Saturday, October 11, 2008

சார்ல்ஸ்டனில் வானசாகசம்

சென்றமுறை ஊருக்கு (அதாங்க, இந்தியா) போகுமுன், 2 ஆம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் மகனிடம் என்ன வேண்டுமென்று கேட்டதற்கு, ஆகாய விமானம் வேண்டுமென்றான். சரிதான் என்று நல்ல அழகான விமானம் (விளையாட்டு பொம்மை) ஒன்று வாங்கிச் சென்றேன். அங்கு சென்றவுடன் முதல் வேலையாக அதை அவனிடம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு அவன் "ஓ"வென்று ஒரே அழுகை. என்ன ஏது என்று கேட்டதற்கு, அவன் என்னிடம் நிலத்தில் நிற்கும் விமானம் கேட்கவில்லையாம். பறக்கும் விமானம் கேட்டானாம். எனக்கு எப்படி அவனை சமாளிப்பதென்றே தெரியவில்லை. பிறகு அண்ணி அவனை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்ன செய்வது. எப்போதும் கீழே நிற்கும் விமானங்களை விட பறக்கும் விமானங்களின் மேல்தான் எல்லாருக்கும் ஒரு ஈர்ப்பு. அதுவும் வான சாகசம் செய்யும் விமானங்களைப் பார்த்தால், கேட்கவே வேண்டாம், அவ்வளவு தான். சார்ஸ்டனில் வான சாகசம் நடக்கப் போகிறது இன்னும் சில நாட்களில் என்று இனியன் என்னிடம் சொன்னவுடன் எனக்கு மிகவும் ஆனந்தம். இதுவரைப் பார்த்ததில்லை. தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்ப்பதென்றால் சும்மாவா?

இரவு தூக்கம் வர மறுத்தது. அப்படியே வந்தாலும், கனவுகளில் விமானங்களாக வந்தது. ஒருவழியாக அந்த நாளும் வந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வர இருக்கும் என்றும், 9 மணிக்கு முன்னால் சென்றால் மட்டுமே கூட்டத்தில் சிக்கி வழியில் மாட்டிகொள்ளாமல், சாகசங்களை முழுமையாக பார்க்கமுடியும் என்றும் இனியன் முதலிலேயே சொல்லிவிட்டார். என் 3 வயது பையனையும், ஊரிலிருந்து எங்களைப் பார்க்க வந்துள்ள அப்பா அம்மாவையும் அழைத்துக் கொண்டு காலை 8 மணிக்கெல்லாம் கட்டுசோறு கட்டிக்கொண்டு புறப்பட்டோம். வேறென்ன அங்கு விற்கும் காய்ந்த பிஸாவையும், ஹாட் டாக்கையுமா சாப்பிட முடியும்?

பாதி வழிவரை போக்குவரத்து நன்றாகத்தான் இருந்தது. சார்ல்ஸ்டன் இராணுவ விமானதளத்தை (இதப் பத்தி நம்ம கந்தன் விவரமா எழுதியிருக்காரு) நெருங்கும் முன் போக்குவரத்து நெரிசல். அம்மாடி? அம்புட்டு கூட்டம். போற வழியிலேயே இவ்வளவு கூட்டம் என்றால், அங்கு?.... அப்படி இப்படி என்று தளத்தை நெருங்கினோம். நுழைவாயிலில் இராணுவ வீரர்கள் எல்லா கார்களையும் சோதனை செய்து உள்ளே விட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது புரிந்தது போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.

நடுவில் கைதொலைபேசி கூப்பிட்டது. “எங்கு இருக்கிறீர்கள்?” என்று இனியன் கேட்கிறார். இன்னும் பிற நண்பர்களும் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதோ வந்துகொண்டே இருக்குறோம் என்று சொல்லிக்கொண்டே மெதுவாக நெரிசலில் ஊர்ந்து காரை நிறுத்துவதற்குள் வான சாகசங்களை ஆரம்பித்துவிட்டார்கள். 'ஆ' வென்று அப்போது பிளந்த வாய் தான். கடைசிவரை மூடவேயில்லை. அவ்வளவு அருமை. நான் மட்டுமல்ல. என் பையனும் தான். எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு பதிலே காணோம். திறந்த வாய் அங்கும் மூடவில்லை.

