Wednesday, April 2, 2008

திருவிழாக் கூட்டம்


வசந்த காலம் வந்தாச்சு. வாசமல்லி பூத்தாச்சு. குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குப் போயிறுக்காங்க. அதனால பொண்டாட்டிய மட்டும் தனியா வெளிய கூட்டிட்டு போலாமேன்னு-பூக்கள் நிறைந்த ஹேம்டன் பூங்காவுக்கு போனேன். அவளுக்கு சிறிது நேரம் கார் ஓட்டக் சொல்லிக் கொடுத்துட்டு, போதுமென்ற அளவுக்கு பூக்கள படம் எடுத்துக்கிட்டு கிளம்புறப்ப, அந்த பகுதியில அளவுக்கு அதிகமான கூட்டம்.


வெள்ளிக்கிழமையும் அதுவுமா எங்க இம்மா ஜனங்க படை எடுத்து போறாங்க? கோயிலுக்கா? கச்சேரிக்கா? என வியந்தேன். சர், புர் ன்னு அங்கங்கே பிளஷர் வண்டிங்க ( அதாங்க, காரு). அவங்கவங்க கருப்பு கண்ணாடி மாட்டிக்கிட்டு, தஸ், புஸ் னு - இங்கிலீசு பேசிகிட்டு, அரைக்கால் சட்டை மாட்டிக்கிட்டு, ஆம்பள பொம்பள வித்தியாசம் தெரியாம எங்கப்பா போறீங்கனு கேக்கப்போனா - அவுக சொன்னது நமக்கு சுத்தமா வெளங்கலீங்க. சரி, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமாத்தான் இருக்கும்னு யூகிச்சு, நானும் அந்த அலங்காரம் பண்ண பிளஷர் வண்டிய தேடிப் போனேன்.

அங்கப் பாத்தா பட்டை, பட்டையா கவசம் மாதிரி சட்டை போட்ட வெள்ளைக் கார துரைங்க, ஒரே மாதிரி தலைல தொப்பி மாட்டிக்கிட்டு, அவசர அவசரமா நடந்துக்கிட்டு இருந்தாங்க. சரிதான், நமக்கு இங்கே வேலை இருக்காப்ல தெரியுதுன்னு - கொழாய் சைஸ் லென்ஸ் பொறுத்திய காமிராவை தட்டி எழுப்பி, தோள்ள மாட்டிக்கிட்டு குஷியா நடந்தேன். வழக்கம் போல முகம் சுளிச்சா என் பொஞ்சாதி. அவள கொஞ்சம் தாஜா பண்ணி, கூட்டம் போற தெசையில கூட்டிக்கிட்டு, வெவரமா ஒரு கல்லூரி மாணவி கிட்ட விசாரிக்கையில் - வெள்ளிக் கிழமைகளில், மாலையில் - சிட்டாடல் கல்லூரி வளாகத்திலுள்ள புல்வெளியில் இராணுவ பயிற்சி மாணவர்களின் அணிவகுப்பை காணவரும் பொதுமக்களின் கூட்டம் தான் அதுன்னு புரிஞ்சது.

கிரிக்கெட் ஆட்டம் பாக்கப்போற ஜனங்க மாதிரி மக்கள் இருக்கைகளில் இடம் பிடித்தனர். ஒலிப்பெருக்கிகள் அமைதியா இருக்கச் சொல்லி மக்களை கெஞ்சின. இன்னும் கொஞ்ச நேரத்துல அணிவகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதும், ஒரே நிசப்தம். உயரப் பறந்தது கோடு மற்றும் நட்சத்திரம் போட்ட பளீச் கொடி. அதன் இருபுறமும் தலா 25,25 கொடிகள், மொத்தம் 50 மாநிலக் கொடிகள் காற்றில் அசைந்தாடின. அவற்றின் முன்பு பயமுறுத்தும் பீரங்கி வண்டிகள்.

