Saturday, July 18, 2009

FeTNA 2009ல் நாங்கள் கட்டிய கூத்து

பேரவை விழான்னாலே எங்க ஊருலேருந்து ஒரு பதினஞ்சு, இருபது பேரு போறது வழக்கமுங்க. போன வருசம், அதுக்கு முந்தின வருசமெல்லாம் ஏதோ இந்தச் சின்னப் பிள்ளைகளைப் பாட வச்சு, ஆட வச்சு தமிழை வளத்தோமுங்க. சின்ன சங்கமுன்னாலும் எதையாச்சும் வித்தியாசமா செஞ்சுகிட்டே இருக்க கொணம் எங்க சங்கத்து ஆளுகளுக்கு இருக்குங்க. அதான் இந்த வருசம் எதையாச்சும் வித்தியாசமாச் செய்யணுமுன்னு நெனச்சமுங்க. அந்த நேரத்துலத்துலதான் ஒலகத் தமிழினத்துக்கு இடி விழுந்த மாதிரியான நேரம். ஈழத்துத் தாக்கத்தையே நடிக்கிறதுன்னு முடிவெடுத்தோம். ஒரு இருபது பேரு கூடுனோம். விழா மலர்ல 'தேவகி செல்வன், பரணி இடைக்காடர், பெரியண்ணன் சந்திரசேகரன்' எல்லாரும் தொகுத்திருந்த கேள்வி பதிலையே கதையோட கருவா வச்சிக்கிட்டோமுங்க. அதே வசனம் கூத்துல வருமுங்க. பாத்தீங்கன்னா தெரியும். வெளங்காத ஒருத்தரு கேள்வி கேப்பாரு, இன்னொருத்தரு பதில் குடுப்பாரு. பதில் சொல்லுறப்பவே அதப் பத்திப் பின்னாடி அந்தக் காட்சி விரியும். இதான் கூத்தோட வடிவமுங்க.

ரெண்டு வாரம் பயிற்சி எடுத்திருப்போம். அந்த ரெண்டு வாரமும் பாத்தீங்கன்னா, தினமும் கதையோட வசனம் மாறும். காட்சி மாறும். கடைசி நாள் வரைக்கும் மாறிக்கிட்டே இருந்துச்சுன்னா பாத்துக்கங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது. நடிச்ச ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு "யோசனை யோகராசா"வாக மாறி எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதுவும் நல்லதுக்குத்தான். எல்லாம் சேர்ந்துதான் கூத்தை நல்லா இருக்கும்படி வச்சிச்சு. தம்பி இளவரசன் அற்புதமாப் பேசுனதை நீங்களே பாத்துக்கங்க. அப்புறம் மணி ஐயாவோட குரலும் நடிப்பும் அருமை. யாருமே 'நடிக்கலை'ங்கறதுதான் இன்னொரு சிறப்பு. கூத்து முடிஞ்சு வெளியில வரும்போது மேக்கப் ரூமுல இருந்து அடுத்த நிகழ்ச்சிக்காகத் தயார் செஞ்சுக்கிட்டிருந்தவங்க கட்டிப் புடிச்சு அழ ஆரம்பிச்சுட்டாங்க. எத்தனை பேரு கலங்கின கண்ணோட எங்களைப் பாத்து நன்றி சொன்னாங்கன்னு நெனப்பில்ல. பேரவை விழா நடந்த அந்த மூன்று நாட்களும், யாராவது ஒருத்தர் எங்கக் குழு ஆள் யார்கிட்டயாச்சும் கூத்தைப் பத்திப் பேசிக்கிட்டே இருந்தாங்க.

