"தமிழ் மொழியானது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி....."
"2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள்....."
நிறுத்துங்க நிறுத்துங்க!
எத்தன நாளைக்குத்தான் இந்த பெருமை பேசி வாழ்றது. இதை பேசிப் பேசி இந்த நூற்றாண்டிலேயே தமிழகத்தை ஆட்சி புரிந்தவர்கள், ஆரியர்களாலும் மற்றவர்களாலும் தமிழ் உருக்கொழிந்ததைக் காட்டிலும் அதிகமாகவே தொலைத்து விட்டனர். தமிழ் எங்கள் உயிர் மூச்சு! தமிழ் இல்லையேல் நாங்கள் இல்லை!! என்று மேடையில் முழங்கிய திராவிடக் கட்சிகள் தமிழுக்கு செய்த தொண்டுதான் என்னவென்று உண்மையாகப் பார்த்தோமேயானால் - தமிழ் எழுதப் படிக்க, முறையாக பேசக்கூத் தெரியாத மற்றும் தமிழ் பேச கூச்சப்படகூடிய இளைய தலைமுறையினை உருவாக்கியது தான்.
இன்னும் கொஞ்சம் கசப்பான உண்மைகளையும் பார்ப்போமா!
இன்று உலகில் கிட்டத்தட்ட 6800 மொழிகள் இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளிலேயே பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து விடுமாம் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி இறந்து கொண்டிருக்கிறது என்பது வேற விஷயம். சரி நமக்கு என்ன என்று பார்த்தால் இதில் தமிழ் மொழியும் ஒன்று என்று யுனெஸ்கோ மொழி ஆராய்ச்சி மையம் கூறுகிறது. உடனே எந்த மூடன் சொன்னான் தமிழ் என்றும் இறவா மொழி என்று கட்டியம் கூற கிளம்பி விட வேண்டாம். இன்றுள்ள நிலைமையைப் பார்த்தால் அது உண்மையாகி விடக்கூடிய நிலை உள்ளது. அடுத்த தலைமுறையில் என்ன, நம்ம வயசான காலங்களிலேயே தமிழ் வழக்கொழிந்த மொழியாகக் கூடிய அபாயம் உள்ளது.
இதை எப்பிடி சமாளிப்பது?.
அரசாங்கம் போன்ற அமைப்புகளில் நம்பிக்கை வைத்து பயனில்லை. அவர்கள் சமாதியில் தமிழை தள்ளி விட்டு செம்மொழியாக்கி விட்டோம் என்று மேடையில் வீர வசனம் பேசுவர். இதை நம்மைப் போன்ற எளியோர்களாலே இந்தப் பெரிய முயற்சியின் சிறிய தொடக்கத்தினை ஆரம்பிக்க முடியும். இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் உள்ள சார்லச்டன் எனும் ஒரு சிற்றூரில் உள்ள பனைநிலம் எனும் தமிழச் சங்கம்.
அதன் தலைவராக உள்ள சுந்தர் அவர்களின் மிகச்சிறந்த இடைவிடா முயற்சிகளில் ஒன்று இது.
உலகத்தலைவர்களிடம் நேரம் கேட்டு ஒன்றாக அவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்துவது என்பது கூட பெரிய ஆச்சரியமில்லை. பனைநிலம் போன்ற அமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழகத்திலிருந்து வந்துள்ள இரவு பகலென்றும் பாராது வேலை பார்க்கும் ஆராய்ச்சியாளர்கள். அவர்களை ஒருங்கிணைத்து இதைபோன்ற தமிழிலேயே ஆராய்ச்சி மாநாடு நடத்துவது என்பது மிகப்பெரிய சவால் தான். சவாலே சாமாளி!
சுந்தர் பாட்டுக்கு தமிழ்ல ஆராய்ச்சி தொகுக்க ஆரம்பிங்கன்னு சொல்லிட்டாரு... ஆராய்ச்சியை விடக் கஷ்டமானது இந்த மாதிரி ரொம்ப முன்னேறிய ஆராய்ச்சியில இருக்கிற விசயங்கள தமிழ்ல மாத்துறது.....இத எப்படி பண்றதுன்னு நாங்க வேற சித்தம் கலங்கி போய்ட்டோம்.
