Sunday, October 12, 2008

வெள்ளியும், விண்வெளி ஓட ஆட்டமும்.

திங்கள் முதல் வெள்ளி வரை ஆய்வகத்தில் அரிய பணிகள் பல முடித்துவிட்டு!!!! எப்போது வெள்ளி மாலை வரும் என்று என் நண்பர்கள் காத்திருப்பர், மாலை நாலரை மணியிலிருந்தே கைபேசி கதற ஆரம்பித்து விடும். தயாரா.. நான் தயார்.. நீங்கள் தயாரா.. சரி வந்துவிடுங்கள்.. இதற்குத்தனே ஒரு வாரமாய் காத்திருக்கிறேன் இதை விட வேறென்ன முக்கியமான வேலை... கிளம்புங்கள் உடனே என்று ஆர்பரித்து கிளம்பும் நண்பர்கள் கூட்டம். ஏன் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். மாலை ஆய்வக வேலையை முடித்தும் முடிக்காமலும் அவசரமாக இல்லம் வந்து ஆடுகள ஆடையை மாற்றி இனியன், கந்தன், வள்ளி (ஒரு முறை முதல் எழுத்தை மாற்றி வந்தன், கள்ளி என அழைத்துவிட்டேன்), வேலுடையான், அவரின் அண்ணன் விக்ன வினாயகன், கணபதி, மயோன், திருமலையான் மற்றும் பலரும் நாற்பது தேனி தெருவிலிருந்து மாலை சுமார் ஐந்தரை மணிக்கு சார்லஸ்டன் கல்லூரி கதவுள் மைதானம் நோக்கி பறந்து செல்வர். சில நாட்களில் பனையேரியும் வருவார்,

மகிழ்வுந்தே இதற்கென்றே உருவாக்கப் பட்டது போல் மிக மகிழ்ச்சியாய் சார்லஸ்டன் கல்கூன் சாலையில் பயணிக்கும் போது, வரும் காட்சிகளை விவரிக்க நான் ஒருவன் மட்டும் போதாது. வாரக் கடைசி என்பதால் சார்லஸ்டன் கல்லூரி மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் இளம் யுவதிகள் தட்பவெப்ப நிலைக்கு சற்றும் பொருந்தாத உடைகளை அணிந்து செல்வதைக் கண்டு மனம் வருந்தி, நண்பன் அழ ஆரம்பித்து விடுவான்.. மணிரத்தினம் படதிதில் வருவது போல் ஒரே வார்த்தையில் "ஏன்" என்பது போல் பார்ப்பான், நானும் "இங்க அப்படித்தான்" என்பது போல் சொல்லி ஒரு வழியாய் தேற்றி கூட்டிச்செல்வோம். மற்ற மகிழ்வுந்திகளுக்கு நடுவில் நம்முடயதை "இணை நிறுத்தும்" போதே... என்னால் இங்கே வெகு நேரம் நிற்க முடியாது சீக்கிரம் வந்து விடுங்கள் என்று சொல்வது போல் இருக்கும் அது எங்களுக்கு.. மனதிற்குள்ளே ....நீயுமா....என்று கேட்டுக் கொண்டே ஒருவழியாக மகிழ்வுந்துலிருந்து இறங்கியதும் அவரவர்தம் விண்வெளி ஓடத்தை தோளிலே சுமந்து இறகுப்பந்தை அடிக்க, ஒரு சிறிய ஓட்டப்பயிற்சி செய்து கதவுள் மைதானத்தை அடைவோம். இல்லையெனில் ஆடுகளம் கிடைப்பது அரிதாகி விடுமே.

இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது என்பது நாம் தெரிந்ததே...நம் பக்கத்து நாட்டுக்காரனுக்கும் மைதானத்தை திறப்பவனுக்கும் வெள்ளி தோரும் சண்டை நடக்குமாம்.. மெதுவாக ஒருவனைக் கூப்பிட்டு என்ன சண்டை என்று கேட்டேன்... ஐயா... இவங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..காலையில ஆறறை மணிக்கே கதவ திறக்கச் சொல்றாங்க....இவங்க தொல்லை தாங்க முடியலயா..என்றார்..

ஆடுகளம் நம்மூர் அளவிற்கு தரமில்லை என்பதையெல்லாம் சகித்துகொண்டு, வீரனுக்கு மைதானம் முக்கியமில்லை, வெற்றிதான் என்றெண்ணிக் கொண்டு ஒருவழியாக ஆடுகளத்தை பிடித்துவிட்டால் ஆட்சியை பிடித்தது போல் மனம் மகிழும். எனக்கு இளகிய மனது, இந்த இறகுப் பந்து படப் போகும் பாட்டை நினைத்தால் கண்ணீர் வரும், ஆனால் என் செய்வது விளையாட்டு என்று வந்தபின் எதையும் இலகுவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் ஊரில் ஐந்து நட்ச்சத்திர விடுதியில் கீத் சேதியுடன் பில்லியர்சும், மரப் புலியுடன் (Tiger wood) கால்ஃப் விளையாட்டும் விளையாடி அவர்களையெல்லாம் விரட்டி அடித்தவன் என்றெல்லாம் நானே என்னைப் பற்றி சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை....

