Tuesday, October 21, 2008

எதை எழுத

நண்பர் பனையேறி என்னிடம் ஒரு நாள் எதாவது எழுது என்றார், சரி எதைப் பற்றி எனக் கேட்டேன், உனக்குத் தெரிந்த சுவையான சம்பவங்கள் அல்லது கற்பனை எது வேண்டுமானாலும் எழுது என்றார்.

உங்களுக்கே தெரியும், நாமெல்லாம் இருக்கின்ற வேலைகளுக்கே நேரமில்லாமல் தவிக்கின்றோம்.அதிலும் நான் ரொம்ப பிசி..காலையில் ஆரம்பித்து ஆராய்ச்சி,கருத்தரங்கம், விளையட்டு, சமையல், வாரக் கடைசியில் வரும், பிறந்த நாள் விழாக்கள், அதிர்ஷ்ட்டப் பானை விருந்து, கடைகளுக்குச் சென்று வருதல் என ஒரே வேலை மயம் இருந்தாலும் நான் யோசித்துக்கொண்டேதான் இருந்தேன் எதை எழுத என்று.

இவ்வளவு வேலைகளுக்கிடையில், என்னால் ஒரு நாள் கூட "பியானோ" வாசிக்காமல் இருக்கவே முடியாது, இல்லையெனில் தூக்கமே வராது. ஒரு நாள் அப்படித்தான், லேசான மழை, கதவைத் திறந்தால் சிலீரென்று காற்று முகத்தில் அறைந்தது, மகிழ்ச்சியான மாலைப் பொழுது. என்ன செய்யலாம் என் யோசித்தேன்..ஒருகையில் சூடான தேனீரும் மறுகையால் பியானோவும் வாசிக்கத் தொடங்கினேன்..ரம்யமான இனிமையான இந்த இசை அப்படியே தென்றலில் கலந்து என்னை மெய்மறக்கச் செய்தது..

வெளியில் லேசான சலசலப்பு...என்னடா இது நம் இசைக்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று நினைத்தவாறு வெளியே எட்டிப் பார்த்தேன்..ஒரு பெரிய கூட்டம், நம் இசைக்கு இவ்வளவு ரசிகர்களா என வியந்து, அவர்களை உள்ளே வந்து ரசிக்குமாறு சொன்னேன்.. அதில் ஒருவர் என்னை நன்றாக முறைத்துப் பார்த்துவிட்டு, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா...என்ன இது..எங்களை எல்லாம் நிம்மதியாக இருக்கவிடமாட்டாயா..என்றார்..

ஒரு இசைக் கலைஞனுக்கு இப்படியெல்லாம் சோதனை வரத்தான் செய்யும்..நாம் மனம் தளரக்கூடாது என்று கதவை தாழிட்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன்...சில நொடிகள்தான் வாசித்திருப்பேன்..என் அறை நண்பன் என்னிடம் வந்து நான் வேறு அறை பார்த்துக்கொள்ளவா அல்லது நீங்கள் பார்த்துக்கொள்கிறீர்களா என்றான்.. அப்போது நான் இளையராஜாவை நினைத்துக் கொண்டேன்..நீங்கள் முதன் முதலில் பாடல் பதிவு செய்யும் போது 13 முறை மின்சாரம் நின்று போனது..ஆனாலும் மனம் தளரவில்லை நீங்கள்.. சரி மனம் இருந்தால் மார்க்கம் உண்டல்லவா..

என் அறை நண்பன் ஆய்வகத்திற்கு சென்று இரவில் தாமதமாகத்தான் வருவான்..அவன் இல்லாத சமயங்களில் வாசிக்க ஆரம்பித்துவிடுவேன்..ஆனால் இம்முறை கதவை நன்றாக தாழிட்டுவிட்டு வாசிப்பேன்.. சில சமயம் என் விரல்கள் என்னையும் அறியாமல் ஆட ஆரம்பித்துவிடும்..அப்போது என் அறை நண்பனை ஆய்வகத்துக்கு செல்லவில்லையா..நீ என்பேன்..அவன் என்னை முறைத்துவிட்டு இப்போதுதானே அங்கிருந்து வந்தேன் என்பான்..நானும் அவனை எப்படியாவது எங்காவது வெளியே அனுப்ப முயற்சி செய்ய..நானெல்லாம் ஆராய்ச்சி செய்யும் போது ஆய்வகத்தை தவிர என்னை வெறெங்கும்…. என்று ஆரம்பிப்பேன்.. அவன் உடனே எனக்கு தூக்கம் வருகிறது என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று போய் படுத்துக்கொள்வான்... ஒரு கலைஞனுக்கு எப்படியெல்லாம் இடர் பாருங்கள்...ஒருமுறை, இதைக்கூட எழுதலாமா என யோசித்தேன், ஆனால் எப்படி எழுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

