Sunday, January 31, 2010

பனைநிலம் தமிழ்ச்சங்கப் பொங்கல் விழா 2010




வீட்டு முற்றத்தை சாணம் கொண்டு மெழுகி அலங்கரிக்க!

காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க !
ஜல்லிக்கட்டு ஊரையே கிடுகிடுக்க!
செவ்விதழில் செங்கரும்பு தித்திக்க !
பொலிவுடனே பொங்கியதே பொங்கல்
நம் மனப்பானை மகிழ்வுடனே பொங்கிடவே
சார்லஸ்டன் மக்கள் அனைவரும் ஆனந்தமாக கொண்டாடினோமே!

-பொறுங்க பொறுங்க!
இப்பிடியெல்லாம் சார்லச்டன்ல பொங்கல் விழா நடந்ததுன்னு சொல்லணும்னு ஒரு ஆசைதான். ஆனா அமெரிக்காவில இப்பிடியெல்லாம் காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க, ஜல்லிக்கட்டு ஊரையே கிடுகிடுக்க, பொங்கல்விழாவ நடத்துனா இந்தஊரு போலீஸ்காரங்க அவங்களோட வாகனங்களோட அலாரம் கிணுகிணுக்க, நம்ம இதயத்துடிப்பு படபடக்க, நாடி நரம்பெல்லாம் துடிதுடிக்க அப்பிடியே அள்ளிட்டு போயிருவாங்க! அதனால மகாசனங்களே இதெல்லாம் இல்லாமத்தான் நாம பொங்கல் விழாவை இங்க நடத்தியாகணும்.

சரி! அதுக்காக அப்பிடியே நாம விட்டுற முடியுமா...நம்ம ஆளுங்க எங்க போனாலும் நம்ம பண்பாட்டு அடையாளங்கள மறந்துற முடியுமா?கலாச்சாரத்தை கொஞ்சமாவது பிரதிபளிக்கணும் இல்லையா?...அதுவும் நம்ம சார்லஸ்டன் பனைநிலம் தமிழ்ச் சங்கம்னா சும்மாவா?

பொங்கல்விழா பரபரப்பு பலவாரங்களுக்கு முன்னாடியே ஆரம்பம் ஆயிடுச்சு! கலைநிகழ்ச்சிகள் அருமையாக வர திட்டம் போட்டாச்சு. அறுசுவை உணவுப் வகைகளாகட்டும், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளாகட்டும், பட்டிமன்றமாகட்டும், பாட்டுமன்றமாகட்டும், குழந்தைகளோட நிகழ்ச்சிகளாகட்டும், எல்லாம் அருமையா தயாராகிட்டு இருந்தது.

பொங்கல்விழா நடக்கிற சனிக்கிழமை வந்திடுச்சு.வருணபகவான் வழக்கம்போல கோவிச்சுட்டார். நம்மளுக்கு வார விடுமுறைன்னாலே அவருக்கு கொஞ்சம் பொறுக்காது - அப்பிடியே வானத்திலிருந்து இறங்கிவந்து குசலம் விசாரிச்சுட்டு போவார். இந்த மாதிரி விழான்னா கேட்கவா வேணும் - அவரும் ஒரு ஆட்டம் போட்டுட்டார். அதப்பாத்து நம்ம பயப்பட்டுருவோமா என்ன?...இடியா, புயலா, மழையா,பனியா நம்மை ஒன்றும் செய்யாதே.ன்னு! ஜோரா வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.

இந்த தடவையும் டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே வித்யா - கணேஷ் உதவியுடன் தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம். மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான வசதி, ஒலி, ஒளி அமைப்பு, மற்றும் உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம். அஞ்சு மணிக்கே ஆளுக அசத்தலா வேலைகள பாக்க ஆரம்பிச்சாச்சு. கொஞ்ச நேரத்தில பொங்கல் திருவிழாக்கூட்டம்.....எங்க பாத்தாலும் கலகலப்பா இருந்துச்சு.

இந்ததடவை அறுசுவை உணவு விருந்து விழா ஆரம்பமே அளிக்கப்பட்டது. மக்கள் தூதுகலத்தோட பதார்த்தங்களை ரசிச்சு ருசிச்சுட்டாங்க. வழக்கம் போல கணவன்மார்கள் பரிதாமாக பந்திக்காக காத்திருக்க, மனைவிமார்கள் பந்திக்கு முந்தி ஒரு கட்டு கட்டுனாங்க! ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க! அதுசரி ஆம்பிளைங்க? மிச்சம் சொச்சம் எதுவும் கிடைக்காம போயிருமா என்ன. நம்பிக்கை தான் வாழ்க்கை இல்லையா? அதுக்கு பிறகு வந்த சில கணவன்மார்களுக்கு மிச்சம் மீதி கூட கிடைக்கலேன்னு 'வருத்தப்படாத வாலிபர்கள்' பலபேரு பரவலா பேசிக்கிட்டாங்க.