அப்படி இப்படி என்று சரியான இடம் பார்த்து கொண்டுவந்த மடக்கு நாற்காலிகளை பிரித்து பெற்றோர்களும், தள்ளுவண்டியில் மகனும் உட்கார, நான் நின்றுகொண்டே பார்க்க ஆரம்பித்தேன். கூட்டமோ கூட்டம். அவ்வளவு கூட்டம். வான சாகசம் பார்க்க இவ்வளவு பேரா? குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள், நிருபர்கள் என மக்கள் கூட்டம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தவில்லை யாரும். விமான ஓடுபாதைக்கு அருகில் போகவே முடியவில்லை. அவ்வளவு கூட்டம். பொதுமக்கள் பார்வைக்கென இரண்டாம் உலகப்போர் முதல் தற்போது உபயோகத்தில் உள்ள விமானங்கள் வரை நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே சிறிய ரக விமானங்களையே நிற்கவைக்கலாம் போல் பெரிதான “டிரீம் லைனர்” என்னும் மிகப்பெரிய விமானம் எல்லோரையும் கவர்ந்தது.. விமான சாகசங்கள் இல்லாதபோது மக்கள் அவற்றின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

இச்சாகசங்கள் பற்றி விளக்கிச் சொல்வது அவ்வளவு சுலபமில்லை. பறவைகள் தோற்றது போங்கள். நான்கு ஐந்து விமானங்கள் அணிவகுத்து சாகசங்கள், தனியாக சாகசங்கள், ஒன்றை ஒன்று இடிப்பது போல் சென்று அனைவரையும் 'ஆ' போட வைத்த சாகசங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை நான் சொல்வதை விட, படங்களில் பாருங்கள். உங்களுக்கே தெரியும். தன்டர் பேர்ட், புளு ஏஞ்சல் f15, f16 என ஏதோ A B C D 1 2 3 சொல்வது போல ஒவ்வொரு விமானத்தைப் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வேறு. நமக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை. கட்டுசோறும், கடையில் வாங்கிய குளிர் பானமும் களைப்பு வராமல் பார்த்துக்கொண்டன.

இடையில் நண்பர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள். அவ்வளவு கூட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு கடினம் தான். இனியன், இனியாள், கந்தன், வள்ளி மற்றும் வேலுடையான், இளமை அரசன் ஆகியோர் துணைவியருடன் வந்து சேர்ந்தனர். நண்பர்களுடன் கதை பேசிக்கொண்டே வேடிக்கை பார்த்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. இது தான் கடைசி நிகழ்ச்சி என்று அறிவிப்பாளர் அறிவித்ததும் தான் மாலையாகிவிட்டதை உணர்ந்தேன். வீடு திரும்பிய பிறகும் சில நாட்களுக்கு மனது அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. வருடத்திற்கு ஒருமுறை இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என நினைக்கும் போது மனதுக்கு மகிழ்சியாக இருக்கிறது.






























- மாயோன் ராதை

Friday, October 10, 2008

மற்றுமொரு மழை நாள்

இன்னைக்குச் சாயங்காலம் கன மழை வரும்னு அறிவிப்பு வந்ததால, வேகமா வெளி வேலையெல்லாம் முடிச்சுட்டு, வீட்டுக்குள்ள வந்து அடங்கிட்டோம். சொன்ன மாதிரியே, சிலு சிலுன்னு ஆரம்பிச்ச தூறல், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் 'சோ'ன்னு கொட்ட ஆரம்பிச்சது. சன்னலோரமா நின்னு, என் பிள்ளை மழையை வேடிக்கைப் பார்த்திட்டிருந்தார். நானும் கையில சூடாக பானத்தை(தேநீர்தாங்க) எடுத்துட்டு வந்து, ஒன்றாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தோம்.

