ்ச்சிக்கு நடுவே இன்னொரு காளையர் கூட்டம் வந்து சிலம்ப வித்தையைக் காட்டியது.

நான்கு நாட்கள் பயிற்சியின் பின்னர் நம் சங்கத்து மக்கள் இவ்வளவு சுற்றியதே ஆச்சரியந்தான். ஆசானின் பயிற்சி மேலும் சில தினங்களுக்கு ஆஷ்லி ஆற்றின் கரையிலும், கடற்கரைகளிலும் நடந்தது. இந்தச் சிலம்ப வகுப்பினை, அதில் கலந்துகொண்ட யாராலும் வாழ்நாளில் மறக்கவியலாது என்பதுமட்டும் உறுதி.

கோடைவிழாவின் இன்னொரு முக்கியமான அம்சம், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல். எல்லா ஊர்களிலும் தேர்தல் என்றாலே போட்டியிருக்கும் என்று கேள்வி. ஆனால் எங்கள் ஊரில் எனக்கு வேண்டாம், நீங்கள் இருங்கள் என்ற பெருந்தன்மைதான் ஒவ்வொரு முறையும். எப்படியோ இந்த முறையும் ஒரு குழுவைக் கண்டுபிடித்தாயிற்று. அதன் சிறப்பு என்னவென்கிறீர்களா? இதுவரையில் அமெரிக்கத் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்திராத அதிசயம்! இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் மகளிர்! போன குழு தமது இரண்டாண்டு சாதனைகளாக ஒரு பக்கப் பட்டியலைத்தான் வாசித்தார்கள், எங்களது பட்டியல் பல பக்கங்களுக்கு நீளும் என்ற சூளுரையோடு களமிறங்கியிருக்கிறது இப்புதிய அணி. அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!

பனைநிலத் தமிழர்களுக்கேயுரிய உயரிய பண்பு என்னவெனில், நிர்வாகக் குழுவில் யார் இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை, ஒரு திட்டத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதில் முனைப்பாக இருப்பதுதான். இந்தத் தன்முனைப்பே எங்களது ஒற்றுமைக்கும், சங்கத்தின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம்.

இவ்வாறாக எதிர்கால வெற்றிகளுக்குக் கட்டியம் கூறும் இன்னொரு நிகழ்வாக அமைந்தது எங்கள் கோடை விழா. வந்திருந்து சிறப்பித்த, வரவியலாது வாழ்த்திக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது அன்பும் நட்பும் என்றென்றும்!

எழுதியவர்: பனையேறி
படங்கள்: வேறு யார்? கண்ணனே!