முதல்ல ரெண்டு வாரத்துக்கு ஒரு மூச்சைக் காணோம். சரி ஆளுங்க அரண்டு போயி அமுங்கி போய்ட்டாங்கன்னு பார்த்தா, ஆளாளுக்கு தமிழ் அகராதி, அறிவியல் சொல்லகராதி, அறிவியல் தமிழ் அப்படி இப்படின்னு என்னனமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.நம்ம மக்கள் பக்கத்துல நெருங்கினாலே தூய தமிழ்ல ஆராய்ச்சிகளை பேசி நம்மள அசத்த ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி மாநாடு நாள் நெருங்க நெருங்க நம்மளுக்கு ஒரே பரபரப்பு.
மாநாட்டு நாள்.
மாநாட்டு மகால்ல நுழைஞ்சா பெரிய பரபரப்பு. நம்மாளுக அங்கங்கே அவசர கதியில் குறிப்பு எடுத்து கிட்டு இருக்காங்க. அதைப்பார்த்து நம்மளுக்கும் அந்த பரபரப்பு தொத்திகிச்சு.
தலைமை தாங்கியது திரு. கமலநாதன், சிறந்த எழுத்தாளர் . இவர் கேரளத்துக் கோயில் கலைகள், குறைகள் சாதனைக்குத் தடையல்ல, விண்வெளிப் பயணத்தைக் குறித்த நூல்கள் பலவற்றை எழுதியவர். இந்திய விண்வெளித்துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர். அறிவியலைத் தமிழில் கொண்டு செல்லும் இந்த ஒரு கருத்தரங்கிற்குத் தலைமை தாங்க மிகவும் பொருத்தமானவர். நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியது உமா மற்றும் ஆனந்தி.
முதல்ல வந்தாரு பருத்தி வீரன் கணேசு. பருத்தி உடை சார்ந்த தொழில்ல நிபுணத்துவம் பெற்ற அவரு பருத்தி துறை சார் நுணுக்கங்களை தெளிவா எடுத்து விளக்கினார். பருத்தி இழையிலிருந்து துணியாக மாறும் வித்தையை இழை இழையாக பிரிச்சி அலசி எடுத்தாரு.
அடுத்து நிறைய ஆளுக இருக்காக நம்ம மெல்ல போய்க்கிலாம்னு கொஞ்சம் அசந்தேன் பாருங்க.....நம்ம பேரக் கூப்பிட்டுடாங்க ...
நம்ம பேசுனது ஸ்டெம் செல் அப்பிடின்ற அற்புதத் தன்மை வாய்ந்த செல்களையும் மற்றும் அதன் மருத்துவ பயன்களைப் பற்றியது....எதோ சமாளிச்சி ஒரு வழியா முடிச்சாச்சு. கிளம்பலாம்னு பார்த்தா கேள்வி வேற கேட்போம்னு சொல்லிட்டாங்க..ஆஹா..இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு தான் சிக்கவச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது. அதையும் ஒரு வழியா முடிச்சு வந்தாச்சு.
அடுத்து மேலாண்மை மற்றும் பொருளாதரம் பற்றிய நுட்பங்களை எடுத்து விளக்கினார் நம்ம பாட்ஷா. அவரு ரெம்ப நாளா வேலை பார்க்கிற துறை...எல்லாத்தையும் நல்லா புரிய வச்சாரு. அடுத்தது ஆனந்தி. கணிதப்புலி. எளிய கணிதம் பயில்வது எப்பிடின்னு சொல்லிட்டு போயருவாங்கன்னு பார்த்தா நம்மூரு எட்டாவது கணக்கு ஆசிரியை மாதிரி நம்மாளுகளுக்கு அப்பப்ப வகுப்புப் பயிற்சி வேற கொடுத்தாங்க. எளிமையா இருந்ததால நம்ம மக்களுக்கு உபயோகமா இருந்தது.
மருத்துவத் துறையிலிருந்து பேசினார் பிரியா ராமன். குழந்தை நல மருத்துவர். குழந்தைகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகளை பற்றி அருமையா தெரிய வச்சாங்க. நம்ம தாய்மார்களுக்கு மிக்க பயனுள்ளதா இருந்தது.
இதயத்துறையிலிருந்து ஆராய்ச்சியாளர் ஹரி. இதயத்தின் இயக்கம் அதன் அதிமுக்கிய வேலைகளைப்பற்றி விளக்கியது நன்றாக இருந்தது.
வினு அடுத்ததாக வந்தாங்க. அவங்களும் பொது மருத்துவம் பற்றி சொல்லி புரிய வச்சாங்க. நோய் எதிர்ப்பு முறைகள் பற்றி விளக்கமா சொல்லி புரியவச்சாங்க.
அடுத்தது புரையத்திய நிபுணர் சீனிவாசன். எலும்பு மஜ்ஜையின் சிக்கலான செல்களைப்பற்றி அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.