வீடு முழுக்க நிசப்தமாயிருந்ததால், மழை ஒரு இசையருவியாய் கேட்டது. பாதுகாப்பான வட்டத்திற்குள் வாழ்கிறவரை, எதுவுமே அழகு, ஆனந்தம். எங்கள் வீட்டின் கூரையிலிருந்து வழிந்து கொண்டிருந்த மழையில் மனம் கரைந்து கொண்டிருந்தது. சில்லென்று முகத்தில் படர்ந்த காற்றோ, இயற்கையின் கருணையை இன்னுமொரு முறை நினைவு படுத்தியது.

மழையைப் பார்த்துக்கொண்டே, மனம் பயணித்துக் கொண்டிருந்தது. இயற்கையின் துவக்கம் எது? ஆரம்பம், முடிவு இல்லாததுதான் இயற்கையா? எதுவாக இருப்பினும், இயற்கையே ஆழ் மனதின் தேடல், ஆறுதல், குதூகலம், மகிழ்ச்சி, எல்லாமும்.

மழை வேகமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. இயற்கையோடு இணைந்த எதுவுமே அழகுதான். தோல்வியெனத் தெரிந்தும், இயற்கையை விஞ்சத் துடிக்கும் மனது. இந்த விசயத்தில் மட்டும் ஏன் மனம் வேறாக, புத்தி வேறாகச் செயல்படுகிறது?

மழை நாளில் கப்பல் விட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரில் தாவிக் குதித்து, முகத்தில் சிலீரென மழைநீர் பட்டவுடன் மனதில் பரவசம் அடைந்த அக்குழந்தைப் பருவ நாட்கள் இணையில்லாதது. மூழ்காதக் கப்பல்களின் சொந்தக்காரர்களாய் பெருமையோடு, அந்நாட்களில் நண்பர் பட்டாளங்களுடன் சென்று, மழை நின்றபின், சிறு மரக்கிளைகளைப் பிடித்து உலுக்கி, தலை மேல் விழுந்தத் துளிகளைத் தடவி உள்ளம் ஆர்ப்பரித்திருக்கிறது. ஈரமான குடையின் ஒவ்வொரு முனையிலிருந்தும் சொட்டும் மழைத்துளியை உள்ளங் கையிலேந்தி மனது ரசித்திருக்கிறது.

நினைவலைகளுக்கு நேரம் போதுவதேயில்லை. ஒவ்வொரு மழை நாளிலும், தேநீருடன் குழந்தையோடு, குழந்தையாய் என் நினைவுகள் தொடர்கிறது.

-எழுதியவர் பனையோலை.

யோகா- ஓர் அறிவியல் பார்வை

தமிழகத்தில் பிறந்து, இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (DRDO) உடற்செயலியல் (Physiology) துறையில் ஆராய்ச்சி செய்துவரும் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான முனைவர் செல்வமூர்த்தி அவர்கள் சிறந்த பாடகரும் கூட.

இவர் இ.பா.ஆ.மே.க.தின் முன்னாள் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்த மேதகு முனைவர் அப்துல் கலாம் அவர்களின் நெருங்கிய நண்பர். திரு. கலாம் அவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது இவரை அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வாராம்.

முனைவர் செல்வமூர்த்தி அவர்கள், தனது ஆய்வு முடிவுகளைப் பற்றி உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வந்திருந்தார். நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் போல் அல்லாமல் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று துடியாய் துடித்து கொண்டிருக்கும் எங்கள் பனைநிலத் தமிழ்ச் சங்கத் தலைவர், முனைவர் செல்வமூர்த்தி அவர்களை அழைத்து, உங்களின் ஆராய்ச்சியை பற்றி நம் மக்களுக்கு தமிழில் விளக்க முடியுமா என்று வினவ, அவரும் முகமலர்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

இவர் இ.பா.ஆ. மே. க தில் பணிபுரிவதால் இந்தியப் படைவீரர்களுக்கு
யோகா பயிற்சி கொடுத்து, அதனால் ஏற்பட்ட பலன்களை ஆய்வு செய்கிறார். ஆய்வு முடிவுகளை லேன்செட்(LANCET) என்னும் ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளார். யோகாவினால் ஏற்படும் பயன்களை ஏடுகளின் மூலம் அறிந்திருக்கிறோம். அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து ஆய்வு இதழில் வெளியுட்டுள்ள இவரது பணி முதன்மையானதாகும். இதை நான் விளக்கு வதைவிட, இவர் பனைநிலத்தில் ஆற்றிய எளிய தமிழ் உரையில் யோகா என்றால் என்ன, அதன் வகைகள், பலன் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பற்றிய முழு விவரமும் கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து அறிந்து கொள்ளவும்.

கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் இவர், எப்பொழுதும் புன்னகையுடனும், சுறுசுறுப்புடனும், இளமைப் பொலிவுடனும் காணப்படுகிறார். இவர் எங்களுக்கும் முப்பது நிமிட எளிய யோகா பயிற்சியைக் கற்றுத் தந்தார்.

பிறகு பல நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்தினார். இறுதியாக எங்கள் தலைவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) விழா ஒன்றில் இவரும், மேதகு கலாம் அவர்களும் இணைந்து பாடிய அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.....என்ற ஔவையாரின் பாடலைப் பாடி இனிதே நிறைவு செய்தார். பாடலும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: யோகா மெய்யறிவின் மூலம் அறியப்பட்டது, அதற்கு அறிவியல் விளக்கம் மூலம் தெளிவுபடுத்தினால் தான் உண்மை என்று இல்லை, இருந்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே உண்மை என்று நம்புபவர்க்கு அய்யா மிகவும் அருமையாக நிரூபித்துள்ளார்கள்.
நாமும் யோகம் பயின்று எப்பொழுதும் புன்னகையுடனும், சுறுசுறுப்புடனும், இளமைப் பொலிவுடனும் இருப்போம்.
வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டுகள்.!

எழுதியவர்கள் - இன்பம் & இனியாழ்

தமிழ் வாழ்கிறதா அல்லது வீழ்கிறதா?

என்ன, இது ஏதோ பட்டிமன்றத் தலைப்பு மாதிரி இருக்கா? எங்கள் ஊரில் சில மாதங்களுக்கு முன்பு தமிழிலேயே நடந்த அறிவியல் கருத்தரங்கம் பற்றி நண்பர் கந்தன் அண்மையில் ஒரு பதிவு போட்டிருந்தார். தமிழின் இன்றைய நிலைப்பாடுகள்குறித்து சூடான விவாதங்கள் எழுந்தது.

தமிழில் பேச, எழுத, ஏன் 'நான் ஒரு தமிழன்' என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படும் நிலையில், நம் கண்ணெதிராகவே தமிழ் அழிந்துவிடும் என முடித்திருந்தார். விவாதங்கள்அந்தத் தலைப்பைவிட்டு வேறு திசையில் செல்ல ஆரம்பித்ததால், அப்போதைக்கு அந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டியதாயிற்று.

அதற்குப்பின் மனதில் ஒரு வலி, வேதனை. உண்மையாகவே, என் பிள்ளையும், அவனைச் சுற்றியுள்ள சின்னஞ் சிறு நண்பர் கூட்டமும் தலைதூக்கும் தருணங்களில்மொழியிழந்த, முகவரியிழந்த சமூகத்தினராக இருப்பார்களா? நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தகவல் பரிமாற்றங்கள் நடக்கும் இந்த கால கட்டத்தில், நம் மொழி அழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து கைக்கொட்டிச் சிரிக்கும் வேடிக்கை மனிதர்களா நாம்? நம்மில் பெரும்பாலானோர், பள்ளி வயது நாட்களை தமிழ்த்தாய் வாழ்த்துடனேயேதுவங்கியிருப்போம். அதில் தாய் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? தமிழை உண்மையாகவே தாயென நினைக்கிறோமா?

நீ என்ன சாதித்துவிட்டாய் அல்லது உனக்கென்ன தகுதி இருக்கிறது, பதிவு போட வந்து விட்டாய் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. விவாதிக்க வந்தவர்களை தனி மனிதவிமர்சனங்களுக்கு உட்படுத்தும் சிறிய குடுவைக்குள் இருந்து சற்று மேலே வாருங்கள்.

சர்வேதேச சந்தையில் நம் சரக்கை விற்க ஆங்கில அறிவு அவசியம், புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு சமூக மொழியாக ஆங்கிலம் அவசியம் என்பது பற்றி நிறையப்பேசியாகிவிட்டது.

