Wednesday, October 8, 2008

சார்லஸ்டன் பதிவர்களின் அமளி, துமளி ??!!

தலைப்ப பார்த்துட்டு எதோ, சண்டைன்னு நெனைக்க வேணாம். நம்ம பனையேறி அண்ணன் இந்த வார நட்சத்திரம்நாமதான்னு சொன்னாலும் சொன்னாரு, என்ன வேகமா மக்கள் எழுதறாங்க தெரியுமா? நம்ம பாட்டு டீச்சர், பதிவுபோட்டு மெரள வச்சிட்டாங்க. பனையேறி அண்ணன கேட்கவே வேணாம்!எங்க வீட்டுக்காரர் எனக்கு போன் பண்ணி, இன்னுமா எழுதறன்னு நக்கல் வேற விட்டாரு. எழுதலாம்னு பொட்டியத்தெறந்தா, மாயோன் சுட்டு வச்ச படத்த வேக வேகமா வலையேற்றம் செஞ்சி தன் பங்குக்கு பட்டய கெளப்பிட்டாரு.

சரி நம்ம நெலம, எடுபடாது போலயிருக்குன்னு, யாழினிக்கு போன் செஞ்சேன். அவங்க என்னடான்னா இன்றையபங்கு சந்தை நிலவரத்த எழுதப்போறதாகக் கேள்விப்பட்டேன். பங்கு சந்தைச் சரிவை விட வேகமா இருந்தாங்க.

இதெல்லாம் நமக்கு சரிப்படாது, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஒதுங்கலாம்னு பார்த்தா அவ்வளவு சுலபத்திலமுடியாது போலிருக்கு. ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் மன்னர் வேடத்தில் நடித்திருப்பார். எதிரி நாட்டு அரசன் அந்தநாட்டின் மீது படையெடுத்து வருவதாக புறா மூலம் ஓலை அனுப்பிக்கொண்டே இருப்பார். ஆனா இவரு எதைப்பத்தியும் கவலைப்படாம புறாவப் புடிச்சி வறுத்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். கடைசியா, பார்த்தா எதிரி நாட்டுஅரசன் அரண்மனை வாசல்ல படையோட நிப்பார். என்ன செய்யன்னு தெரியாத இந்த முட்டாள் அரசன், எனக்கு ஒரேகாய்ச்சல்னு சொல்லி அந்த ஆளைத் திருப்பி அனுப்புன்னு அமைச்சரப் பார்த்துக் கெஞ்சுவார்.

மக்களே, என் நெலமையும் கிட்டதட்ட அதே மாதிரிதான். ஏதாவது பெயர் தெரியாத வைரஸ் இருந்தா சொல்லுங்க,எனக்கு உதவியாக இருக்கும். என்னடா இது, சார்லஸ்டனுக்கு வந்த சோதனை? என் பதிவிற்கு பதில் போட ஒருவரும்இல்லையா என பாலைய்யா குரலில் நீங்கள் சொல்வது கேட்கிறது. நம்ம குருசாமி இன்பமும், என் வீட்டுக்காரரும்சேர்ந்து, பலமா யோசிக்கிறதா ஆத்தக் கடந்து செய்தி வேகமா வந்தது.

அடுத்த போன் எங்க வீட்டுக்காரரிடமிருந்து வருவதற்குள் நான் என் தலைப்புக்குள்(மின்னி மின்னி ) போகிறேன்.அதயும் படிங்க.

-பனையோலை.


மின்னி மின்னி விண்மீனே….

மின்னி மின்னி விண்மீனே,

உன்னைக் கண்டு வியந்தேனே...

சார்லஸ்டன் பொது நூலகத்தின் வாயிலருகேயுள்ள அரங்கைக் கடந்து செல்லும் பிற மொழிப் பிரிவினரையும் நின்றுகேட்க வைக்கும் மனதை வருடும் பாடல் இது. தென்றலாய் நம் காதுகளைத் தழுவிய மெல்லிய இசைக்குயில்கள்வேறு யாருமல்ல, எங்கள் பனை நிலத் தமிழ்ப் பள்ளிக்குழந்தைகள்தான். இவர்களைப் பற்றி அனைவரும் அறியவேஇப்பதிவு.

