Saturday, September 27, 2008

பனைநிலம் தமிழறிவியல் கருத்தரங்கம் 2008



"தமிழ் மொழியானது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி.....
"

"2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள்.....
"



நிறுத்துங்க நிறுத்துங்க!

எத்தன நாளைக்குத்தான் இந்த பெருமை பேசி வாழ்றது.
இதை பேசிப் பேசி இந்த நூற்றாண்டிலேயே தமிழகத்தை ஆட்சி புரிந்தவர்கள், ஆரியர்களாலும் மற்றவர்களாலும் தமிழ் உருக்கொழிந்ததைக் காட்டிலும் அதிகமாகவே தொலைத்து விட்டனர். தமிழ் எங்கள் உயிர் மூச்சு! தமிழ் இல்லையேல் நாங்கள் இல்லை!! என்று மேடையில் முழங்கிய திராவிடக் கட்சிகள் தமிழுக்கு செய்த தொண்டுதான் என்னவென்று உண்மையாகப் பார்த்தோமேயானால் - தமிழ் எழுதப் படிக்க, முறையாக பேசக்கூத் தெரியாத மற்றும் தமிழ் பேச கூச்சப்படகூடிய இளைய தலைமுறையினை உருவாக்கியது தான்.

இன்னும் கொஞ்சம் கசப்பான உண்மைகளையும் பார்ப்போமா!


இன்று உலகில் கிட்டத்தட்ட 6800 மொழிகள் இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளிலேயே பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து விடுமாம் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி இறந்து கொண்டிருக்கிறது என்பது வேற விஷயம். சரி நமக்கு என்ன என்று பார்த்தால் இதில் தமிழ் மொழியும் ஒன்று என்று யுனெஸ்கோ மொழி ஆராய்ச்சி மையம் கூறுகிறது. உடனே எந்த மூடன் சொன்னான் தமிழ் என்றும் இறவா மொழி என்று கட்டியம் கூற கிளம்பி விட வேண்டாம். இன்றுள்ள நிலைமையைப் பார்த்தால் அது உண்மையாகி விடக்கூடிய நிலை உள்ளது. அடுத்த தலைமுறையில் என்ன, நம்ம வயசான காலங்களிலேயே தமிழ் வழக்கொழிந்த மொழியாகக் கூடிய அபாயம் உள்ளது.

இதை எப்பிடி சமாளிப்பது?.

அரசாங்கம் போன்ற அமைப்புகளில் நம்பிக்கை வைத்து பயனில்லை. அவர்கள் சமாதியில் தமிழை தள்ளி விட்டு செம்மொழியாக்கி விட்டோம் என்று மேடையில் வீர வசனம் பேசுவர். இதை நம்மைப் போன்ற எளியோர்களாலே இந்தப் பெரிய முயற்சியின் சிறிய தொடக்கத்தினை ஆரம்பிக்க முடியும்.
இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் உள்ள சார்லச்டன் எனும் ஒரு சிற்றூரில் உள்ள பனைநிலம் எனும் தமிழச் சங்கம்.

அதன் தலைவராக உள்ள
சுந்தர் அவர்களின் மிகச்சிறந்த இடைவிடா முயற்சிகளில் ஒன்று இது.


உலகத்தலைவர்களிடம் நேரம் கேட்டு ஒன்றாக அவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்துவது என்பது கூட பெரிய ஆச்சரியமில்லை. பனைநிலம் போன்ற அமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழகத்திலிருந்து வந்துள்ள இரவு பகலென்றும் பாராது வேலை பார்க்கும் ஆராய்ச்சியாளர்கள். அவர்களை ஒருங்கிணைத்து இதைபோன்ற தமிழிலேயே ஆராய்ச்சி மாநாடு நடத்துவது என்பது மிகப்பெரிய சவால் தான். சவாலே சாமாளி!

சுந்தர் பாட்டுக்கு தமிழ்ல ஆராய்ச்சி தொகுக்க ஆரம்பிங்கன்னு சொல்லிட்டாரு... ஆராய்ச்சியை விடக் கஷ்டமானது இந்த மாதிரி ரொம்ப முன்னேறிய ஆராய்ச்சியில இருக்கிற விசயங்கள தமிழ்ல மாத்துறது.....இத எப்படி பண்றதுன்னு நாங்க வேற சித்தம் கலங்கி போய்ட்டோம்.

