Sunday, February 8, 2009

சார்லச்டன் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா 2009

இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.

நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றிணைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை அனுபவிக்கிற, தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது. இந்த புத்தாண்டில, தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, பொங்கி வரும் பொங்கலை இயற்கைக்கு படையலிட்டு ஒரு பொங்கல் திருவிழாவாக கொண்டாட ஆரம்பிச்சு, அது தமிழ்சமுதாயத்தின் ஒரு பண்பாட்டு அடையாளமாக அமைஞ்சது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச சேதி.

அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு பார்க்கலாமா ?


இந்த மாதிரியான விழாக்கள்ல ஒரு சுவராசியமான விசயம் என்னன்னா - விழா அன்னைக்கு வந்து இரசிக்கிற பார்வையாளர்களுக்கு அந்த நாள் மட்டும்தான் திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி தூதுகலமாக பொஙகல் விழாவை எதிர்பார்த்துகிட்டு இருக்கிறது ஒரு சுகமான சுவராசியம்தான் - மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.

பிரபல திரைநட்சத்திரங்களைக்கூட கூட்டமா வேலை வாங்கி சமாளிச்சிடலாம்., ஆனா நம்ம ஆட்கள் இருக்காங்க பாருங்க – அவங்கள சமாளிச்சு, ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு ஒத்திகைக்கு வரவழைக்கிறதே ஒரு தனி கதையாகவே எழுதலாம். ஒரு அஞ்சு பேரு வந்தா மிச்சம் பத்து பேரு வரமாட்டாங்க! மதியம் சாப்பாட்டு நேரத்துக்கு வரச்சொன்னா இரவுச்சாப்பாட்டு நேரம் வரைக்கும் வராம நம்ம பரபரப்ப கிளப்பி விடுவாங்க. ஒத்திகையை பாருங்கன்னா, அசராம உக்காந்து ஊர்க்கதைய பேசி கலகலக்கச் செய்வாங்க. இதையெல்லாம் சமாளிச்சு, சங்கத்தலைவர் சுந்தர்தான் அவரோட அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல கலை நிகழ்ச்சிகள் உருவாகிற மாதிரி பார்த்துக்கிட்டார்.


இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.



ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.


குத்து விளக்கு ஏற்றிய பின்பு தமிழ்த்தாய் பாடப்பட்டது. கணேசு – சுந்தர் அவர்கள் வரவேற்புரை அளித்தனர். முனைவர் தண்டபாணி அவர்கள் சமூகவுரை அதற்கடுத்ததாக இருந்தது. இலங்கையில் போர்முனையில் இறந்த அப்பாவித்தமிழ் மக்களுக்கு சில நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.










விழாவை கீர்த்தி மற்றும் சண்முகம் அழகா தொகுத்து வழங்கினாங்க. பார்வையாளர்களுக்கு ஆரம்பத்திலேயே அருமையான நடன விருந்து காத்திருந்தது. சிறுமி இனியாவின் நாட்டியம் இருந்தது – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.



அடுத்ததா சார்லச்டன் தமிழ் சிறுவர் பள்ளி மாணவர்கள் அமிர்தா, ஆகாச், அசுரிதா, சிபி, மாசிலன் வழங்கிய திருக்குறள் பாடல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றது. சிறுவர்கள் சிறுவரி தவறாமல் குறள் பாடி மகிழ்வித்தனர்.



குழந்தைகளுக்கான இணையத் தளங்களை முனைவர் ஹரிநாத் அருமையாக தொகுத்து விளக்கிக்காட்டினார்.




நிகழ்ச்சியில அடுத்தது தனித்துவமான ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க நம்ம சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் அவங்க. குறிப்பா, மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களையும் நாட்டிய வடிவில் நடிச்சு காட்டிகிட்டிருந்தாங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிச்சது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா, குமரன் மற்றும் பத்மனாபன் நண்பர்கள். மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்த்து பார்வையாளர்கள் மனசு கலங்கிடுச்சு.






சென்னையிலிருந்து சார்லச்டன் வரை – இது நாடகத்தலைப்பு, நடிச்சவங்க சண்முகம், அமிர்தா, சந்தோசு, குமரன், மாரிமுத்து அய்யா மற்றும் லாவண்யா. புதிதா அமெரிக்கா வந்து கலாச்சார குழப்பத்திலிருக்கிற நபர்களைப் பற்றிய நாடகம் அருமையாக இருந்தது.



