Saturday, October 11, 2008

சார்ல்ஸ்டனில் வானசாகசம்

சென்றமுறை ஊருக்கு (அதாங்க, இந்தியா) போகுமுன், 2 ஆம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் மகனிடம் என்ன வேண்டுமென்று கேட்டதற்கு, ஆகாய விமானம் வேண்டுமென்றான். சரிதான் என்று நல்ல அழகான விமானம் (விளையாட்டு பொம்மை) ஒன்று வாங்கிச் சென்றேன். அங்கு சென்றவுடன் முதல் வேலையாக அதை அவனிடம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு அவன் "ஓ"வென்று ஒரே அழுகை. என்ன ஏது என்று கேட்டதற்கு, அவன் என்னிடம் நிலத்தில் நிற்கும் விமானம் கேட்கவில்லையாம். பறக்கும் விமானம் கேட்டானாம். எனக்கு எப்படி அவனை சமாளிப்பதென்றே தெரியவில்லை. பிறகு அண்ணி அவனை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்ன செய்வது. எப்போதும் கீழே நிற்கும் விமானங்களை விட பறக்கும் விமானங்களின் மேல்தான் எல்லாருக்கும் ஒரு ஈர்ப்பு. அதுவும் வான சாகசம் செய்யும் விமானங்களைப் பார்த்தால், கேட்கவே வேண்டாம், அவ்வளவு தான். சார்ஸ்டனில் வான சாகசம் நடக்கப் போகிறது இன்னும் சில நாட்களில் என்று இனியன் என்னிடம் சொன்னவுடன் எனக்கு மிகவும் ஆனந்தம். இதுவரைப் பார்த்ததில்லை. தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்ப்பதென்றால் சும்மாவா?

இரவு தூக்கம் வர மறுத்தது. அப்படியே வந்தாலும், கனவுகளில் விமானங்களாக வந்தது. ஒருவழியாக அந்த நாளும் வந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வர இருக்கும் என்றும், 9 மணிக்கு முன்னால் சென்றால் மட்டுமே கூட்டத்தில் சிக்கி வழியில் மாட்டிகொள்ளாமல், சாகசங்களை முழுமையாக பார்க்கமுடியும் என்றும் இனியன் முதலிலேயே சொல்லிவிட்டார். என் 3 வயது பையனையும், ஊரிலிருந்து எங்களைப் பார்க்க வந்துள்ள அப்பா அம்மாவையும் அழைத்துக் கொண்டு காலை 8 மணிக்கெல்லாம் கட்டுசோறு கட்டிக்கொண்டு புறப்பட்டோம். வேறென்ன அங்கு விற்கும் காய்ந்த பிஸாவையும், ஹாட் டாக்கையுமா சாப்பிட முடியும்?

பாதி வழிவரை போக்குவரத்து நன்றாகத்தான் இருந்தது. சார்ல்ஸ்டன் இராணுவ விமானதளத்தை (இதப் பத்தி நம்ம கந்தன் விவரமா எழுதியிருக்காரு) நெருங்கும் முன் போக்குவரத்து நெரிசல். அம்மாடி? அம்புட்டு கூட்டம். போற வழியிலேயே இவ்வளவு கூட்டம் என்றால், அங்கு?.... அப்படி இப்படி என்று தளத்தை நெருங்கினோம். நுழைவாயிலில் இராணுவ வீரர்கள் எல்லா கார்களையும் சோதனை செய்து உள்ளே விட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது புரிந்தது போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.

நடுவில் கைதொலைபேசி கூப்பிட்டது. “எங்கு இருக்கிறீர்கள்?” என்று இனியன் கேட்கிறார். இன்னும் பிற நண்பர்களும் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதோ வந்துகொண்டே இருக்குறோம் என்று சொல்லிக்கொண்டே மெதுவாக நெரிசலில் ஊர்ந்து காரை நிறுத்துவதற்குள் வான சாகசங்களை ஆரம்பித்துவிட்டார்கள். 'ஆ' வென்று அப்போது பிளந்த வாய் தான். கடைசிவரை மூடவேயில்லை. அவ்வளவு அருமை. நான் மட்டுமல்ல. என் பையனும் தான். எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு பதிலே காணோம். திறந்த வாய் அங்கும் மூடவில்லை.