எழுத்துரிமை தனி மனித சொத்தாகியுள்ள இந்த நல்ல நேரத்தில், மேலேயுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொரு தமிழுணர்வாளரின் பதில் என்ன? உங்கள் கருத்துக்கள்வரவேற்கப்படுகின்றன.

எழுதியவர் - பனையோலை.

Wednesday, October 8, 2008

சார்லஸ்டன் பதிவர்களின் அமளி, துமளி ??!!

தலைப்ப பார்த்துட்டு எதோ, சண்டைன்னு நெனைக்க வேணாம். நம்ம பனையேறி அண்ணன் இந்த வார நட்சத்திரம்நாமதான்னு சொன்னாலும் சொன்னாரு, என்ன வேகமா மக்கள் எழுதறாங்க தெரியுமா? நம்ம பாட்டு டீச்சர், பதிவுபோட்டு மெரள வச்சிட்டாங்க. பனையேறி அண்ணன கேட்கவே வேணாம்!எங்க வீட்டுக்காரர் எனக்கு போன் பண்ணி, இன்னுமா எழுதறன்னு நக்கல் வேற விட்டாரு. எழுதலாம்னு பொட்டியத்தெறந்தா, மாயோன் சுட்டு வச்ச படத்த வேக வேகமா வலையேற்றம் செஞ்சி தன் பங்குக்கு பட்டய கெளப்பிட்டாரு.

சரி நம்ம நெலம, எடுபடாது போலயிருக்குன்னு, யாழினிக்கு போன் செஞ்சேன். அவங்க என்னடான்னா இன்றையபங்கு சந்தை நிலவரத்த எழுதப்போறதாகக் கேள்விப்பட்டேன். பங்கு சந்தைச் சரிவை விட வேகமா இருந்தாங்க.

இதெல்லாம் நமக்கு சரிப்படாது, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஒதுங்கலாம்னு பார்த்தா அவ்வளவு சுலபத்திலமுடியாது போலிருக்கு. ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் மன்னர் வேடத்தில் நடித்திருப்பார். எதிரி நாட்டு அரசன் அந்தநாட்டின் மீது படையெடுத்து வருவதாக புறா மூலம் ஓலை அனுப்பிக்கொண்டே இருப்பார். ஆனா இவரு எதைப்பத்தியும் கவலைப்படாம புறாவப் புடிச்சி வறுத்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். கடைசியா, பார்த்தா எதிரி நாட்டுஅரசன் அரண்மனை வாசல்ல படையோட நிப்பார். என்ன செய்யன்னு தெரியாத இந்த முட்டாள் அரசன், எனக்கு ஒரேகாய்ச்சல்னு சொல்லி அந்த ஆளைத் திருப்பி அனுப்புன்னு அமைச்சரப் பார்த்துக் கெஞ்சுவார்.

மக்களே, என் நெலமையும் கிட்டதட்ட அதே மாதிரிதான். ஏதாவது பெயர் தெரியாத வைரஸ் இருந்தா சொல்லுங்க,எனக்கு உதவியாக இருக்கும். என்னடா இது, சார்லஸ்டனுக்கு வந்த சோதனை? என் பதிவிற்கு பதில் போட ஒருவரும்இல்லையா என பாலைய்யா குரலில் நீங்கள் சொல்வது கேட்கிறது. நம்ம குருசாமி இன்பமும், என் வீட்டுக்காரரும்சேர்ந்து, பலமா யோசிக்கிறதா ஆத்தக் கடந்து செய்தி வேகமா வந்தது.

அடுத்த போன் எங்க வீட்டுக்காரரிடமிருந்து வருவதற்குள் நான் என் தலைப்புக்குள்(மின்னி மின்னி ) போகிறேன்.அதயும் படிங்க.

-பனையோலை.


மின்னி மின்னி விண்மீனே….

மின்னி மின்னி விண்மீனே,

உன்னைக் கண்டு வியந்தேனே...

