Saturday, June 14, 2008

திரிசங்கு சொர்க்கம்ன்னா என்னான்னு தெரியுங்களா?

திரிசங்கு சொர்க்கம்ன்னா என்னான்னு தெரியுங்களா மஹாசனங்களே!

எங்கள மாதிரி ஆராய்ச்சிசாலைகளில் வேலை பார்க்கிறவங்களைக் கேட்டா தெரியும். வெள்ளிக்கிழமைகளில் ஆராய்ச்சின்ற பேர்ல எதையும் பண்ணாம வரப்போற வாரக்கடைசி விடுமுறையை எப்பிடிக்கழிக்கலாம்னு நினைச்சி பொழுதப்போக்கிக்கிட்டே.....அப்பிடியே ஆனந்தவிகடன், குமுதம், தினமலர், தமிழ்மணம், தட்ஸ்தமிழ் கொஞ்சம்.....பிறகு ஒபாமா, மெக்கெய்ன், தக்காளிக்காய்ச்சல், புளிக்காய்ச்சல் கொஞ்சம்னு இதர சல்லி விசயங்களை அக்குவேறா ஆணிவேறா பிச்சி ஆராய்ஞ்சி ....அப்பிடியே சாயங்காலம் வர்ற வரைக்கும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னுட்டு இருக்கறது........இதத்தான் வேலையும் பார்க்காம, நிம்மதியாவும் இருக்காம....ரெண்டுக்கும் இடையில இருக்கிற திரிசங்கு சொர்ர்கம்னு சொல்றது.

சரி என்னய்யா விசயம்னு கேக்கிறீங்களா....இப்படித்தான் இந்த வார வெள்ளிக்கிழமையையும் அப்படியே ஒப்பேத்திரலாம், பிறகு இறகுப்பந்து

விளையாட்டுல போய் சேர்ந்துக்கலாம்னு கணக்கு போட்டுக்கிட்டிருன்தேன். திடீர்னு பார்த்தால் கணினியில் ஒரு மின்னஞ்சல்...

வேற யாரு...வழக்கம்போல நம்ம பனையேறி தான். ஆகா வழக்கம்போல பெட்னா, கோடைவிழா அது இதுன்னுட்டு இப்பவும் ஏதோ அனுப்பிட்டாரய்யா...அனுப்பிட்டாருன்னு! திறந்தா........அதில ஆச்சரியம்.

இசைக்கச்சேரியோட அழைப்பிதழ். அதுல இன்னொரு ஆச்சர்யம், இலவசம் வேற.

ஆஹா. ஏதாவது மொக்கை கச்சேரியா இருந்தாலும் போய் பொழுதப்போக்கிறவேண்டியது தான் நினைச்சிக்கிட்டே, யாருன்னு பார்த்தா.....அட லால்குடி கிருஷ்ணன். சாட்சாத் லால்குடி ஜெயராமனோட் இசையுலக வாரிசு. இவரோட அப்பா லால்குடி ஜெயராமன், சங்கீத ஜாம்பவான்களான அரியங்குடி இராமனுஜ ஐயர், செம்பை, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜிஎன் பாலசுப்ரமணியன், மஹாராஜபுரம் சந்தானம், சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு வயலினாலேயே உயிர் கொடுத்தவர். அவருடைய தில்லானா, வருணங்களையும் அதோட நெளிவு சுளிவுகளையும் மெய் மறந்து கேட்கலாம். இவரோட தாத்தா ஒண்ணும் லேசுப்பட்டவரில்ல, விஆர். கோபால ஐயர் தான்.




அவரோட சிதார் வாசிக்கறவரு கெளரவ் மசும்தார். முன்ன பின்ன தெரியாத ஆளுதான். வலப்பதிவுகள்ல போய் பார்த்தப்பறம் தெரிஞ்சது அவரும் பெத்த பிஸ்த்துன்னு. மேற்கத்திய இசையுலகின் மிக உயர்ந்த பரிசான கிராம்மி விருதிற்கே பரிந்துரை செய்யப்பட்டவரு. அவரோட குரு வேற யாருமில்ல பண்டிட் ரவிசங்கர்தான். இவங்கள சார்லச்டன் கல்லூரியின் இசைத்துறை விருதுத்தொகை கொடுத்து வரவழச்சிருக்குன்னு ஒரு நண்பர் சொல்லி தெரிஞ்சது.