புலம் பெயர் நாடுகளில் வளரும் குழந்தைகளுக்கு சமூக மொழியாக ஆங்கிலம் இருப்பதால், தமிழைப் பேச,எழுதக் கற்றுக் கொடுப்பது, ஒவ்வொரு பெற்றோரின் மிக முக்கியமான கடைமைகளுள் ஒன்றாகும். மொழியை இழந்தசமூகம், ஒரு அழிந்த இனமாகிவிடுவதால், அத்தகைய நிலை நம் அடுத்த தலைமுறைக்கு நேராமல் காக்கதமிழ்ப்பள்ளிகள் இங்கு மிக மிக அவசியமான ஒன்று.

இவ்வாறான பல உயரிய நோக்கங்களுடன் சென்ற வருட ஆரம்பத்தில் துவங்கப்பட்ட பள்ளிதான் எங்கள் பனைநிலத் தமிழ்ப் பள்ளி. எங்களுக்கும் ஆரம்பத்தில் குழந்தைகளின் தமிழார்வம் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தது.ஆனால் அவர்களின் ஆர்வத்திற்கும், கேள்விகளுக்கும் ஈடுகொடுக்க தற்போது பெற்றோர்கள் நிறைய வீட்டுப்பாடங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

நம்மூர் பள்ளிகளைப் போலல்லாமல், குறைந்த அளவே மாணவர்கள் இருப்பதால், பல வயதுக் குழந்தைகள்அடங்கிய ஒரே வகுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றரை மணி நேரத் தமிழ்வகுப்பும், அரைமணி நேரத் தமிழ் பாடல் வகுப்பும் நடைபெறுகிறது. பெற்றோர்களே, தன்னார்வல ஆசிரியர்களாகி வகுப்புகள்நடத்திவருகிறோம். ஓய்விற்காக, இங்குள்ள தனது பேரக்குழந்தைகளுடன் நாட்களைச் செலவிட வந்துள்ள திரு.சண்முகராஜன், அய்யா அவர்கள், தானும் முன்வந்து பாடங்கள் சொல்லிக் கொடுத்துவருகிறார்.

எங்கள் கோடை விழா மற்றும் பொங்கல் விழாக்களில் இப்பள்ளிக் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் ஒரு முக்கியஅங்கமாகும். இக்குழந்தைகளின் மழலைத் தமிழ் கேட்போரின் மனதைக் கொள்ளை கொண்டுவிடுகிறது. இதன்அடுத்தக் கட்டமாக, கடந்த இருவருடங்களாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டு நிகழ்ச்சிகளில்பங்கேற்று வருகின்றனர். சென்ற வருட விழாவில் பல பரிசுகளைப் பெற்று எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பல்வேறு ஊடகங்கள் வாயிலாக இவர்கள் தமிழ் பயின்று எங்களை மகிழ்வித்து வருகின்றனர். தஞ்சைத் தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து, தேர்வெழுதி சான்றிதழ் பெற வைப்பது எங்கள் தமிழ்ப் பள்ளியின்எதிர்காலத் திட்டமாகும்.

இவர்களுக்காகப் பெற்றோர்களும், நிறைய ஆங்கிலப் பாடல்கள் மற்றும் புத்தகங்களைத் தமிழ்படுத்தி வருகிறோம்.

உலகின் மேலே உயர்வானில்

வைரம் போலே மின்னுகிறாய்

மின்னி மின்னி...

டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலின் தமிழாக்கமான இந்தப்பாடலை, தங்கள் சிறிய குரல்களைமெதுவாக இழைத்து பாடிக்கொண்டே இவர்கள் இப்பள்ளியில் பயணிக்கிறார்கள்.

எழுதியவர் - பனையோலை.


3 comments:

Anonymous said...

மிக நல்ல பதிவு.

புலம் பெயர்ந்த தமிழர்கள் புலமை வாய்ந்தவர்களாக, தமிழை அடுத்த தலைமுறைக்கு தக்க முறையில் சென்று சேர்ப்பது பாரதி கண்ட கனவினை நனவாக்கும் ஒரு அருமையான முயற்சி.

இந்த இயக்கம் சார்லச்டனிலிருந்து பொங்கி பிராவகமாகி அமெரிக்கக்கண்டத்தின் எட்டுத்திக்கிலும் பரவ வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமையான முயற்சி வாழ்த்துக்கள்.

நன்றி,

Krithika,
Houston - TX.

Anonymous said...

அனானி மற்றும் கிருத்திகா அவர்களின் வருகைக்கு நன்றி.