கும்மி நடனம் அடுத்து வருதுன்னு அறிவிப்பாளர் சொல்ல எங்களுக்கெல்லாம் ஒரே ஆர்வம் எப்படி இருக்கும்ன்றத பார்க்க, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு கும்மியடிச்சு நடனம் ஆட வந்திருந்தாங்க. பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் - நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல். இதப்பாத்து நம்ம மனசு ரெம்ப நேரமா கும்மியடிச்சுகிட்டே இருந்தது.




பொங்கல் விழாவில நடந்த ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்னன்னு கேட்டிங்கன்னா – அது திருக்குறள் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சிதான்.
சார்லச்டன் தமிழ்ச்சங்க நண்பர்கள் குழுவின் ஒரு கனவுத்திட்டம் தான் உலகப்பொதுமறையை இசைவடிவமாக ஓதி தமிழ்சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பிக்கும் ஒரு அரிய முயற்சி. இதற்காக பலமாதங்களாக பாடுபட்டு இசைவடிவமாக கொண்டு வந்து சாதனை பண்ணி இருப்பது பெருமையான ஒரு விசயம். இதப்பத்தி எல்லா விபரங்களையும் தனியாகவே சுந்தர் ஒரு பதிவு எழுதியிருக்கார். இசைத்தட்டை முனைவர் தண்டபாணி, முனைவர் சீனிவாசனுடைய அப்பா திரு. சண்முகராசனிடமும், முனைவர் சிவக்குமார் திரு. மாரிமுத்துவிடமும் அளித்தனர்.



அடுத்து, இப்படி இருந்தா எப்படி ஒரு நாடகம். வாழ்க்கையில அதிகாரவர்க்கத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சாமானியர்கள்கிட்ட அதிகாரம் சென்று சேர்ந்து, அதிகாரிகள் அவர்களுக்காக சேவை செய்யத்துடிக்கும் நிலமை இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை நாடகம். நம்ம நண்பர்கள் யுவராசு - செந்தில் எழுதி கவுசிக், விக்னெசு, சந்தோசு, பத்மனாபன், குமரன், சிவா மற்றும் உதய் நடித்திருந்தது அருமையான நாடகம். சாமானிய மக்களிடம் அதிகாரிகள் படும் விசித்திரமான கற்பனை உலகத்தை உருவாக்கிக் காட்டியிருந்தது சுவையாகவும் மற்றும் சுவராசியமாகவும் இருந்தது.




நவீன திருவிளையாடல் நாடகத்தில் அந்தக்கதாபாத்திரங்களை இக்காலத்தைய சூழலில் வைத்து கற்பனை கலந்த ஒரு சுவராசியமான நாடகமாக்கி நடித்திருந்தனர். தேவர்கள் மடிக்கணினிய்டன் நவீன சொரூபமாக காட்சியளித்தது பார்ப்போர் கவனத்தை கவர்வதாக அமைந்திருந்தது.




தமிழுணர்வுப்பாடல்களை திரு. அண்ணாமலையும், மாட்டுக்காரவேலா-ன்ற பாடலை சுபத்ராவோட அப்பா திரு. மாரிமுத்தும், முகுந்தா முகுந்தா பாடலை திருமதி. ஜோ-வும் அருமையாக பாடினாங்க.

அகா இது என்ன கலாட்டா?, யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து? “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”. அப்படிப்போடு! உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால இளமை ததும்பும் இந்த நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம் - பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.






இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு உதய் மற்றும் பத்மனாபன் நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது.





தமிழ்மொழி வணக்கப் பாடல் பாடி நிகழ்ச்சி இனிதாக முடிந்தது. அடுத்து என்ன எல்லாரும் வீட்டுக்கும் கிளம்புவாங்கன்னு பார்க்கிறீங்களா. அதான் இல்ல.

கொஞ்சமா நஞ்சமா…பலப்பல விதங்கள், பலசுவை உணவுப்பதார்த்தங்கள். ஒவ்வொரு குடும்பமும் சரிக்கு சரியா அட்டகாசமா தயார் பண்ணி எடுத்து படையலிட்டு இருந்தாங்க. பந்திக்குள்ளே புகுந்து விளையாடலாம்னு முத வரிசையில நிக்கிறத என் வீட்டுக்காரம்மா பாத்துட்டு "சாப்பாடு எங்கயும் பறந்து போயிறாது! கொஞ்சம் பொறுமையாவே எனக்குப் பிறகு சாப்பிடுங்கன்னு 'பாசத்தோடு' சொல்லிட்டு அவங்க சாப்பாட்டு கச்சேரிய ஆரம்பிச்சுட்டாங்க. ஆகா சங்ககாலத் தமிழ் பொண்ணுகளும் இப்படித்தானா ? இல்ல இப்பத்தான் ஆம்பளைங்க கதி இப்பிடி ஆயிடுச்சா? இதைத்தான் பரிணாம வளர்ச்சியின் பக்க விளைவுன்னு சொல்லுறாங்களோ ? உணவுப்பந்தி முடிந்த பின்பும் பிரிய மனசில்லாம மக்கள் கொஞ்சம் கதையடிசுக்கிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் திருக்குறள் இசைத்தட்டு பரபரப்பா விற்பனை ஆகிட்டு இருந்தது.