முதல்ல ரெண்டு வாரத்துக்கு ஒரு மூச்சைக் காணோம். சரி ஆளுங்க அரண்டு போயி அமுங்கி போய்ட்டாங்கன்னு பார்த்தா, ஆளாளுக்கு தமிழ் அகராதி, அறிவியல் சொல்லகராதி, அறிவியல் தமிழ் அப்படி இப்படின்னு என்னனமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.நம்ம மக்கள் பக்கத்துல நெருங்கினாலே தூய தமிழ்ல ஆராய்ச்சிகளை பேசி நம்மள அசத்த ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி மாநாடு நாள் நெருங்க நெருங்க நம்மளுக்கு ஒரே பரபரப்பு.


மாநாட்டு நாள்.

மாநாட்டு மகால்ல நுழைஞ்சா பெரிய பரபரப்பு. நம்மாளுக அங்கங்கே அவசர கதியில் குறிப்பு எடுத்து கிட்டு இருக்காங்க. அதைப்பார்த்து நம்மளுக்கும் அந்த பரபரப்பு தொத்திகிச்சு.

தலைமை தாங்கியது திரு. கமலநாதன், சிறந்த எழுத்தாளர் . இவர் கேரளத்துக் கோயில் கலைகள், குறைகள் சாதனைக்குத் தடையல்ல, விண்வெளிப் பயணத்தைக் குறித்த நூல்கள் பலவற்றை எழுதியவர். இந்திய விண்வெளித்துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர். அறிவியலைத் தமிழில் கொண்டு செல்லும் இந்த ஒரு கருத்தரங்கிற்குத் தலைமை தாங்க மிகவும் பொருத்தமானவர். நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியது உமா மற்றும் ஆனந்தி.

முதல்ல வந்தாரு பருத்தி வீரன் கணேசு. பருத்தி உடை சார்ந்த தொழில்ல நிபுணத்துவம் பெற்ற அவரு பருத்தி துறை சார் நுணுக்கங்களை தெளிவா எடுத்து விளக்கினார். பருத்தி இழையிலிருந்து துணியாக மாறும் வித்தையை இழை இழையாக பிரிச்சி அலசி எடுத்தாரு.

அடுத்து நிறைய ஆளுக இருக்காக நம்ம மெல்ல போய்க்கிலாம்னு கொஞ்சம் அசந்தேன் பாருங்க.....நம்ம பேரக் கூப்பிட்டுடாங்க ...

நம்ம பேசுனது ஸ்டெம் செல் அப்பிடின்ற அற்புதத் தன்மை வாய்ந்த செல்களையும் மற்றும் அதன் மருத்துவ பயன்களைப் பற்றியது....எதோ சமாளிச்சி ஒரு வழியா முடிச்சாச்சு. கிளம்பலாம்னு பார்த்தா கேள்வி வேற கேட்போம்னு சொல்லிட்டாங்க..ஆஹா..இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு தான் சிக்கவச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது. அதையும் ஒரு வழியா முடிச்சு வந்தாச்சு.

அடுத்து மேலாண்மை மற்றும் பொருளாதரம் பற்றிய நுட்பங்களை எடுத்து விளக்கினார் நம்ம பாட்ஷா. அவரு ரெம்ப நாளா வேலை பார்க்கிற துறை...எல்லாத்தையும் நல்லா புரிய வச்சாரு. அடுத்தது ஆனந்தி. கணிதப்புலி. எளிய கணிதம் பயில்வது எப்பிடின்னு சொல்லிட்டு போயருவாங்கன்னு பார்த்தா நம்மூரு எட்டாவது கணக்கு ஆசிரியை மாதிரி நம்மாளுகளுக்கு அப்பப்ப வகுப்புப் பயிற்சி வேற கொடுத்தாங்க. எளிமையா இருந்ததால நம்ம மக்களுக்கு உபயோகமா இருந்தது.