விளையாட்டின் மூலம் நல்ல கருத்துகளை, பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளலாம், இந்த ஆட்டத்தின் ஆரம்பம் எனக்கு பிடிக்கும் ஏனென்றால் தொடக்கமே "எல்லோரையும் காதல் செய்" என சொல்லியபடி முதல் பந்தை வீசுவோம்...ஆனால் பிறகு, ஒருவரை காதல் செய், இருவரை செய் என் சொல்லும்... இதில் எனக்கு உடன்படில்லை.... நான் கனியன் பூங்குன்றனாரின் பக்கம்...அனைவரும் உறவே, எனவே அனவரையும் அன்பு செய் என்பதே.....

போட்டி என்று வந்தபின் ஒருகுழுவிற்கு வெற்றியும், மற்றொன்றுக்கு தோல்வியும் என்பது உலக நியதி..ஆனால் நாங்கள் விளையாடும் போட்டியில் வெற்றி தோல்வியை கணக்கில் வைப்பதில்லை..இதன் மூலம் விட்டுக்கொடுத்தலும், நட்பும் மட்டுமே விளைகிறது... போட்டி என்பது ஆரோக்கியமான போட்டியாக இருக்கவேண்டும், அதே சமயம் ஆரோகியத்தை வளர்ப்பதாகவும், காப்பதுவுமாக இருக்க வேண்டும் என நினைத்தே நாங்கள் இதை விளையாடுகின்றோம்..

பொதுவாக விளையட்டு தொடங்கும் முன், வீரர்கள் விளையாடுவதற்கேற்ப தங்கள் உடலை " மேலே மித சூடு" செய்து தயார்ப்படுதிக் கொள்வது வழக்கம், நாங்களும் அவ்வாறு செய்வதுண்டு, சில சமயம் ஆட்டம் தொடங்கியபின், ஒரு அணியினர் சரியாக விளையாட வில்லையெனில்,அவர்கள் இது "மெலே சூடு" என்று சமாளித்துவிடுவர், விளையாட்டுதானே என் கவனமில்லாமலிருந்தால், சில சமயம் புள்ளிகளை மாற்றிக் கூறி குழப்பிவிடுவர், உதாரணமாக எட்டு/பத்து என்பதை மாற்றி, குறைந்த புள்ளியை நமதாக்கி அதிக புள்ளிகளை அவர்கள் எடுத்தது போல் தோற்றத்தை ஏற்படுத்துவர்....எனவே விளையாட்டுதானே என விளையாட்டுத்தனமாக இருந்து ஏமாந்து விடக் கூடாது.... என்ன செய்வது உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர்...வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் பாடலான ...ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே....பாடலை அடிக்கடி பாடி நினைவில் வைதுக்கொள்ளுங்கள்...

மாயோனுக்கு இந்த ஆட்டம் மிகவும் பிடிக்கும், ஒருவேளை "எல்லொரையும் காதல் செய்" என்று துவங்குவதாலோ என்னவோ...

ஆரம்பத்தில் கன ரக விண்வெளி ஓடத்தில் விளையாட கடினமாக இருந்தது,பின் மயோன் இலகுரகத்தின் சிறப்புகளைக் கூறினார், மேலும் மட்டமான மட்டையால் தான் நாங்கலெல்லாம் சரியாக ஆடவில்லை என நினைத்து மயோனிடம் நல்ல மட்டை வாங்கித்தருமாரு கேட்டோம், அவரும் கோட்டின் மேல் (on line) வர்த்தகம் மூலமாக இரண்டயிரம் ரூபாய் அளவிற்கு, நம்மூர் மதிப்ப்பில்....வாங்கிக் கொடுத்தார்..அதிலிருந்து சுமாராக ஆடிக்கொண்டிருந்த நான் மோசமாக ஆட ஆரம்பித்துவிட்டேன்....இதிலுருந்து நான் கற்றது உள்ளதும் போச்சுடா.... கண்ணா என்ற பழமொழி....பிறகு காலணிதான் சரியில்லை, அதனால்தான் சரியாக விளையாடவில்லை என்றார்..... அதுவும் சரிபட்டுவரவில்லை என்றால் ஆடுகளத்தை மாற்றலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

நாம் நன்றாக விளையட வேண்டுமென்பதற்காக நமக்கெல்லாம் விண் ஓடம் வாங்கிக் கொடுத்தாரே என்று அவரிடம் உடனே, மூன்று மாதம் கழித்து, காசோலையை கொடுத்தேன்..அவர் வாங்கவில்லயே...நானும் நட்பு வேறு, பணம் வேறு என்று அவரிடம் வாதாடினேன்...அந்த கசோலையை கடைசிவரை வாங்கவில்லை அவர், இந்த காலத்திலும் இப்படி ஒருவரா என எண்ணி மகிழ்ந்தேன்.... சரியென்று அதற்கு அடுத்த நாள், சிற்றுண்டி சலையில் இருக்கும் தனியங்கி இயந்திரத்தில் பணமாக எடுதுக் கொடுத்ததும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்....