அப்படி இப்படி என்று சரியான இடம் பார்த்து கொண்டுவந்த மடக்கு நாற்காலிகளை பிரித்து பெற்றோர்களும், தள்ளுவண்டியில் மகனும் உட்கார, நான் நின்றுகொண்டே பார்க்க ஆரம்பித்தேன். கூட்டமோ கூட்டம். அவ்வளவு கூட்டம். வான சாகசம் பார்க்க இவ்வளவு பேரா? குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள், நிருபர்கள் என மக்கள் கூட்டம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தவில்லை யாரும். விமான ஓடுபாதைக்கு அருகில் போகவே முடியவில்லை. அவ்வளவு கூட்டம். பொதுமக்கள் பார்வைக்கென இரண்டாம் உலகப்போர் முதல் தற்போது உபயோகத்தில் உள்ள விமானங்கள் வரை நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே சிறிய ரக விமானங்களையே நிற்கவைக்கலாம் போல் பெரிதான “டிரீம் லைனர்” என்னும் மிகப்பெரிய விமானம் எல்லோரையும் கவர்ந்தது.. விமான சாகசங்கள் இல்லாதபோது மக்கள் அவற்றின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

இச்சாகசங்கள் பற்றி விளக்கிச் சொல்வது அவ்வளவு சுலபமில்லை. பறவைகள் தோற்றது போங்கள். நான்கு ஐந்து விமானங்கள் அணிவகுத்து சாகசங்கள், தனியாக சாகசங்கள், ஒன்றை ஒன்று இடிப்பது போல் சென்று அனைவரையும் 'ஆ' போட வைத்த சாகசங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை நான் சொல்வதை விட, படங்களில் பாருங்கள். உங்களுக்கே தெரியும். தன்டர் பேர்ட், புளு ஏஞ்சல் f15, f16 என ஏதோ A B C D 1 2 3 சொல்வது போல ஒவ்வொரு விமானத்தைப் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வேறு. நமக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை. கட்டுசோறும், கடையில் வாங்கிய குளிர் பானமும் களைப்பு வராமல் பார்த்துக்கொண்டன.

இடையில் நண்பர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள். அவ்வளவு கூட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு கடினம் தான். இனியன், இனியாள், கந்தன், வள்ளி மற்றும் வேலுடையான், இளமை அரசன் ஆகியோர் துணைவியருடன் வந்து சேர்ந்தனர். நண்பர்களுடன் கதை பேசிக்கொண்டே வேடிக்கை பார்த்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. இது தான் கடைசி நிகழ்ச்சி என்று அறிவிப்பாளர் அறிவித்ததும் தான் மாலையாகிவிட்டதை உணர்ந்தேன். வீடு திரும்பிய பிறகும் சில நாட்களுக்கு மனது அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. வருடத்திற்கு ஒருமுறை இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என நினைக்கும் போது மனதுக்கு மகிழ்சியாக இருக்கிறது.






























- மாயோன் ராதை

3 comments:

Anonymous said...

ராதை, நன்றாக எழுதி உள்ளீர்கள்
மாயோன் படங்கள் அருமை
அன்புடன்
இன்பம்

Anonymous said...

நான் தவறவிட்டதை மகன் பார்த்துவிட்டு வந்துவிட்டார். கூப்பிட்டுக் கொண்டு போன இன்பத்துக்கு நன்றி.
ராதையின் கதையும் மாயோனின் படங்களும் எப்போதும்போல் வெகு பொருத்தம்!!
-பனையேறி

Anonymous said...

மாயோனின் ஒளிப்படங்கள் மாயாஜாலங்கள்.

கந்தன்