மருத்துவத் துறையிலிருந்து பேசினார் பிரியா ராமன். குழந்தை நல மருத்துவர். குழந்தைகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகளை பற்றி அருமையா தெரிய வச்சாங்க. நம்ம தாய்மார்களுக்கு மிக்க பயனுள்ளதா இருந்தது.

இதயத்துறையிலிருந்து ஆராய்ச்சியாளர் ஹரி. இதயத்தின் இயக்கம் அதன் அதிமுக்கிய வேலைகளைப்பற்றி விளக்கியது நன்றாக இருந்தது.

வினு அடுத்ததாக வந்தாங்க. அவங்களும் பொது மருத்துவம் பற்றி சொல்லி புரிய வச்சாங்க. நோய் எதிர்ப்பு முறைகள் பற்றி விளக்கமா சொல்லி புரியவச்சாங்க.


அடுத்தது புரையத்திய நிபுணர் சீனிவாசன். எலும்பு மஜ்ஜையின் சிக்கலான செல்களைப்பற்றி அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.


அதே துறைசார் குமரன் கல்லத்தியம் பற்றி உரை நிகழ்த்தினார். எலும்பின் புதுச்செல் உருவாக்கத்தில் அதன் பயன்பாடுகளைபற்றி சொன்னது பயனுள்ளதா இருந்தது.


புற்று நோயில் ஒரு புரதம் - இது சிவாவினுடைய தலைப்பு. புற்று நோயையே புறந்தள்ளிவிடக் கூடிய அளவிற்கு மருந்தாக பேசினார்.

சாமுவேல் பேசியது நீரிளவு நோய் பற்றியது. நோய் காரணிகள் அதன் விளைவுகள் மற்றும் அதை தடுக்கும் காரணிகளைப் பற்றியது நன்றாக இருந்தது.

யுவராஜ் வந்து அகமும் புறமும் என்ற தலைப்பில் பேசினாரு. நம்ம உடம்பில உள்ள நுண்ணிய சுரப்பிகளின் செயற்பாடுகளைப் பற்றியும் அழகா எடுத்து பேசினார்.


இதெல்லாம் கேட்டு மக்கள் ரெம்ப உணர்ச்சி வசப்படக்கூடதுன்னு வந்து பேசியது தான் புதுமை அரசன். வாழும் கலை தலைப்பில் தியானம் பற்றி சொல்லி நம்மை தியானிக்க வச்சாரு.


அடுத்ததா வந்தது நம்ம சுந்தர். இதயச் செல் சட்டகத்தில் ஒரு புரதம். இது என்னான்னு பாக்குறீங்களா, அதான் நம்ம இதயசெல்களுக்குள்ள இருக்கிற ஒரு இழையின் புரத அங்கம். அதப்பத்தி நல்ல விளக்கி பேசினாரு.
பார்வையாளர்களில் ஒருவராய் இருந்த ஆனந்தகுமாரும் ஆர்வத்துடன் வந்து அனைவரையும் பாராட்டினார்.

அத்தனை மக்களும் சுந்தரத்தமிழில் அருமையாக தமிழ் அறிவியல் மாநாட்டை செய்து இருந்தாங்க. தமிழிலேயே புதிய கலைச் சொற்கள், அறிவியல் செய்திகள் மற்றும் அராய்ச்சித தகவல்களை அளித்து தமிழ் வீச்சில் அறிவியல் நடைபோடுவதைப் பார்க்க நம்ம மக்களுக்கு ஒரே பெருமை மற்றும் மனநிறைவுதான்.


இறுதி உரை கொடுத்த கமலநாதனும் இதையே சொல்லி ஆச்சரியப்பட்டதோடு அருமையாக உரையளித்த அனைவரையும் வெகுவா பாராட்டினார். கணேஷ் வந்து அனைவர்க்கும் நன்றி தெரிவித்து தமிழறிவியல் கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.


இவ்வளவு சிறப்பா கருத்தரங்கம் நடந்ததைப் பார்த்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஆசை வந்ததை யாராலும் மறுக்க முடியாது.