சார்லஸ்டன் பொது நூலகத்தின் வாயிலருகேயுள்ள அரங்கைக் கடந்து செல்லும் பிற மொழிப் பிரிவினரையும் நின்றுகேட்க வைக்கும் மனதை வருடும் பாடல் இது. தென்றலாய் நம் காதுகளைத் தழுவிய மெல்லிய இசைக்குயில்கள்வேறு யாருமல்ல, எங்கள் பனை நிலத் தமிழ்ப் பள்ளிக்குழந்தைகள்தான். இவர்களைப் பற்றி அனைவரும் அறியவேஇப்பதிவு.

புலம் பெயர் நாடுகளில் வளரும் குழந்தைகளுக்கு சமூக மொழியாக ஆங்கிலம் இருப்பதால், தமிழைப் பேச,எழுதக் கற்றுக் கொடுப்பது, ஒவ்வொரு பெற்றோரின் மிக முக்கியமான கடைமைகளுள் ஒன்றாகும். மொழியை இழந்தசமூகம், ஒரு அழிந்த இனமாகிவிடுவதால், அத்தகைய நிலை நம் அடுத்த தலைமுறைக்கு நேராமல் காக்கதமிழ்ப்பள்ளிகள் இங்கு மிக மிக அவசியமான ஒன்று.

இவ்வாறான பல உயரிய நோக்கங்களுடன் சென்ற வருட ஆரம்பத்தில் துவங்கப்பட்ட பள்ளிதான் எங்கள் பனைநிலத் தமிழ்ப் பள்ளி. எங்களுக்கும் ஆரம்பத்தில் குழந்தைகளின் தமிழார்வம் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தது.ஆனால் அவர்களின் ஆர்வத்திற்கும், கேள்விகளுக்கும் ஈடுகொடுக்க தற்போது பெற்றோர்கள் நிறைய வீட்டுப்பாடங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

நம்மூர் பள்ளிகளைப் போலல்லாமல், குறைந்த அளவே மாணவர்கள் இருப்பதால், பல வயதுக் குழந்தைகள்அடங்கிய ஒரே வகுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றரை மணி நேரத் தமிழ்வகுப்பும், அரைமணி நேரத் தமிழ் பாடல் வகுப்பும் நடைபெறுகிறது. பெற்றோர்களே, தன்னார்வல ஆசிரியர்களாகி வகுப்புகள்நடத்திவருகிறோம். ஓய்விற்காக, இங்குள்ள தனது பேரக்குழந்தைகளுடன் நாட்களைச் செலவிட வந்துள்ள திரு.சண்முகராஜன், அய்யா அவர்கள், தானும் முன்வந்து பாடங்கள் சொல்லிக் கொடுத்துவருகிறார்.

எங்கள் கோடை விழா மற்றும் பொங்கல் விழாக்களில் இப்பள்ளிக் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் ஒரு முக்கியஅங்கமாகும். இக்குழந்தைகளின் மழலைத் தமிழ் கேட்போரின் மனதைக் கொள்ளை கொண்டுவிடுகிறது. இதன்அடுத்தக் கட்டமாக, கடந்த இருவருடங்களாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டு நிகழ்ச்சிகளில்பங்கேற்று வருகின்றனர். சென்ற வருட விழாவில் பல பரிசுகளைப் பெற்று எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பல்வேறு ஊடகங்கள் வாயிலாக இவர்கள் தமிழ் பயின்று எங்களை மகிழ்வித்து வருகின்றனர். தஞ்சைத் தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து, தேர்வெழுதி சான்றிதழ் பெற வைப்பது எங்கள் தமிழ்ப் பள்ளியின்எதிர்காலத் திட்டமாகும்.

இவர்களுக்காகப் பெற்றோர்களும், நிறைய ஆங்கிலப் பாடல்கள் மற்றும் புத்தகங்களைத் தமிழ்படுத்தி வருகிறோம்.

உலகின் மேலே உயர்வானில்

வைரம் போலே மின்னுகிறாய்

மின்னி மின்னி...

டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலின் தமிழாக்கமான இந்தப்பாடலை, தங்கள் சிறிய குரல்களைமெதுவாக இழைத்து பாடிக்கொண்டே இவர்கள் இப்பள்ளியில் பயணிக்கிறார்கள்.

எழுதியவர் - பனையோலை.