1992-ல் ஆஷ்லி நதிக்கரையில் 26 கட்டிடங்கள் கொண்டு கட்டப்பட்ட இக்கல்லூரியில் சுமார் 1900 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். முதன்முதலில் 1846-ம் ஆண்டு, மேரியான் சதுக்கத்தில் துவங்கப்பட்டது இக்கல்லூரி. பின்னரே இது தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. பகல் நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் இராணுவ பயிற்சி பெறும் இம்மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கணிதம், அறிவியல்,தொழிற்கல்வி, தொழில்நிர்வாகம் மற்றும் பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

கீழ்படிதல், கட்டுப்பாடு, காலம் தவறாமை, தலைமையேற்றல், ஒற்றுமை ஆகிய அடிப்படை பழக்கங்களோடு கல்வி பயின்று வெளியேறும் இப்பட்டதாரிகள் தம் வாழ்வில் மட்டுமின்றி, பிறர் வாழ்விலும் செம்மை தேடித் தருகின்றனர். முன்னாள் மாணவர்கள் பலர் இராணுவம், மருத்துவம், வான்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் அன்றும், இன்றும் சிறப்புற்று விளங்கி வருகின்றனர். கல்லூரி விடுதியில் கட்டாயமாக தங்கிப் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு ஒற்றுமை - மிகவும் வலியுறுத்தப்படும் விஷயமாதலால் இவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப் படுவதில்லை.

இம்மா விஷயமிருக்கா நம்மூர் காலேஜிலன்னு வாய் பொளந்து கேட்டுக்கிட்டு தலைய ஆட்டினோம். அம்மாணவி நகர்ந்து சென்றதும் படம் பிடிக்கத் தோதாக மேல்வரிசையில் இடம் பிடித்து, இருக்கை மீது ஏறி நின்று கொண்டேன்.

நாலா பக்கங்களிலும் இருந்து சீருடை அணிந்த மாணவர்கள் அணிவகுத்து வந்தனர். பரந்து விரிந்த அந்த கல்லூரி மைதானத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த அணிவகுப்பு கண்கொள்ளா காட்சிங்க. மேளம் அடிச்சிக்கிட்டு, பீ பீ ஊதிக்கிட்டு, பாவாடை மாதிரி சீருடை அணிஞ்ச மாணவர்கள் கோழி தல மாதிரி டோப்பா வச்சிக்கிட்டு போனது, பாக்க ரொம்ப வேடிக்கையா இருந்தது.

அது நடந்து முடிஞ்ச அப்புறம், எல்லாரும் எழுந்து நின்னு, தொப்பிய கழட்டிட்டு இந்த நாட்டின் தேசிய கீதம் பாடி கொடிய எறக்குனாங்க. போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், அணிவகுத்த மாணவர்களுக்கும் மரியாதை செலுத்துற மாதிரி, இராணுவ விமானங்கள் அந்த மைதானத்திற்கு மேலே பறந்து வானசாகசம் செய்தன. எதிர்பாரா நேரத்துல டொம் டொம்னு, காத பொளக்குறாப்ல பீரங்கி வெடிச்சது. உண்மையிலேயே போர்க் களத்துல இருக்கறாப்ல இருந்தது.




அணிவகுத்து வந்தவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் மக்கள் கூட்டம் கரவொலி எழுப்பியது. அவர்களுக்கு தேசப்பற்று மிக்க பொதுமக்கள் சிலர் வணக்கம் செலுத்தினர். கூட்டம் சற்றே கலைய ஆரம்பித்தது. நாங்களும் சில விஷயங்களைத் தெரிந்துகொண்ட திருப்தியில் கிளம்பத் தயாராகி கடிகாரத்தைப் பார்க்கையில் தான் கொழந்தைங்க ஞாபகம் வந்தது. சட்டு புட்டுனு கார்ல ஏறி உட்கார்ந்தோம் அவர்களை கூட்டிவர.

நாம வேலை செய்யற எடத்துக்கு ஓரிரு மைல் தூரத்துல தான் இருக்கு. நல்ல இடம். சிறு குழந்தைகளைக் கூட்டிட்டுப்போனா வசதிப்படாது. எனவே, பெரியவங்க மற்றும் ஓரளவு விவரம் தெரிஞ்ச குழந்தைங்க பாக்க வேண்டிய நிகழ்ச்சி - இந்த அணிவகுப்பு.


மாயோன் ராதை