"யானி" இந்தியாவிற்கு வந்தபோது பார்க்க விருப்பபட்டது இரண்டே இரண்டுதான், ஒன்று தாஜ்மகால், அவர் "பியானோ "வாசித்த இடம், இன்னொன்று நான், நான் பியானோ வாசித்தவிதம்.. லண்டன் ட்ரினிட்டி அகாதமியில், நானும், யானியும் ஒரே நேரதித்தில் இசை பயின்றோம். மேலும் ராயல் ஃபில்ஹார்மோனிக் அகாதமியில் பீத்தோவானின் "கோப்ரா" சிம்பொனி இசைக்குப் பின், நாங்கள் அங்கே சிம்பொனி இசைத்தோம் என்றால் நீங்கள் நம்ப வாய்ப்பில்லை...எனவே என்னால் இதையும் எழுத முடியவில்லை..

கல்லூரிப் பருவம் என்பது அனேகமாக அனைவருக்குமே வாழ்க்கையின் மிக இனிமையான நாட்களாக இருந்திருக்கும். அப்போது நடந்த சில சம்பவங்கள், நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். நம்மால் ஏதாவது தமிழுக்கு, அதன் வளர்ச்சிக்கு செய்யவேண்டுமே என்று தனியாத ஆசை எனக்கு, சரி என்று நேராக கடைக்குச் சென்றேன், நிறைய காகிதங்கள், எழுது கோல், என பை நிறைய வாங்கி வந்தேன். விடுதிக்குள் நுழைந்தவுடன் சோ ....வென மழை, மின்னல், இடி என மாறி மாறி அடித்தது. நண்பர்களிடம் சொல்லிவிட்டேன் என்னை யாரும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாதென்று. கதவை தாழிட்டேன், சன்னல்களை இழுத்து மூடினேன், பின் நாற்காலியில் உட்கார்ந்து ஆரம்பிதேன் எழுத..ஒரு காவியத்தை படைத்துவிட்டுத்தான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வெண்டும் என ஆரம்பித்து எழுத ஆரம்பித்துவிட்டேன்...இடையில் நாம் வாங்கி வந்த காகிதங்கள் போதாதோ என்று எண்ணியபடியே விடாமல் எழுதித்தள்ளினேன்..

திடீரென எனக்கு ஒரு இடைஞ்சல், யாரோ என் அறைக் கதவை நாகரிகமாகத் தட்டுகிறார்கள்...நம் நண்பர்களுக்கு நாம் தான் ஏற்கனவே தொந்தரவு செய்யாதீர்கள் என சொல்லிவிட்டேனே ..மறுபடியும் யார் இது என்ற சிந்தனையுடனே எழுந்து வந்து கதவை மெல்ல திறந்தேன்...ஆ..என்ன ஆச்சரியம் என் கண்களை என்னாலே நம்பமுடியவில்லை..வெளியில் கம்பன், பாரதி, வள்ளுவன், ஒளவையார், மற்றும் இளங்கோவன் எல்லோரும் வாசலில் நின்றிருந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்தேன். முன்னெச்சரிக்கையாக ஒளவையாரின் ஊன்றுகோலை முதலில் வாங்கி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அவரை கைத்தாங்கலாக அமரவைத்தேன்..

யார் முதலில் பேச்சை துவங்குவது .... சிறிய மெளன இடைவெளி...எனக்கு இவர்களைப் பார்த்த பரவசத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை, ஆனால் பாரதி மட்டும் முகத்தை மிக கோபமாக வைத்துக்கொண்டிருந்தார்..வள்ளுவரோ தாடியை லேசாக நீவியபடி "என்ன இதெல்லாம்" என்பது போல் பார்த்தார்.

சரி எதுவானாலும் வந்தவர்களை முதலில் உபசரிப்போம், பிறகு பேசிக்கொள்வோம்,என நினைத்து விடுதியிலிருந்து கொஞ்சம் மோர் வாங்கி வந்து அனைவருக்கும் தந்தேன்.. மோரைக் குடித்த பாரதி என்னை பார்த்தார், பார்வையில் கோபம் சற்று தணிந்திருந்தது..நானும் ஒருவழியாக தைரியத்தை வரவைத்துக்கொண்டு இன்னும் மோர் வேண்டுமா என்றேன்.. உடனே பாரதி..