விழா முடிஞ்சு வீட்டுக்கு திரும்பி வந்து கிட்டிருக்கோம், வழியில ரெண்டு பக்கமும் கூப்பர் நதி பரவிக்கிடக்குது. நதியோரத்தில இருபக்கங்களிலும் இந்த அமெரிக்க சமுதாயத்தின் வளர்ச்சிகள், எழுச்சிகள் மற்றும் அதன் அடையாளங்களைப் பார்க்கிறப்ப மனுச சமுதாயத்தில ஆற்றுவெளி அள்ளித்தந்த அரிய பங்களிப்பு மனசில மெலிசா நிறையுது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே நம்ம தமிழ்ச்சமுதாயம் உலகத்திலிருக்கிற மற்ற சமுதாயங்களுக்கு முன்னரே பல பண்பாட்டு முறைகளை கலாச்சார நிகழ்வுகளை தொடங்கி பெருமை சேர்த்திருக்காங்கன்னு நினைக்கிறப்ப
எங்க மனசு நிறைஞ்சிறுச்சு.

இத்தனை அருமையான நிகழ்ச்சிகளை அள்ளித்தந்த சார்லச்டன் தமிழ்த்திருநாள் கண்டு களிச்ச எங்க மனசுக்குள்ளேயும் தூதுகலமாகப் வழிஞ்சது பொங்கி பொங்கலோ பொங்கல் !

வாழ்க தமிழ் ! வளமுடன் வளர்க தமிழ்ப் பண்பாடு!! நீடூடி வாழ்க தமிழ் சமுதாயம்!!


* செந்தில்-வினு *

--------------------

(இங்குள்ள அருமையான் படங்கள் அளித்து உதவியவர் – முனைவர் கண்ணன் )

--------------------

4 comments:

Anonymous said...

Ayya,
Arumayyana pathivu, nandraga elluthi ullier, nalla visayam , pictures nalla iruku
Vazhaga Vallamudan
Anbu Nanban

காயத்ரி said...

மிகவும் அருமையான அழகான ஒரு பதிவு! எழுதியிருக்கும் விதம் அருமையிலும் அருமை!( ரொம்ப அழகா எழுதியிருக்கே செந்தில்!)

தமிழர் திருநாளை கொண்டாட அனைவரும் சேர்ந்து முயற்சித்தது பாராட்டிற்குரியது என்றால் இன்றைய காலக்கட்டத்தில் திருக்குறளை மக்களிடம் சேர்க்க நீங்கள் எடுத்துவரும் கடின முயற்சி மிகவும் பெருமைக்குரியது! தங்கள் தமிழ்ப்பணி இனிதே தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! திரு சுந்தர் அவர்களுக்கு என் ( சிறப்பு)நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்....அதீத முயற்சிகள் எடுத்திருக்கிறார்!

சிறுமையர் திருக்குறள் பாடியதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!

அதன் ஒளிப்பதிவு ஆர்குட் தளத்தில் இல்லையே? கேட்கவேண்டும்போல் ஆவலாக இருக்கிறது......( யூ ட்யூபிலும் இல்லையென்று நினைக்கிறேன்....)

அதை பதிவு செய்வீர்களா?


மன்னிக்கவும் செந்தில்....மீனவர் நாட்டிய நாடகத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை.....பார்த்துவிட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன்....கண்டிப்பாக சிறப்பாகத்தான் இருக்கும்!


புகைப்படங்கள் அனைத்தும் அருமை! அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Anonymous said...

மனதைச் சிலவிடங்களில் நெகிழ வைத்துவிட்டது இந்த எழுத்து. அழகிய படங்கள். இந்தக் கொண்டாட்டமும், கூட்டமும் தமிழ்ச் சமூகம் மீண்டும் எழுச்சியடைய உதவும். நம்முடைய ஒன்றுபட்ட முயற்சிகள் என்றும் வெல்லட்டும்!
பதிவுக்கு நன்றி செந்தில்-வினு!
அன்புடன்
பனையேறி