அதே துறைசார் குமரன் கல்லத்தியம் பற்றி உரை நிகழ்த்தினார். எலும்பின் புதுச்செல் உருவாக்கத்தில் அதன் பயன்பாடுகளைபற்றி சொன்னது பயனுள்ளதா இருந்தது.
புற்று நோயில் ஒரு புரதம் - இது சிவாவினுடைய தலைப்பு. புற்று நோயையே புறந்தள்ளிவிடக் கூடிய அளவிற்கு மருந்தாக பேசினார்.
சாமுவேல் பேசியது நீரிளவு நோய் பற்றியது. நோய் காரணிகள் அதன் விளைவுகள் மற்றும் அதை தடுக்கும் காரணிகளைப் பற்றியது நன்றாக இருந்தது.
யுவராஜ் வந்து அகமும் புறமும் என்ற தலைப்பில் பேசினாரு. நம்ம உடம்பில உள்ள நுண்ணிய சுரப்பிகளின் செயற்பாடுகளைப் பற்றியும் அழகா எடுத்து பேசினார்.
இதெல்லாம் கேட்டு மக்கள் ரெம்ப உணர்ச்சி வசப்படக்கூடதுன்னு வந்து பேசியது தான் புதுமை அரசன். வாழும் கலை தலைப்பில் தியானம் பற்றி சொல்லி நம்மை தியானிக்க வச்சாரு.
அடுத்ததா வந்தது நம்ம சுந்தர். இதயச் செல் சட்டகத்தில் ஒரு புரதம். இது என்னான்னு பாக்குறீங்களா, அதான் நம்ம இதயசெல்களுக்குள்ள இருக்கிற ஒரு இழையின் புரத அங்கம். அதப்பத்தி நல்ல விளக்கி பேசினாரு. பார்வையாளர்களில் ஒருவராய் இருந்த ஆனந்தகுமாரும் ஆர்வத்துடன் வந்து அனைவரையும் பாராட்டினார்.
அத்தனை மக்களும் சுந்தரத்தமிழில் அருமையாக தமிழ் அறிவியல் மாநாட்டை செய்து இருந்தாங்க. தமிழிலேயே புதிய கலைச் சொற்கள், அறிவியல் செய்திகள் மற்றும் அராய்ச்சித தகவல்களை அளித்து தமிழ் வீச்சில் அறிவியல் நடைபோடுவதைப் பார்க்க நம்ம மக்களுக்கு ஒரே பெருமை மற்றும் மனநிறைவுதான்.
இறுதி உரை கொடுத்த கமலநாதனும் இதையே சொல்லி ஆச்சரியப்பட்டதோடு அருமையாக உரையளித்த அனைவரையும் வெகுவா பாராட்டினார். கணேஷ் வந்து அனைவர்க்கும் நன்றி தெரிவித்து தமிழறிவியல் கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.
இவ்வளவு சிறப்பா கருத்தரங்கம் நடந்ததைப் பார்த்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஆசை வந்ததை யாராலும் மறுக்க முடியாது.
இது போல காலச்சக்கரத்தின் முன்னேற்றங்களை, அதன் பரிணாம வளர்ச்சிகளை மற்றும் அத்தோடு வளர்ந்து வருகின்ற அறிவியல் நுட்பங்களை தமிழில் புகுத்தி செம்மையாக்கினால் இப்பிரபஞ்சம் உள்ள காலத்தே தமிழ் வாழும் என்பது உறுதி.
தமிழ் வளர்ப்போம்!
அறிவியலால் தமிழ் வளர்ப்போம்! தமிழால் அறிவியல் வளர்ப்போம்!!
அறிவியலால் தமிழ் வளர்ப்போம்! தமிழால் அறிவியல் வளர்ப்போம்!!
............................................
எல்லாருடைய ஒளிப்படங்கள் இல்லாததால், கிடைத்தவைகள் மட்டுமே இங்கு வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
........................................
எல்லாருடைய ஒளிப்படங்கள் இல்லாததால், கிடைத்தவைகள் மட்டுமே இங்கு வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
........................................
சுந்தர் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்
......................................................................
செந்தில் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்
.............................................
சீனிவாசன் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்
.........................................
குமரன் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்
.................................................................
யுவராஜ் அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்
.................................................................
புதுமை அவர்களின் கட்டுரை - ஒளிப்பட வடிவத்தில்
..................
கருத்தாக்கம் மற்றும் ஒளிப்படங்கள் உருவாக்கம்
கந்தன் - வள்ளி