இது போல காலச்சக்கரத்தின் முன்னேற்றங்களை, அதன் பரிணாம வளர்ச்சிகளை மற்றும் அத்தோடு வளர்ந்து வருகின்ற அறிவியல் நுட்பங்களை தமிழில் புகுத்தி செம்மையாக்கினால் இப்பிரபஞ்சம் உள்ள காலத்தே தமிழ் வாழும் என்பது உறுதி.


தமிழ் வளர்ப்போம்!

அறிவியலால் தமிழ் வளர்ப்போம்! தமிழால் அறிவியல் வளர்ப்போம்!!


............................................

எல்லாருடைய ஒளிப்படங்கள் இல்லாததால், கிடைத்தவைகள் மட்டுமே இங்கு வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

........................................

சுந்தர் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்





......................................................................


செந்தில் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.............................................


சீனிவாசன் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.........................................



குமரன் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்



.................................................................


யுவராஜ் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்




.................................................................


புதுமை அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்












..................



கருத்தாக்கம் மற்றும் ஒளிப்படங்கள் உருவாக்கம்
கந்தன் - வள்ளி

Sunday, September 21, 2008

நளபாகம்

ஹெய்தி, கெய்கோ தீவுகள், பஹாமாஸ் தீவுகள், மயாமி, ஜாக்சன்வில், சவானா, சார்ல்ஸ்டன் போன்ற கடலோர பிரதேசங்களுக்கான விசேஷ வானிலை அறிக்கை: அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இவ்விடங்களில் பலத்த, மிகபலத்த இடி மழை பெய்யக்கூடும். ம்ணிக்கு 20 முதல் 120 மைல் வேகத்தில் பலத்த காற்று, சூறாவளிக் காற்று (ஹரிக்கேன் ஹானா, Hannah) வீச வாய்ப்புள்ளதால், ஆராய்ச்சியாளர்கள் யாரும் ஆராய்ச்சி கூடத்திற்கு போகவேண்டாமென்றும், காற்று மழை ஆதலால் இல்லத்தரசிகள் யாரும் சமையலறைக்குள் சென்று சமையல் செய்து, தண்ணீரில் கை வைத்து ஜலதோஷம் பிடித்து அவதிப்பட வேண்டாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

இதக் கேட்டப்பறமும், யாரு போய் சமச்சு, சளி புடிச்சு கஷ்டப்ப டறதுனு பயந்து, கால மடக்கிட்டு சோபாவுல உட்கார்ந்து, மெல்ல புருஷங்காரங்களை கெளப்பிவிட்டு சமைக்கச் சொல்லி வலியுறித்தினோம். புருஷன் பொஞ்சாதிகளுக்கு நடுவே நடந்த இந்த உறையாடல்கள் தற்செயலா பெரியவர் (வாத்தியார்) காதுல விழுந்து விடவே, அவர் ஆண்கள உற்சாகப்படுத்தி, நம்பிக்கையூட்டி ஒருவழியாய் ஒத்துக்கொள்ள வைத்தார். பெரியவர் வார்த்தையை மதித்து, காளையர் கரண்டி தூக்கிவிட்டனர்.

தனியா நின்னாதன திண்டாட்டம். கும்பலோட கோவிந்தா போட்டா கஷ்டமென்னனு எல்லா ஆம்பளைங்களும் வேட்டிய வரிஞ்சி கட்டிக்கிட்டு, தலைல முண்டாசோட, தடதடனு, ஜேம்ஸ் தீவிலுள்ள அந்த ஆயிரம் சதுரடி அபார்ட்மெண்டில் ஆஜரானார்கள். இனியன் பட்டியல் போட, மாயோன் மறுநிமிடம் காய்கறிகளுடன் காணப்பட்டார். கூத்தும் கும்மாளமுமாய் அந்த ரயில்வே கம்பார்ட்மெண்ட் போன்ற அடுக்களைக்குள் ஆண் சாம்ராஜ்யம் அழகாக சமைத்தது. அட நம்புங்களேன். ……. ஆண்கள். ஆண்களேதான். நல்லா கண்ண கசக்கிகிட்டு பாருங்க. சனிக்கிழமை தூக்கத்த விட்டு பனிரெண்டு மணி மதிய நேரம் முழிச்சு பார்த்திருந்தாதன உங்களுக்குத் தெரிய............ போர்வைக்குளேந்து பூலோகத்துக்கு வாங்க.