நம் இனியன் பேருக்கு ஏற்றபடி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதிலேயே வேலையாயிருப்பார், இனியாளிடம் விளையடி விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு, பக்கத்தில் நடக்கும் பெண்கள் கைப்பந்து போட்டியை பார்க்க கிளம்பிவிடுவார். இளவரசரும் இவருக்குத்துணையாக கிளம்பிவிடுவார்....கேட்டால்..ஆளை பார்க்கவில்லை.. ஆட்டத்தைத்தான் பார்க்கின்றேன் என்பார்....

எங்கள் குழுவில் இருக்கும், வேலுடையானின் ஆர்வம் அளப்பிடதற்கரியது,ஒரு நாள் காலில் சிறிய காயம் பட்டுவிட்டது,ஆனால் அதன் வலியை காலணியோடு இருகக் கட்டிப் போட்டுவிட்டு, ஓடத்தை தோளில் சுமந்து நடந்து சென்று அன்று ஆடிய ஆட்டம், அப்பப்பா... இன்றெல்லாம் பார்த்துகொண்டே இருக்கலாம்..இது அவனின் தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்...

கந்தனும் வள்ளியும் ஒரே அணியில் இருந்தாலும் சரி அல்லது அவர்கள் தனியே இருந்தாலும் சரி, அவர்களை வெல்லவே முடியது.

ஆட்டத்தில் இறங்கிவிட்டால், உலகமே தெரியாது, சில சமயம் கைபேசி ஒலிக்கும், இடி இடிக்கும்,மழை பொழியும், நிலம் அதிரும் அப்போதுகூட ஆட்டம் தொடரும். ஒரு வழியாய் மைதானத்துக்காரன் கம்பை பிடுங்குவான்...அப்போதுதான் லேசாக நேரத்தை பார்ப்போம்..ஏதோ பூமிப் பந்தையே வெற்றிகொண்டது போல் மிடுக்கு நடைபோட்டு வேளியே மகிழ்வுந்தை நோக்கி வரும்வோம்...

சாலையில் சரியாக சிவப்பு விளக்கு எரிந்தவுடன் எங்களையெல்லாம் கை பிடித்து அழைதுச்செல்வார் இனியன், சாலையின் பக்கவட்டு வாகனங்கள் நாம் தான் தவறாக வந்து விட்டோமா என எங்களைக் கண்டு குழம்பிப்போய் நின்று வழிவிடும், மறுபடியும் சாலையில் வரும் போது கண்ட காட்சிகள்...அதே கண்ணீர், அதே ஆறுதல்..சிலவற்றை எத்தனை முறை பார்த்தாலும், முறைத்தாலும் சலிப்பதில்லை.

வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வந்து, நீராடி, கணவன்மார்கள் கணினி முன் மீண்டும் அரிய பணி ஆற்றுவது போல், காய்கறி, குறிப்பாக வெஙகாயம் நறுக்க,பயந்து, பாவலா செய்து கொண்டு அமர்த்திருப்பர், மனைவியிடம் ஆராய்ச்சி பேப்பர் படிக்கிறேன் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் "கோட்டின் மேல்" மூலம் வரும் நாளிதழை பதினெட்டாவது முறை படித்துகொண்டிருப்பர்.. அடுத்து வெள்ளி உடனே வர வேண்டுமென்றெண்ணியபடியே

ஏறத்தாழ ஒன்றறை ஆண்டுகளாக ஆடியும், எதோ இன்றுதான் புதிதாய் விளையடுவதை போன்றே எஙகளுக்கு வெள்ளியன்று மாலையில் கிடைக்கும் ஆர்வதிற்க்காகவே பல வெள்ளிகள் தோன்ற வேண்டுகிறேன்..

விண்வெளி ஓட ஆட்டம் வெள்ளியில் மட்டும்தானா...

சிவ பாரதி...