அதைவிட அருமையான விருந்து கலைநிகழ்ச்சிகளோட வடிவில் விழா மேடையில காத்துகிட்டு இருந்தது. ஆனந்தி விழாவோட முன்னுரையை அளித்தார். விழாவை செந்தில் மற்றும் வானதி அருமையா தொகுத்து வழங்குனாங்க.







தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, குத்துவிளக்கு ஏற்றி விழாவ தொடங்கினாங்க. கடவுள் வாழ்த்தாக திருக்குறளை இனிமையா அஸ்ரிதா, அமிர்தா, மாசிலன், மற்றும் கோகுல் பாடினது செவிக்கு இசையா ஒலித்தது. திருக்குறள் உலகத்துக்கே பொதுமறை. நம்ம குழந்தைகளுக்கு அது ஒரு ஊக்கமறையா இருக்குதுன்னு அதிலிருந்தே தெரிஞ்சது. அதற்கடுத்தபடியாக அவர்களே நாட்டுபுறப் பாடலுக்கு நடனம் ஆடி நாட்டுப்புறத்தையே நம்ம கண்ணுக்கு முன்னாடி வந்து நிறுத்துனாங்க.



கின்னஞ்சிறு சிட்டுக்கள் குட்டி குட்டி பாடல்களை மெட்டு மெட்டில்லாமல் பாடினாலும் எட்ட எட்ட இருக்கும் சொர்க்கம்கூட நம்ம பக்கத்துல வந்திரும் இல்லையா? அதைத்தான் நம்ம சிட்டுக்கள் பூரணி, ஜனனி, மோகன், இனியன் மற்றும் ஷிவானி அவங்கெல்லாம் வண்ணத்துப்பூச்சி பாடலை அழகா பாடினாங்க.




அதற்கடுத்து அமிர்தா மற்றும் அதிதி மாறுவேட நிகழ்சியில, புலியாவும், கிராமியப்பெண்ணாகவும் வந்து அசத்துனாங்க.



குழல் இனிது யாழ் இனிது, அதனினும் இனிது நம் பிரணாப் மற்றும் கோகுலுடைய வயலின் இசை இனிது. அவங்க வயலினுடைய இசை கேட்டு நம்ம மக்கள் மயங்கிட்டாங்க.






அடுத்து சிறுமி நிவேதாவோட நடனம். அவங்களோட அருமையான ஆட்டத்தைப் பாத்துகிட்டு இருந்த நம்ம சின்னப்பசங்க சும்மா இருப்பங்களா; விழா அரங்கத்துல அவங்களும் ஒரு ஆட்டம் போட்டாங்க. இந்தக் குழந்தைகளோட நிகழ்ச்சிகளைப் பார்த்து நம்ம மனசும் குழந்தைகளாவே மாறிடுச்சு.





அதுசரி, ஆட்டம் பாத்தாச்சு பாட்டு? இப்போ பாருங்க...ஒண்ணா ரெண்டா - நாலு பாடல்கள். கார்த்திகா, செந்தில், யுவராஜ் மற்றும் பிரகாஷ் தனித்தனியா பாடல்களைப் பாடி பார்வையாளர்களை இசைவெள்ளத்தில மூழ்கடிச்சாங்க.


















இசைவெள்ளத்தில மூழ்கி முத்தெடுக்க போன நம்மள அப்பிடியே மீட்டு வந்ததுதான் நாடகம். உழவர்களோட பிரச்சினைகளைப் பற்றிய இந்த நாடகத்தில் யுவராஜு, குமரன், பத்மநாபன், மற்றும் உதய் இணைந்து நடித்தது நம்முடைய கவனத்தை கவரும் வண்ணம் இருந்தது.





இந்த பொங்கல் நிகழ்ச்சிகளை சுவராசியப் படுத்துவதற்காகவே வினாடி விடை நிகழ்ச்சிகள் இடையே வழங்கப்பட்டது. வினாடி வினா பரிசு மழையில நனைவதற்காக குடைகளை வீசி எறிஞ்சுட்டு விடைகளை நிரப்பிகிட்டு இருந்தாங்க (எதுகை மோனையா இருக்குறதுக்காக, குடை, விடை அப்பிடின்னு இப்பிடின்னு இடையில வார்த்தைகள் வரும், அதெல்லாம் கண்டுக்காதீங்க மகா சனங்களே!). நிறைய வடைகளைச் சாப்பிட்டு மன்னிக்கவும் நிறைய விடைகளை சரியாகச் சொல்லி பரிசுகளை அள்ளிட்டு போனவங்க இளங்கோ மற்றும் பாட்ஷா.