பல்லு வெளக்கறவங்களுக்குத்தான் பருப்புப் பொடியோட சாப்பாடு. சுத்தமா குளிக்கிறவங்களுக்குத் தான் சூடான சூப், சில்லுனு சாலட். கண்டிப்பானார்கள் ஆண்கள் இந்த விஷயத்தில். இப்படி ஆண்கள் கண்டிப்பா சொல்லாட்டா பெண்கள் சுறுசுறுப்பா ஒன்றரை மணிக்கெல்லாம் எங்கேந்து பல்லு வெளக்குறது?

“குளிச்சு முழுவி, ….சீவி முடிச்சு, சிங்காரிச்சு,
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு,
பாத்திரத்த உருட்டும் புருஷங்காரன பாக்க வந்த பொண்டுகளே பசியும் எனக்கு தாங்கலியே,
பிஸ்கட் சாப்பிட்டா பத்தலியே”னு
வள்ளியும் நானும் புலம்பல் பாட்டு பாடவே, எல்லா பெண்களும் வந்தாதான் சாப்பாடுனு இனியன் கண்டிப்பா சொல்லிட்டாரு. சரிதான். இனியாளுக்காக இவர் காத்திருப்பதால் தான் அப்படிச் சொல்லியிருப்பாருன்னு, எங்களை நாங்களே சமாதானப் படுத்திக்கொண்டோம்.

திடீரென கும்முனு செண்ட் வாசம் பாலத்திலேந்து வந்தது. சரி. சரி. நம்ம பொண்டுக கோஷ்டி வர்ர காரு வீட்ட நெருங்குது. இன்னும் செத்த நாழியில வாசல் மணி அடிக்குமென தெரிஞ்சிகிட்டோம். (பெண்கள் வரும் பின்னே. செண்ட் வாசம் வரும் முன்னே). சொன்னபடியே வாசல் மணி அடித்தது. திறந்தேன். ஜிலுஜிலுன்னு ஜோராய் அலங்காரம் செய்துகொண்டு குழந்தைகளோடும், கைப்பைகளோடும் வந்து நின்ற தோழிகளை வரவேற்றேன்.

அப்பாடா, ஒரு வழியா எல்லாரும் வந்தாச்சு. இனியாவது சாப்பாடு கிடைக்கும்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன். சற்று நேரம் சுடிதார்கள், சேலைகள் யார் யார் எங்கெங்கேந்து வாங்கினாங்க, என்ன விலை, ரவிக்கை எங்கே தைத்தார்கள் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம். ரொம்ப முக்கியமான விஷயமாச்சே……..

"யூ டியூப் (you tube)"ல பாட்டு கேட்டோம். சீட்டு விளையாட்டு. சுவாரஸ்யமான சிறுவயது கதைகள் பேசியபடி கல்லாங்கா விளையாட்டு. நேரம் போய்க் கொண்டேயிருந்தது……. லேசாய் பசித்தது.

பலவித வாசனைகள் சமையலறையிலேந்து வந்தபடி இருந்தது. அறைத்தல், வதக்குதல், கிண்டுதல், கிளருதல், உருட்டுதல், உடைத்தல், வெடித்தல்..... அடாடா………. அப்படி என்னதான் சமைக்கிறாங்க ரெண்டு மணி நேரமா என வியந்தபடியே பெண்கள் கூட்டம் பெரியவரிடம் பசிக்குது, பசிக்குதுனு தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

ஆட்டத்தை முடித்துக் கொண்டு அமைதியா சாப்பிட தயார் ஆகுமாறு, பெரியவர் மணி அடித்து அறிவித்தார். ஆடிச் சோர்ந்த அம்மணிகளுக்கு ஆஹாவென்ற ருசியான ரசம். சுர்ரென்று நாக்கை சுண்டி உசுப்பும் சற்றே காரமான பருப்புப் பொடி சாதம் உருண்டைகளாக்கப்பட்டு தலா ஒரு உருண்டை அளிக்கப்பட்டது. கடித்துக்கொள்ள சாலட் மற்றும் அஸ்பாரகஸ். பலத்த உபச்சாரம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி. வெந்த அஸ்பாரகஸ் வேம்பின் தங்கச்சி போலும் என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டோம். தண்ணீர், கை துடைக்க தாள், பல் குத்த குச்சி முதற்கொண்டு கணவன்மார்கள் சகல சிஷ்ருஷைகளும் செய்தார்கள்.