பனை நிலத்தில் ஒரு பழமொழி மாலை

நேற்று மாலை ஒரு பிறந்த நாள் விழாவில் கூடியிருந்தோம். உணவுக்குப் பின் எங்கள் பேச்சு பழமொழிகளுக்குச் சென்றது. ஒரு இருபது பேரும் மாறி மாறி எடுத்து விட அணியணியாய் வந்தன பழமொழிகள். ஒரு இருநூறு வந்திருக்கும். எல்லாத்தையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். யாரும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை. நிறைய பேர் கேள்விப் படாதவற்றை மட்டும் இங்கே சொல்லப் போகிறோம்.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித்தைக்கு ஒவ்வொரு ஆளிருப்பார். திருவிளையாடலில் ஒரு வசனம் வருமே, வில்லுக்கு - விஜயன், வீணைக்கு - நாரதன், சொல்லுக்கு - அகத்தியன், அழகுக்கு - முருகன் அப்படி இப்படி என்று. அதுபோல எங்கள் ஊரில் பழமொழிக்கென்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் வெங்கடேச பாபா எனும் வெண்பா. மனிதரோடு பேசிக் கொண்டிருந்தால் போதும், மூச்சுக்கு முந்நூறு பழமொழிகள் வந்து விழும். இந்த இடுகையில் இருக்கும் பழமொழிகளில் பல அவருடையவை. இவற்றைப் போல இன்னும் பல இடுகைகளுக்கான சரக்கு அவரிடம் இருக்கிறது. வெண்பாவின் நினைவிடுக்குகளுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற பழமொழிகளையும் எடுத்து ரசிக்க வேண்டுமென்றால் அவரோடு உணர்வுபூர்வமாகப் பேசிப் பாருங்கள்! இந்த இடுகையை அவருடைய ஆவர்த்தனம் என்றுதான் சொல்லவேண்டும். கூட இருந்த மக்களெல்லாம், ஒவ்வொரு பழமொழியைச் சொல்லிவிட்டு ஓரமாக நிற்கும் பக்க வாத்தியக்காரர்கள் போல!

உங்களுக்குத் தெரிந்தவற்றையும் சொல்லலாம்:

ஆழாக்கு மிளகு குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரசம் கேட்டாளாம்.

முக்கி முக்கிக் குத்துனவளுக்கு மூனாம். எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டாம்.

பாடிப் பாடிக் குத்துனாலும் பதறு நெல்லாகாது.

நாட்டுக்கு நல்ல தொரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லு சுமக்குற வேலதான்.

தான் போக வழியைக் காணோம், மூஞ்சுறு விளக்கமாத்தையும் காவிக்கிட்டுப் போச்சாம்.

அடியேன்றதுக்குப் பொண்டாட்டி இல்லையாம், புள்ளைக்குப் பேர் வைக்கப் போனானாம்.

ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்.

கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.

ஆனா அச்சுல வாரு, ஆவலைன்னா அண்டாவுல வாரு.

எள்ளுருண்டை வேண்டாம்னுட்டு உரலுக்குள்ள தலையை விட்டானாம்.

குலுக்கி மொளகாய் அறச்சா; கொதிக்காம எறக்கி வச்சா.

காலைப் புடிக்கிற கணக்கப்புள்ளைக்கு மாசம் பத்து ரூவா.

கறக்குறது காப்படி; உதைக்கிறது பல்லுப் போக.

(நடுவுல ஒருத்தரு வந்து பாதிப் பாதி பழமொழியா சொல்லிட்டுப் போனாரு. ஏன்னா மீதிப் பாதியைக் கூட்டத்துல சொல்ல முடியாதுன்னுட்டாரு!)

கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில வையி.

புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளிக் குதிச்சானாம்.

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.

நாய்க்கு வேலை இல்ல, நிக்க நேரமில்லை.

நாயை எங்க அடிச்சாலும் காலைத்தான் தூக்குமாம்.

மார்காழிக்குப் பின்னாடி மழையும் கிடையாது; மச்சானை மிஞ்சின உறவும் கிடையாது.

சுண்டைக்கா கால்பணம்; சொமை கூலி முக்காப்பணம்.

கத்தரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதானாகணும்.

நடுநடுவுல தெலுங்குலயும் பழமொழிகள் வந்து விழுந்தன.
ஆசபாசம் அக்கட அன்னவஸ்த்ரம் இக்கட
பேரு பெத்த பேரு தாக நீலு லேது

பழமொழிகள் நம் முன்னோர்களின் அனுபவச் சூத்திரங்கள். எள்ளலும், சுவையும், சொற்சுருக்கமும் இவற்றின் தனிச் சிறப்புகள். பழமொழிகளைத் தொகுக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் ஏட்டளவில் இல்லாமல் அன்றாட வாழ்வில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், இவற்றை நெடிது வாழச் செய்யலாம்.

இவ்விடுகையின் முதன்மைப் பழமொழியாளர்: வெண்பா

கோரஸ்: பனைநிலத்து மக்கள் (எல்லாப் பேரையும் சொல்ல முடியலீங்கோ, மன்ச்சுக்கங்கோ!)