"யாம் பருகிய மோரினிலே இது போல் இனிதாவது எங்கும் காணேன்"

என்றார். நான் இன்னும் சிறிது மோர் கொடுத்தேன் அதையும் குடித்துவிட்டு..

"பாருக்குள்ளே நல்ல மோரு நீ தந்த இந்த மோரு என்றார்"...

அப்பாடா நிம்மதி. வள்ளுவர் மோர் குடித்துக்கொன்டிருக்கும் போது வாயில் எதும் சிக்கியிருக்க வேண்டும் போல்..அதை உடனே கீழே துப்பி விட்டு...

"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு.

துப்பாய தூவும் மழை" என்றார்...

சரி தாங்கள் வந்ததின் நோக்கம் என்ன என்றேன்... பாரதி கோபம் கொண்டு நீ எதோ எழுதுகிறாயாமே...கேள்விப்பட்டு வந்தோம் என்றார்..ஆம் என்றேன்...முதலில் அதை நிறுத்து என்றார்.

கம்பனோ..ஏன் எங்கள் புகழ் இந்த பூமியில் நிலைத்திருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா எனக்கேட்டார்.

என் பெயர், புகழ் இந்த உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்திருக்கிறது ஆனால் அதை நீ இரண்டே நாளில் அழித்து விடுவாய் போலிருக்கிறதே.. எங்கள் புகழ் நிலைதிருக்க வேண்டுமென்றால், தமிழும், தமிழ் மக்களும் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமென்றால் இப்போதே நிறுத்து என்றார் வள்ளுவர்..... சரி நம்மை இவ்வளவு தூரம் கேட்கிறார்களே என எண்ணி தமிழில் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி, அவர்களை வழி அனுப்பி வைத்தேன்..

இதை எனக்கு வந்த சோதனையாகக் கருதாமல் தமிழுக்கு வந்ததாக நினைத்து வருந்தினேன்.. ஆங்கிலத்திலும் நல்ல புலமை எனக்கு எடுத்தேன்...எழுதினேன் ..எழுதிக்கொண்டே இருந்தேன்...வெளியே "பூட்ஸ்" காலணிகளின் சத்தம்...என்.சி.சி.மாணவர்கள்தான் நடைப் பயிற்சி செய்கிறார்கள் என்று நினைத்து கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்தேன்...

ஆங்கிலத்தில்" உள்ளே வரலாமா" என்றொரு குரல்...நானும் எழுதிக்கொண்டே திரும்பிக்கூட பார்க்காமல்..ஆம்" என்றேன் அதே ஆங்கிலத்தில். பார்த்தால் ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்ட்டாய், ஷெல்லி, சர்ச்சில் மேலும் பலரும் "கோட்- சூட்" அணிந்து கம்பீரமாக நின்றனர்..அவர்களை அமர வைத்து தேனீரும் ரொட்டியும் கொடுத்தேன்...

அவர்களின் நோக்கம் என்னை எப்படியாவது எழுதாமல் தடுப்பதுதான் என்று எனக்குத் தெரிந்தாலும்...தங்களின் வருகைக்கான காரணம் என்ன என்றேன்....

தம்பி தயவுசெய்து எழுதுவதை நிறுத்து என்றார்கள் ஒரே குரலில்....கெஞ்சினார்கள்....நான் விடுவதாக இல்லை..."எழுதுவது எனது பிறப்புரிமை..அதை எழுதியேதீருவேன்" என நானும் என் பங்குக்கு வாதடினேன்..கடைசியில் என்னை ஒருவழியாக சமாதானம் செய்து என் கைகளை கட்டிப் போட்டுவிட்டனர்...சரி என் போன்ற எழுத்தாளனுக்கு மொழி ஒரு தடையே இல்லை, கிரேக்க, லத்தீன் மொழிகளில் எழுதலாமா என தீவிரமாக யோசிக்கத்தொடங்கினேன்...மறுபடியும் என் அறைக் கதவு பலமாகத் தட்டப்படுகிறது.....

எழுந்தேன்.... என்னை உலுக்கி என்னடா 10 மணி வரைக்கும் தூங்குகிறாய் என்றான் நண்பன்.. ஓ....அதுவா.. இது என்று தூக்கம் கலைத்தேன்....

ஒரு முறை இதைக் கூட எழுதலாமா என யோசித்தேன்....ஆனாலும் எதாவது எழுத வேண்டுமே.... எதை எழுத...

"நீ எதுவுமே எழுத வேண்டாம்" எழுதாமல் இருந்தாலே தமிழ் வாழும் என்று நீங்கள் சொல்வது என் காதுகளுக்கு கேட்கிறது...

-எழுதியவர் - சிவபாரதி