இலங்கை இனப்பிரச்சினையின் அத்தனை அம்சங்களையும் சொல்லிவிட இருபது நிமிடங்கள் போதாது. ஆனால் ஓரளவுக்கு ஒரு அறிமுகத்தை, அறியாதவங்களுக்கு ஒரு செய்தியைச் சொன்னோம்ங்கற திருப்தி எங்களுக்கு இருந்திச்சு. தமிழங்களோட துக்கத்துல தமிழங்களே பங்கெடுக்கலைன்னா எப்படிங்க. நம்ம மேல திணிக்கப்பட்டிருக்க அடக்குமுறையை நாமளே மறைக்கலாமா? அதான் அந்தத் தெருக்கூத்து. ஏற்கெனவே பனைநிலத்தோட ஒளிப்படத்தைப் பார்த்திருப்பீங்க. அப்படி இல்லன்னா, பாத்துட்டுப் போங்க. பாத்துட்டு நண்பர்களுக்கும் அனுப்புங்க. யாரோ சொன்னாங்க, ஜூனியர் விகடன் பத்திரிகையில இதப் பத்தி வந்திருக்குன்னு. போயிப் பார்த்தா, படம் போட்டு "மகிந்தவைக் கிண்டலடித்து நாடகம்" அப்படின்னு படத்துக்குள்ள ஒரு வரி. பகீர்னு இருந்துச்சு. என்னடா அந்தப் பத்திரிகைக் காரங்க, நாடகத்தைப் பார்த்தபிறகுதான் எழுதினாங்களா, இல்ல நியூயார்க் அப்பார்ட்மெண்டு கதவைப் பூட்டிக்கிட்டு கனவு எதுனா கண்டு எழுதினாங்களான்னு தெரியல. ஏங்க, கிண்டலடிக்கப்படுறதுக்கும் ஒரு தகுதி வேணாமா? படத்தைப் பாத்த பிறகு நீங்களே சொல்லுங்க, இது மகிந்தவைக் கிண்டலடிக்கிற நாடகமா இல்ல, மக்களோட போராட்டத்தைப் பத்தின நாடகமான்னு. எந்த ஊடக தர்மத்தைக் கேள்வி கேட்டோமோ, அந்த ஊடக தர்மம் கேலிக்கூத்தானது ஜூனியர் விகடன் கட்டுரையில தெரியுமுங்க.

பெருமைக்காகச் சொல்லலீங்க. இதுல நடிச்ச அம்புட்டு பேரும் முனைவருங்க. அதான் டாக்டருங்க. இவுங்க ரெண்டு வாரம் பாடுபட்டாலே இப்படி ஒரு அருமையான கூத்தைக் கட்ட முடியுதுங்க. நீங்களும் ஏனுங்க முயற்சி செய்யக் கூடாது? எவ்வளவோ சொத்தை, கடி நாடகமெல்லாம் பார்க்கிறோமுங்க. அதை எல்லாம் பாத்துட்டு வயித்துலயும், வாயிலயும் அடிச்சுக்குறோம். ஏன் மாறமாட்டேங்குறாங்கன்னு கேக்குறோம். ஆனா, மாற்றம் அப்படிங்கறது நம்மகிட்டேயிருந்துதானுங்க பொறக்கணும். நீங்களே நாடகம் போடுங்க. கூத்து கட்டுங்க. கைதட்ட ஆளுங்க இருப்பாங்க. உணர்வு இருக்கவங்க இன்னும் உயிரோடதான் இருக்காங்க. உங்களுக்குப் பிடிச்ச கதையை, நீங்க மக்களுக்குச் சொல்ல நினைச்ச கதையை நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. முயற்சி செய்யுங்க. வாழ்த்துக்கள்!

கூத்துக் கட்டின அன்புக் கலைஞர்கள்: இன்பன், மணி ஐயா, இளவரசன், யசோதை, சுபத்திரை, இளையோன், அரிநாதர், பத்து, உதயன், பகலவன், சிபிச்சக்கரவர்த்தி, மாசிலாமணி, பனையேறி, திருமதி பனையேறி, நெல்லி, யாழிசை, பிரியம் மற்றும் உதவிய, ஆலோசனைகளை வழங்கிய வளர் அக்கா, தண்டபானி ஐயா ஆகியோர். இப்படத்தை எடுத்தவர் அன்பிற்குரிய நண்பர் அண்ணாதுரை.

ஒளிப்படம்:




எழுதியவர்: பனையேறி