நம்மூரு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது வந்து ஓரளவு சந்தோசமா இருக்கிற கணவன் மனைவிகளுக்கு இடையே குழப்பம் சச்சரவு உருவாக்குகிற நிகழ்ச்சி எது தெரியுமா?...கண்டுபிடுச்சுட்டீங்க....அதேதான் - ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சி. இதுவரை ஜோடிகளுக்கு குழப்பமே எதுவும் வரல்லயேன்னு, மூளையை கொஞ்சம் கசக்கி ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சிய தயாரிச்சிருந்தாங்க 'குழப்பப்படாத வாலிபர் சங்க' அன்பர்கள் . ஒவ்வொரு வீட்டுக்கும் வீடியோவோட படையெடுத்து கணவன் மனைவியை கேள்விக்கணைகளை தொடுத்து, பதிவு பண்ணி அதை சுவராசியமா குறுகிய காலத்துல ஸ்ரீநிவாசன், பிரியா, யுவராஜ், மற்றும் குமரன் குழுவினர் தயாரிச்சிருந்தாங்க.


அடுத்ததா வந்ததுதான் பட்டிமன்றம். பட்டிமன்றத்த பாட்டிமன்றமா மாத்திரக்கூடாதுன்னு கலகலப்பா இருக்கிற மாதிரி ஒரு தலைப்பு - "இல்வாழ்க்கையில் அதிகம் விட்டுக்கொடுப்பது ஆண்களா பெண்களா" ? தன் வாழ்க்கையே ஆன்மீகத்துக்காக விட்டுக்கொடுத்திருந்த சந்தோஷ்தான் நடுவர். ஆண்களே என்கிற அணியில செந்தில், ஹரி, மற்றும் யுவராஜு . பெண்களே அப்பிடின்ற அணியில உமா, வினு, மற்றும் சுபத்ரா. ஆரம்பம் முதலே அனல் பேச்சு. அதைகேட்டு பார்வையாளர்களோட மூச்சே நின்னு போச்சு.ன்னு சொல்ற அளவுக்கு இருந்தது இவர்களுடைய சொல்வீச்சு. இதப்பாத்தா சங்ககாலப் புலவர்கள் பலகூடி அருந்தமிழ்கவி ஆராய்ந்து, சொல்வித்தை விளையாடி பைந்தமிழ் வளர்த்த சான்றோர்கள் சபைபோல இருந்தது (சரி, சரி....ரெம்ப அதிகமா போயிடுச்சுன்னு நினைக்கிறீங்களா?! மிகைப்படுத்தாம சொல்லிர்றேன். உண்மையிலேயே ரசிக்கத்தக்க வண்ணம் இருந்தது!). முடிவில் நாட்டாமை சந்தோஷ், இல்லற வாழ்வில் ஆண் பெண் இருவருமே விட்டுக்கொடுப்பதால் இல்லற வாழ்வு வளம் பெரும் என தீர்ப்பு வழங்கினார். 





பிறகு குழந்தைகளுக்கான பரிசுச் சான்றிதல் வழங்குதல் - பரிசுகளை சண்முகராஜன் அய்யா வழங்கினார். நிறைவாக சேர்ந்து சிறுவர், சிறுமியர் அனைவரும் ஒரு கலக்கல் ஆட்டம் போட்டாங்க பாருங்க...அதைப்பார்த்த நம்ம மனசும் ஒரு ஆட்டமா, பாட்டமா பாடி மகிழ்ந்தது.







ஆக மொத்தத்தில பொங்கல் நிகழ்ச்சிகள் அத்தனையும் பார்த்து, ரசிச்சு, ருசிச்சு, கேட்டு, அறுசுவை உணவுகளை உண்டு, நம்ம மனசு செங்கரும்பக் காட்டிலும் சிறப்பா தித்திச்சது. பொங்கலைக்காட்டிலும் பலமடங்கு பொங்கி வழிஞ்சது. நம்ம உழவர்களோட பெருமிதமும், பூரிப்பும் நம்மோட இதயத்துல வந்து கலந்தது.

மக்களே, இன்னும் அருமையான ஒளிப்படங்களை நம்ம கண்ணன் எடுத்து கொடுத்திருக்காரு. அப்பிடியே நம்ம பனைநிலம் வலைத்தளத்திற்கு போயி எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்திருங்க!...(பனைநிலம் வலைத்தளம் செல்ல)

உங்க எல்லாருக்கும் மறுபடியும் உளங்கனிந்த இனிய பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் .

(மீண்டும் அடுத்த வலையேற்றத்தில் சந்திப்போம்)

என்றும் அன்புடன்


செந்தில்







(படங்கள்: கண்ணன்)