ஹானா (Hannah) வந்தாலும் வந்தது. இவங்க ஜாதகத்திலேயே கிரகநிலை மாற்றம் எற்படுத்திடுச்சா? ……………….

எங்களுக்கு ஏதோ நல்ல நேரம அன்னிக்கு! எல்லா பணிவிடைகளும் செஞ்சாங்க. இனிமேல் தான் விருந்து.

முதலில் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் வேலுடையானின் கைவண்ணம். பின் பெரியவர் மணக்க மணக்க செய்த உருளை கிழங்கு பொரியல், தக்காளி போட்ட பருப்பு, டாக்டரம்மா வீட்டுக்காரர் கந்தன் செய்துவைத்த கடலை பருப்புக்குள் கண்சிமிட்டும் காலி பிளவர், வினோதனின் அஸ்பாரகஸ், இளவரசு மற்றும் ஷ்வா மாமாவின் சிறப்பான உதவி மற்றும் மேற்பார்வையில் அனைத்தும் அமர்க்களமாய் தயாராகி சாப்பாட்டு மேசையில் சுடச்சுட வந்து நின்றது. என் வீட்டுக்காரர் போட்டோ எடுத்ததோடு சரி.

கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பில் ஜிலுஜிலுத்த கொத்தமல்லி, கரிவேப்பில்லை மிதக்கும் நீர்மோர் சகிதம் பாஸ்மதி சோறு வடிக்கப்பட்டு நெய், அப்பளம், ஊறுகாயுடனும், உபசாரங்கள் பலவோடும் அறுசுவை அமுது படைத்த ஆம்படையான்கள் அனைவருக்கும் "முதல் ஆய்வர் (first author)" தகுதி கொடுத்து சிறப்பித்தோம்.

பூரித்துபோன புருஷன்மார்கள் எங்களுக்கு சமைக்கத்தெரியாதுன்னு நெனைச்சீங்களா, நீங்க என்ன சமைக்கிறது, எங்களாலயும் முடியும்னு நிரூபித்து காட்டினரே தவிர, இனி நாங்களே சமைக்கிறோம் என்று மட்டும் சொல்லாதது ஒன்றே குறையாக முடிந்தது மதிய உணவு.

மகிழ்ந்து போன மங்கையர் கூட்டம் மனமார்ந்த நன்றிகளுடன், அடுத்த முறை சமைக்க நேர்ந்தால் இன்னும் சிறப்பாய் சமைக்க ஆலோசனைகள் வழங்கியது.
மதிய உணவோடு மட்டும் நிறுத்தி விடாமல், பகல் தூக்கம் முடிந்து மாலையில் எழும் மனைவியருக்கு சுவையான ஸ்வீட், காரம், காபி வழங்கலாம் என்றும், பஜ்ஜி சொஜ்ஜி செய்தால் கூட போதுமென்றும், இரவில் அது இதுனு அலட்டிக்காம லைட்டா பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, மசாலா பாலோடு நிறுத்திக்கொண்டால் போதுமென்றும் ஆலோசனை வழங்கியது.

நிறைவாக அடுக்களைக்குள் புகுந்து அசத்திவிட்ட ஆண்களுக்கு நூற்றி ஒன்று மார்க்குகள் அளித்து தீபாவளிக்கு தம் செலவில் ஜிகுஜிகுவென்று மின்னும் நல்ல சட்டை வாங்கித்தரப்படும் என்றும் உறுதி அளிக்கபட்டது. அனைத்துக்கும் மேலாக “அசத்தல் புருஷன்” என்ற உயர்வான பட்டத்தையும் வழங்கி கௌரவப்படுத்தியது மாதர் சங்கம்.

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை.

- ராதை

படங்கள்: மாயோன்