மக்கா, இன்னைக்கி இசை விருந்துதான். பண்ணாத வேலைகள அப்படியே வச்சிட்டு ஆராய்ச்சிசாலையை விட்டு கிளம்பியாச்சு. வூட்டுக்காரம்மா வேற கர்னாடக இசைக்கச்சேரிக்கு மேற்கத்திய உடை வேணாம்னு ஒரே வம்பு. அப்பத்தான அத சாக்கா வச்சிட்டு அவுக பட்டுப்புடைவயில வரலாமில்லையா. வழக்கம்போல மறுபேச்சு ஏதும் பேசாம உத்தரவு அவுக கிட்ட வாங்கிட்டு இனியன் வீட்டுக்கு போனேன். வேட்டி சட்டைக்கு மாறத்தான்.

நம்ம சங்கீதத்தில ஞானசூன்யமா இருந்தாலும் என்னதான் இருக்கும்னு ஒரு ஆர்வம். அந்தக்காலத்தில ஊர்ல வெட்டியா இருந்தப்ப மார்கழி மாசக் கச்சேரியில் போய் கலந்துக்க முடியல்ல. இந்த ஏழு கழுத வயசுல ஒரு வாய்ப்பு. புகுந்துறவேண்டியதுதான்.

ஏகக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளக்காரங்கதான். இந்த ஊர்ல சங்கீதத்த படிக்கறவங்க விசயத்தோட வந்திருப்பாங்க. அந்தப்பக்கம் பார்த்தா, பனைநிலமக்கள் தியேட்டர்ல படம் பார்க்கிற மாதிரி பந்தோபஸ்துக்களோட குழந்தை குட்டிகளோட வந்திருந்தாங்க.



கச்சேரிய சொன்ன நேரத்துக்கு சரியா ஏழு மணிக்கு ஆரம்பிச்சுட்டாங்க. லால்குடி கிருஷ்ணன் மற்றும் மசும்தார் நடுவில, மிருதங்கம் மற்றும் தபேலா பக்கவாத்தியக்காரங்க அவங்க இருபக்கமும். லால்குடி ஒரு குழந்தையை தடவிக்குடுக்கிற மாதிரி வயலினை மெதுவா தடவிக்கொடுத்து வாசிக்க ஆரம்பிச்சு, குழைஞ்சு அப்படியே உச்சத்துக்கு நம்மள கொண்டு போய்ட்டாரு. சிதார்ல மசும்தார் நம்ம நாடி நரம்பெல்லாம் உசுப்பி விட்ட மாதிரி
லால்குடிக்கு சரிக்கு சரியா இழஞ்சாரு. மத்தபடி என்ன சுருதி என்ன ராகம் என்ன தாளம் எதுவும் புரியல்ல. அடுத்தது ஜகல்பந்தி மாதிரியான கச்சேரி, பாட்டுக்கு பாட்டு போட்டிக்கு போட்டி மாதிரி தாளத்துக்கு தாளம் சுருதிக்கு சுருதி மாறி மாறி வாசிச்சு அப்படியே ஒண்ணா சேர்ந்து முடிச்சாங்க.


இடையில இடைவெளிவேற. பலகாரங்கள் மற்றும் குளிர்பானகள் சனார்ததனன் கோவில் அன்பர்கள் அன்பளிப்பாக அள்ளித்தந்தார்கள்.

அதன் பின்னால சிந்துபைரவியில கச்சேரியைக் களை கட்டினாங்க. வயலின் சிதார் ரெண்டுலயும் ராகம் குழைவா ப்ரவாகமா உருகி ஓடிச்சு. கடைசியா மகாத்மா காந்திக்கு பிடித்த வைஷ்ணவ ஜனதோ பாடலோட கச்சேரிய முடிச்சப்ப நம்ம சனங்களோட் கைத்தட்டல் அடங்க ரொம்ப நேரமாயிடுச்சி. ஸ்டேன்டிங் ஓவேஷன் அப்படின்னு ஆங்கிலத்தில சொல்வாங்களே, அரங்கத்தில அனைவரும் எழுந்து நின்னு கைத்தட்டுறதத்தான், அப்படிதான் நம்ம மக்கள் வரவேற்றாங்க. அதப்பார்த்து அந்தக்கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு மறுபடியும் ஒரு சின்ன ராகத்தை எடுத்து விட்டாங்க. மொத்தத்தில இரண்டு மணி நேர இசைப்பயணம் நம்மள மெய்யுருக வச்சிருச்சு.




நம்ம மாதிரி சங்கீத ஞானசூன்யங்கள் தெரிஞ்சு தெரியாம, புரிஞ்சு புரியாம இருந்தாலும் சங்கீதத்தில் மயங்கிடறோம் இலலையா. அது ஒருவகையான
சொர்க்கம்! திரிசங்கு சொர்க்கம்!!




இந்தப்படத்தில் இவர் இருப்பதும் இன்னொரு வகையான சொர்க்கம். (இசைக்கடலில் மூழ்கித்திளைக்கும் ஒரு கலாரசிகர்)

--------------------------------------


கந்தன் - வள்ளி

---------------------------------------